ஒருவனுக்கு ஒருத்தின்னு செத்துட்டா பெருமையா இருக்கு! வரதட்சணைக்கு மகளை இழந்தபின் அப்பா திமிர் பேச்சு
சென்னை: என் மகள் ஒருத்தனுக்கு ஒருத்தின்னு செத்துட்டா.. அதை நினைச்சா பெருமையாதான் இருக்கு என்று வரதட்சணையால் தற்கொலை செய்து கொண்ட ரிதன்யா அப்பா அண்ணாதுரை சர்ச்சை பேச்சு பேசி உள்ளார்.
பலர் திருமணம் பிடிக்கவில்லை என்றால் மாற்று வாழ்க்கை அமைக்கிறாங்க. சிலர் அப்படி இல்லை என்று முடிவு எடுக்கிறார்கள். மாற்று வாழ்க்கை அமைக்கிறாங்க, அமைக்கல என்பது அவரவர் விருப்பம். என் பொண்ணு ஒருத்தனுக்கு ஒருத்தின்னு செத்துட்டா. அதை நினைத்து பெருமைப்படுகிறேன். என் பொண்ணை இழந்தால்கூட எனக்கு அது பெருமையாகத்தான் இருக்கிறது.. என்று வரதட்சணை கொடுமையால் தற்கொலை செய்த ரிதன்யா அப்பா அண்ணாதுரை சர்ச்சை பேச்சு பேசி உள்ளார்.
ரிதன்யா தற்கொலை
வரதட்சணை கொடுமையால் தற்கொலை செய்து கொண்ட ரிதன்யாவின் உடல் திருப்பூர் மாவட்டத்தில் உள்ள சாலையில் அவருடைய காரில் கண்டெடுக்கப்பட்டது. அவர் கவின் குமார் (27) என்பவரை திருமணம் செய்து இரண்டு மாதங்களே ஆகியிருந்தன. ரிதன்யாவின் மரணத்திற்குப் பிறகு, அவரது தந்தை ஆர்.ஜி.அண்ணாதுரை (53), சேவூர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். மேலும், அவரது குடும்பத்தினர் அவிநாசி அரசு மருத்துவமனை முன்பு தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். இதையடுத்து கவின், அவரது தந்தை ஈஸ்வரமூர்த்தி (51), தாய் சித்ராதேவி (47) ஆகியோரை காவல்துறையினர் கைது செய்தனர். இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
ரிதன்யாவிற்கும், கவினுக்கும் கடந்த 2025 ஏப்ரல் 11-ம் தேதி திருமணம் நடைபெற்றது. ரிதன்யாவின் பெற்றோர் 300 சவரன் நகை மற்றும் 70 லட்சம் ரூபாய் மதிப்பிலான வால்வோ சொகுசு கார் ஆகியவற்றை வரதட்சணையாக கொடுத்ததாக கூறப்படுகிறது. திருமணமான முதல் இரண்டு வாரங்கள் அமைதியாக இருந்ததாகவும், மூன்றாவது வாரத்தில் இருந்து வாக்குவாதங்கள் தொடங்கியதாகவும் பெண்ணின் அப்பா அண்ணாதுரை தெரிவித்துள்ளார். இதையடுத்து அண்ணாதுரையும், அவரது ரிதன்யா அம்மாவும் தலையிட்டு ரிதன்யாவை வீட்டிற்கு அழைத்து வந்துள்ளனர்.
ரிதன்யா மரணம்
கவின் அவ்வப்போது ரிதன்யாவைப் பார்க்க வந்துள்ளார். 20 நாட்களுக்குப் பிறகு, கவின் அவளை மீண்டும் தன்னுடைய வீட்டிற்கு அழைத்துச் சென்றுள்ளார். ஜூன் 22-ம் தேதி கவின், ரிதன்யாவை அவரது பெற்றோரின் வீட்டிற்கு அழைத்து வந்தபோது, ரிதன்யா சோகமாகவும், மன அமைதி இழந்தும் காணப்பட்டார். அப்போது எங்களுக்குள் எந்த சண்டையும் இல்லை என்றும், நான் எனது பெற்றோர் வீட்டில் தங்க விரும்புவதாகவும் கணவர் கவினிடம் ரிதன்யா கூறி உள்ளார்.

இந்த நிலையில்தான் ஜூன் 28ம் தேதி காலை 9.30 மணியளவில் ரிதன்யா தனது அப்பாவின் காரில் மொண்டிபாளையம் கோவிலுக்கு சென்றுள்ளார். பிற்பகல் 1 மணியளவில் ரிதன்யாவின் தொலைபேசியிலிருந்து அவரது தாய்க்கு ஒரு அழைப்பு வந்தது. அதில் ரிதன்யாவின் கார் சாலையில் கண்டுபிடிக்கப்பட்டதாகவும், அவர் ஓட்டுநர் இருக்கையில் ரிதன்யா மயக்க நிலையில் இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டது. அண்ணாதுரை உடனடியாக சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றுள்ளார். அங்கு அவரது மகள் எந்தவித அசைவும் இன்றி இருந்துள்ளார். உடனடியாக அவர் அவிநாசி அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். ஆனால் அங்கு ரிதன்யா ஏற்கனவே இறந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர்.
கதறிய குடும்பம்
மரணத்திற்கு முன் ரிதன்யா தனது அப்பாவிற்கு அனுப்பிய பல ஆடியோக்கள் இணையம் முழுக்க வைரலாகி வருகின்றன. தனது கணவர் குடும்பத்தினர் தன்னை எப்படி எல்லாம் கொடுமைப்படுத்தினர் என்று ரிதன்யா அனுப்பிய ஆடியோக்கள் பெரிய அளவில் பரபரப்பை ஏற்படுத்தியது. திருமணமான 78வது நாளில் ரிதன்யா, காரில் இருந்த கோலம் எந்த பெற்றோரும் ஏற்கவே முடியாதது.. இதுபற்றி கூறிய ரிதன்யாவின் தந்தை அண்ணாதுரை பாரம்பரியமான குடும்பம் என்று திருமணம் செய்துவைத்தேன். ஆனால் இப்படி செய்துவிட்டார்களே என்று பேட்டி அளித்துள்ளார்.
இந்த நிலையில்தான் ரிதன்யாவின் தந்தை தற்போது அளித்துள்ள புதிய பேட்டி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. அதில், பலர் திருமணம் பிடிக்கவில்லை என்றால் மாற்று வாழ்க்கை அமைக்கிறாங்க. சிலர் அப்படி இல்லை என்று முடிவு எடுக்கிறார்கள். மாற்று வாழ்க்கை அமைக்கிறாங்க, அமைக்கல என்பது அவரவர் விருப்பம். என் பொண்ணு ஒருத்தனுக்கு ஒருத்தின்னு செத்துட்டா. அதை நினைத்து பெருமைப்படுகிறேன். என் பொண்ணை இழந்தால்கூட எனக்கு அது பெருமையாகத்தான் இருக்கிறது.. என்று வரதட்சணை கொடுமையால் தற்கொலை செய்த ரிதன்யா அப்பா அண்ணாதுரை சர்ச்சை பேச்சு பேசி உள்ளார்.












Click it and Unblock the Notifications