ஒரே நேரத்தில் கிளம்பிய தவெக நிர்வாகிகள்! கோவை டிராபிக்கில் சிக்கிய ஆம்புலன்ஸ்! உடனே உதவிய காவலர்
கோவை: கடந்த இரண்டு நாட்களாக தவெக பூத் கமிட்டி மாநாடு கோவையில் நடைபெற்றது. இந்த மாநாட்டில் விஜய் பங்கேற்ற நிலையில், தமிழ்நாடு முழுக்க இருந்து தொண்டர்கள் வந்திருந்தனர். இதற்கிடையே மாநாடு முடிந்ததும் நேற்று மாலை அனைவரும் ஒரே நேரத்தில் கிளம்பியதால் அங்கு முக்கிய சாலைகளில் மிகப் பெரியளவில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. அதில் ஆம்புலன்ஸ் ஒன்றும் சிக்கிக் கொண்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
தமிழ்நாட்டில் அடுத்த ஆண்டு தான் சட்டசபைத் தேர்தல் நடைபெறுகிறது. இருப்பினும், இப்போதே தேர்தலை மனதில் வைத்தே அனைத்து அரசியல் கட்சிகளும் தேவையான நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. இதற்கிடையே தவெக சார்பில் கோவையில் பூத் கமிட்டி கூட்டம் நடந்தது. அதில் தவெக தலைவர் விஜய் பங்கேற்றார்.

தவெக பூத் கமிட்டி மாநாடு
இரு நாட்கள் நடந்த இந்த மாநாட்டில் தவெகவினர் பெரியளவில் பங்கேற்றிருந்தனர். தவெக மாநாட்டில் விஜய் இரு நாட்களும் உரையாற்றினார். மேலும், தவெக பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த், ஆதவ் அர்ஜுனா ஆகியோரும் இந்தக் கூட்டத்தில் பங்கேற்றனர். விஜய்யை பார்க்கத் தொண்டர்கள் பெரியளவில் திரண்டதால் தள்ளுமுள்ளும் ஏற்பட்டது. சிறுசிறு சிக்கல்கள் இருந்தாலும் மாநாடு வெகு சிறப்பாக நடந்து முடிந்ததாக தவெகவினர் குறிப்பிட்டனர்.
டிராபிக் நெரிசல்
இதற்கிடையே இன்று மாநாடு முடிந்த பிறகு தவெக நிர்வாகிகள் அனைவரும் ஒரே நேரத்தில் கிளம்பினர். இதனால் கோவையில் பல முக்கிய நகரங்களிலும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. இதனால் கோவையில் பிரதான சாலைகளில் பல கிலோ மீட்டர் தூரம் வாகனங்கள் அணிவகுத்து நின்றன. பல இடங்களில் நள்ளிரவைத் தாண்டியும் டிராபிக் நெரிசல் இருந்தது. போக்குவரத்தைச் சரி செய்யும் பணிகளில் டிராபிக் போலீசார் ஈடுபட்டிருந்தனர். இருப்பினும், டிராபிக் பிரச்சினை சரியாக மேலும் தாமதம் ஆகும் என்றே தெரிகிறது.
ஓடிச் சென்ற போலீசார்
அதேபோல அங்கு ஒரு இடத்தில் கூட்ட நெரிசலில் ஆம்புலன்ஸ் சிக்கிக் கொண்டது.. வாகன நெரிசல் அதிகமாக இருந்ததால் ஆம்புலன்ஸால் நகர முடியாமல் போனது. இதைக் கவனித்த அங்கிருந்த காவலர் ஒருவர், ஆம்புலன்ஸ் செல்ல வழி ஏற்படுத்தினார். பல கிமீ தூரம் ஓடிச் சென்ற அந்தக் காவலர் ஆம்புலன்ஸுக்கு வழி ஏற்படுத்திக் கொடுத்தார். இது தொடர்பான வீடியோ இணையத்தில் வேகமாகப் பரவி வருகிறது.
விஜய்
முன்னதாக பூத் கமிட்டி பேசிய தவெக தலைவர் விஜய், "இந்தக் கூட்டம் வாக்கிற்காக மட்டும் நடத்தப்படும் கூட்டம் இல்லை.. மக்களுக்கு ஒரு நல்லது நடக்கிறது என்றால், எந்த எல்லைக்கும் செல்ல நாங்கள் தயங்க மாட்டோம். நமது ஆட்சி அமையும் போது அது சுத்தமான க்ளீன் அரசாக இருக்கும். அண்ணா சொன்னதை போல மக்களிடம் செல்.. மக்களிடம் இருந்து கற்றுக்கொள்.. மக்களுடன் வாழ், மக்களுடன் சேர்ந்து திட்டமிடு... மக்களை நேசி.. மக்களுக்காகச் சேவை செய்.. அண்ணாவின் இந்தக் கூற்றை மனதில் வைத்துக் கொண்டு செயல்பாடுகள் வெற்றி நமதே! தவெக என்பது வழக்கமான கட்சி இல்லை. அது ஒரு விடுதலை இயக்கம் என்பது மற்றவர்களுக்குத் தெரியும்" என்று விஜய் பேசினார்.












Click it and Unblock the Notifications