அண்ணாமலை சட்டமன்றம் செல்ல வேண்டும்.. அதுவே என் விருப்பம்.. வானதி சீனிவாசன் சொன்ன வார்த்தை!
கோவை: அண்ணாமலை சட்டமன்றம் செல்ல வேண்டும் என்றும், சட்டசபைத் தேர்தலில் போட்டியிட வேண்டும் என்றும் பாஜக எம்எல்ஏ வானதி சீனிவாசன் தெரிவித்துள்ளார். கமல்ஹாசன் கட்சிக்காக உழைத்த தொண்டர்களை கைவிட்டுவிட்டதாக கூறிய வானதி சீனிவாசன், திமுக உடன் கூட்டணி அமைத்து தான்மட்டும் ராஜ்ய சபா எம்பியாகிவிட்டதாகவும் விமர்சித்துள்ளார்.
சட்டசபைத் தேர்தலில் அதிமுக கூட்டணியில் இடம்பெற்றுள்ள பாஜக 27 தொகுதிகளில் போட்டியிடுகிறது. அந்த 27 தொகுதிகள் எது என்பதை நேற்று எடப்பாடி பழனிசாமி அறிவித்தார். அதில் கரூர் மாவட்டம் அரவக்குறிச்சி, பல்லடம், தொண்டாமுத்தூர், கவுண்டம்பாளையம், கோவை தெற்கு உள்ளிட்ட எந்த தொகுதிகளும் ஒதுக்கீடு செய்யப்படவில்லை.

கோவை வடக்கு தொகுதி மட்டுமே பாஜகவுக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டது. அந்த தொகுதியில் வானதி சீனிவாசன் நீண்ட நாட்களாகவே தேர்தல் பணிகளை மேற்கொண்டு வருகிறார். இதனால் இம்முறை அண்ணாமலை சட்டசபைத் தேர்தலில் போட்டியில்லையா என்ற கேள்வி எழுந்துள்ளது. கடந்த சில நாட்களாகவே அண்ணாமலைக்கு சீட் இருக்கிறதா? இல்லையா? என்ற கேள்வி பாஜகவினர் மத்தியில் இருந்து வருகிறது.
அதற்கேற்ப அண்ணாமலைக்கு சாதகமான எந்த தொகுதியும் ஒதுக்கப்படவில்லை. இந்த நிலையில் பாஜக எம்எல்ஏ வானதி சீனிவாசன் செய்தியாளர்களை சந்தித்து பேசுகையில், கூட்டணி என்று வரும் போது நாம் எதிர்பார்த்த தொகுதிகள் கிடைக்காது. கூட்டணியில் இருக்கும் சாதக, பாதகங்கள் இருக்கும். இது கலந்ததே கூட்டணி. பெற்றுள்ள 27 தொகுதிகளில் பாஜக வெல்ல வேண்டும் என்று திட்டமிட்டு பணியாற்றி வருகிறது.
அண்ணாமலை போட்டியில்லையா என்பது குறித்து தெரியாது. ஆனால் அண்ணாமலை சட்டசபைத் தேர்தலில் போட்டியிட வேண்டும் என்பது என் விருப்பம். அவர் சட்டமன்றம் செல்ல வேண்டும். அதுவும் என்னுடைய விருப்பம். அதிமுக சிட்டிங் எம்எல்ஏக்கள் இருக்கும் தொகுதிகள் கூட பாஜகவுக்கு ஒதுக்கப்பட்டுள்ளது. அனைத்து கட்சிகளுக்கும் சில சிரமம் உள்ளது.
நான் தொகுதி மாறுகிறேனா என்பது வேட்பாளர் அறிவிப்புக்கு பின் தெரிய வரும். அதேபோல் கமல்ஹாசன் கட்சித் தொடங்கிய போது, ஆயிரக்கணக்கான தொண்டர்கள் பணத்தை செலவழித்து பணியாற்றினார்கள். அதன்பின் திமுகவுடன் கூட்டணி அமைத்து அவர் மட்டும் ராஜ்ய சபா எம்பியாகிவிட்டார். அவரை நம்பி கட்சியில் பயணித்தவர்களை அம்போ என்று கைவிட்டு சென்றுவிட்டார்.
கமல்ஹாசன் தனது கட்சிக்கு விஸ்வாசமாக இல்லை. தொண்டர்களை கூட காப்பாற்ற முடியவில்லை. எப்படி கட்சி தொடங்கி வீணாகி போவது என்பதற்கு கமல்ஹாசன் ஒரு சாட்சி.. இதனால் புதிதாக கட்சித் தொடங்கியவர்களை மக்கள் ஆய்வு செய்ய இதுவொரு உதாரணம் என்று தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications