திறந்ததுமே 3 பேரை காவு வாங்கிய ஜி.டி. நாயுடு மேம்பாலம்! ஹைஸ்பீடை கண்ட்ரோல் செய்ய புதிய திட்டம்!
கோவை: கோவை அவினாசி சாலையில் உள்ள ஜி.டி. நாயுடு மேம்பாலத்தில் ஏஐ (செயற்கை நுண்ணறிவு) தொழில்நுட்பத்தில் 40 இடங்களில் நவீன கண்காணிப்பு கேமராக்கள் பொருத்த போலீஸார் நடவடிக்கை எடுத்து வருகிறார்கள். இதை ஆட்சியர் பவன்குமார் அறிவித்தார்.
கோவை- அவினாசி சாலையில் நிலவும் போக்குவரத்து நெரிசலை தவிர்க்கும் வகையில் மாநில நெடுஞ்சாலைத் துறை சார்பில் உப்பிலிபாளையம் முதல் கோல்டுவீன்ஸ் வரை 10.10 கிலோ மீட்டர் தூரத்திற்கு கட்டப்பட்ட ஜிடி நாயுடு மேம்பாலம் கடந்த 9ஆம் தேதி முதல்வர் ஸ்டாலினால் திறக்கப்பட்டது.

இந்த மேம்பாலத்தில் 60 கிலோ மீட்டர் வேகத்தில் மட்டுமே வாகனங்கள் செல்ல வேண்டும். மேம்பாலத்தின் இறங்குதளத்தில் 30 கிமீ வேகத்தில் மட்டுமே செல்ல வேண்டும் என போலீஸார் அறிவுறுத்தியுள்ளனர்.
இது தொடர்பாக வாகன ஓட்டிகளுக்கான எச்சரிக்கை பலகைகளும் வைக்கப்பட்டுள்ளன. இதையும் மீறி வாகன ஓட்டிகள் வேகமாக சென்று வருகிறார்கள். கடந்த வாரம் மேம்பாலத்தில் இருந்து அதிவேகமாக வந்த கார் கீழே இறங்கும் போது கட்டுப்பாட்டை இழந்து சாலையில் நிறுத்தியிருந்த லாரி மீது மோதியது.
இந்த விபத்தில் 3 பேர் பலியாகிவிட்டனர். இதையடுத்து மேம்பாலத்தில் 40 இடங்களில் நவீன கண்காணிப்புக் கேமராக்கள் பொருத்த போலீஸார் திட்டமிட்டுள்ளனர். இந்த அறிவிப்பு பலகைளை 100 மீட்டருக்கு முன்பே வாகன ஓட்டிகளுக்கு தெரிவது போல் வைக்க வேண்டும்.
பாலம் அருகே ஆம்புலன்ஸ் வாகனத்தை தயார் நிலையில் வைத்திருக்க வேண்டும். அப்போதுதான் விபத்து ஏற்பட்டால் அவர்களுக்கு சிகிச்சை அளித்து உயிரிழப்பை தடுக்க முடியும்.
இதுகுறித்து கோவை மாவட்ட ஆட்சியர் பவன்குமார் கிரியப்பனவர் கூறுகையில், அவிநாசி சாலை ஜி.டி.நாயுடு மேம்பாலத்தில் இறங்குதளங்களில் ரப்பர் வேகத்தடைகள் அமைக்கப்பட்டுள்ளன. போக்குவரத்து நெரிசலை தவிர்க்க உப்பிலிபாளையம் ரவுண்டானா அருகே சிக்னல்கள் அமைக்கப்பட்டுள்ளன.
மேம்பாலத்தின் மீது பல்வேறு இடங்களில் ஏஐ தொழில்நுட்ப வசதியுடன் கூடிய சிசிடிவி கேமராக்கள் பொருத்தப்படவுள்ளன. இதன் மூலம் அதிக வேகமாக வரும் வாகன ஓட்டிகள், விதிமீறல்களில் ஈடுவோர் கண்காணிக்கப்படுவர். எனவே பாலத்தில் இருந்து வாகனங்கள் இறங்கும், ஏறும் இடங்களில் அறிவிப்புப் பலகைகளை, குறிப்பிட்ட தூரத்துக்கு முன்னரே பொருத்த நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது என ஆட்சியர் தெரிவித்தார்.












Click it and Unblock the Notifications