ஃபேஸ்புக்கில் போட்டோ போட்ட மாணவி.. துடிதுடிக்க கத்தியால் குத்திக் கொலை செய்த இளைஞர்
கோவை: கோவை மாவட்டம், பொள்ளாச்சி அருகே ஒருதலைபட்சமாக மாணவி ஒருவரை காதலித்து வந்த இளைஞர், மாணவி ஃபேஸ்புக்கில் போட்டோ பதிவிட்டதால் ஆத்திரமடைந்து அவரது வீடு புகுந்து கத்தியால் குத்திக் கொலை செய்துள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கொலை செய்த அந்த இளைஞர் காவல் நிலையத்தில் சரணடைந்துள்ளார்.
கோவை மாவட்டம், பொள்ளாச்சி, வடுகபாளையத்தில் உள்ள பொன்மலை நகர் பகுதியைச் சேர்ந்தவர் கண்ணன். இவருக்கு இரண்டு மகள்கள் உள்ளனர். மூத்த மகள் அஸ்விதா கோவை தனியார் கல்லூரியில் இரண்டாம் ஆண்டு படித்து வருகிறார். அதே பகுதியில் தனியார் நிதி நிறுவனத்தில் பணியாற்றி வரும் பிரவீன் என்ற இளைஞரும் தனது குடும்பத்துடன் கடந்த 5 ஆண்டுகளுக்கு முன்பு குடியிருந்து வந்துள்ளார்.

இந்நிலையில், கடந்த ஓராண்டுக்கு முன்பு பிரவீன் குடும்பத்தார் பொள்ளாச்சி - உடுமலை சாலை அருகே குடிபெயர்ந்துள்ளனர். பிரவீன் கல்லூரி மாணவி அஸ்விதாவை ஒருதலைபட்சமாக காதலித்து வந்துள்ளார். அஸ்விதா மலுமிச்சம்பட்டியில் உள்ள தனியார் கல்லூரியில் பிஎஸ்சி கம்ப்யூட்டர் சயின்ஸ் படித்து வந்துள்ளார்.
இந்நிலையில், மாணவி தனது முகநூலில் தனது நண்பர்களுடன் இருக்கும் புகைப்படத்தை பதிவு செய்துள்ளார். இதனால், ஆத்திரமடைந்த பிரவீன் கல்லூரி மாணவியிடம் சண்டை போட்டுள்ளார். ஒருகட்டத்தில் இருவருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இதையடுத்து, பிரவீன் மாணவியின் வீட்டிற்கு நேரடியாகச் சென்று அவரை கத்தியால் சரமாரியாகக் குத்தியுள்ளார்.
இதில் பலத்த காயமடைந்த மாணவி அங்கேயே மயக்கமடைந்துள்ளார். இதைப் பார்த்த அக்கம்பக்கத்தினர் மாணவியை மீட்டு பொள்ளாச்சி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால், மாணவியைப் பரிசோதனை செய்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்துள்ளனர். மாணவியின் உடல் பொள்ளாச்சி அரசு மருத்துவமனையில் பிரேதப் பரிசோதனைக்காக வைக்கப்பட்டுள்ளது.
இந்த கொலை குறித்து ஏஎஸ்பி சிருஷ்டி சிங் தலைமையிலான போலீஸார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்நிலையில், நிதி நிறுவன ஊழியரான பிரவீன் மேற்கு காவல் நிலையத்தில் சரணடைந்துள்ளார். கல்லூரி மாணவி சரமாரியாக கத்தியால் குத்திக் கொலை செய்யப்பட்டுள்ள சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.












Click it and Unblock the Notifications