கோவை போத்தனூர் -கரூர் இடையே தனி ரயில் பாதை.. காங்கேயம்,வெள்ளக்கோவில் வழியாக அமைக்க பயணிகள் கோரிக்கை
கோவை: கோவை போத்தனூரில் இருந்து காங்கேயம், வெள்ளக் கோவில் வழியாக கரூருக்கு தனி ரயில் பாதை அமைக்க வேண்டும் என்று பயணிகள் சங்கம் வலியுறுத்தி உள்ளது. போத்தனூர் செட்டிபாளையத்தில் இருந்து பல்லடம், காங்கேயம், வெள்ளக்கோவில் வழியாக கரூருக்கு புதிதாக தனி ரயில் பாதை அமைந்தால் பயணிகளுக்கு மட்டுமின்றி அந்த பகுதியில் உள்ள பஞ்சாலை, மாடு-கோழி தீவனம் மற்றும் விவசாய பொருட்கள் உற்பத்தி செய்து வணிகம் செய்யும் வியாபாரிகளுக்கு உதவியாக இருக்கும் என கூறியுள்ளது.
கோவை போத்தனூர் ரயில் பயணிகள் சங்க செயலாளர் சுப்பிரமணியன் சேலம் ரயில்வே கோட்ட மேலாளரிடம் கோரிக்கை மனு அளித்து உள்ளார். அதில் கூறப்பட்டிருப்பதாவது: "மத்திய ரயில்வே பல்வேறு புதிய திட்டங்களை அறிவித்து புதிய வழித்தடங்களையும் உருவாக்கி வருகிறது. அதிலும் குறிப்பாக ஈரோடு, பழனி, மதுரை, தூத்துக்குடி போன்ற வழித்தடங்களை ஆய்வு செய்து அங்கு தற்போது பணிகள் தொடங்கும் நிலையில் உள்ளன.

எங்களின் சங்கம் ரயில் பயணிகள், வியாபாரிகள், விவசாயிகளுக்கான தேவைகளை கண்டறிந்து அவர்களுக்காக செயல்பட்டு வருகிறோம். இந்த அடிப்படையில் எங்கள் சங்கம் ஆய்வுசெய்து, போத்தனூரில் இருந்து பல்லடம், காங்கேயம், வெள்ளக்கோவில் வழியாக கரூர் சென்றடையும் ஒரு புதிய வழித்தடத்தை கண்டறிந்து உள்ளோம்.
ஏற்கனவே போத்தனூர் செட்டிபாளையம் ரயில் பாதை உள்ளது. இது பொள்ளாச்சிக்கு செல்லும் பாதை ஆகும். செட்டிபாளையத்தில் இருந்து பல்லடம், காங்கேயம், வெள்ளக்கோவில் வழியாக கரூருக்கு புதிதாக தனி ரயில் பாதை அமைக்க வேண்டும். இது அந்த பகுதிகளில் வசிக்கும் பொதுமக்களுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும். இந்த ரயில் பாதை அமைந்தால் பயணிகளுக்கு மட்டுமின்றி அந்த பகுதியில் உள்ள பஞ்சாலை, மாடு-கோழி தீவனம் மற்றும் விவசாய பொருட்கள் உற்பத்தி செய்து வணிகம் செய்யும் வியாபாரிகளுக்கு உதவியாக இருக்கும். உற்பத்தி பொருட்களை ஓரிடத்தில் இருந்து மற்றொரு இடத்திற்குக்கொண்டு செல்வதற்கு, ரயில் சரக்கு பெட்டிகள் பயனுள்ளதாக இருக்கும். அத்துடன் ரயில்வே துறைக்கு மிகப்பெரிய அளவில் வருமானம் கிடைக்கும்.
மேலும் பன்னாட்டு நிறுவனங்களின் சரக்கு சேமிப்பு கிடங்கு செட்டிபாளையம் பகுதியில் தான் உள்ளது. இந்த பாதை அமையும் பட்சத்தில், அவர்களுக்கும் உதவியாக இருக்கும். தமிழக அரசு செட்டிபாளையம் சாலையில் ஒருங்கிணைந்த பஸ் நிலையத்தை உருவாக்க முயற்சிந்து வருகிறது. அந்த பஸ் நிலையம் போத்தனூரில் இருந்து சுமார் 2 கி.மீட்டர் தொலைவில் அமைய உள்ளது.
இதன் காரணமாக மேற்கண்ட வழித்தடத்தில் ரயில்பாதை அமைந்தால் தென்னக ரயில்வேக்கு அதிக பலன்கள் கிடைக்கும். இதுதவிர தண்டவாள பாதை அமைக்க நிலங்களை கையகப்படுத்துவதில் சிக்கல்கள் இருக்காது. சேலம் ரயில்வே கோட்டம் இந்த கோரிக்கையை பரிசீலனைக்கு எடுத்து கொண்டு பல்லடம், காங்கேயம், வெள்ளக்கோவில் மக்கள் பயனடையும் வகையில் இந்த திட்டத்தை பரிந்துரை செய்ய வேண்டும்" இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.












Click it and Unblock the Notifications