நான் யாரு தெரியுமா? போலீஸ் எஸ்ஐ.. பெட்டிக்கடையில் பணம் பறித்த பாஜக நிர்வாகி! காப்பு மாட்டிய போலீசார்
கோவை: கோவையில் காவல் உதவி ஆய்வாளர் எனக் கூறி பெட்டிக்கடையில் ரூ.15,000 பணம் பறித்த பாஜக நிர்வாகி கைது செய்யப்பட்டுள்ளார்.
கோவை கணபதி பகுதியைச் சேர்ந்தவர் பெருமாள். இவர், கடந்த 1997ல் காவல்துறையில் பணிக்குச் சேர்ந்து, 2010ல் டிஸ்மிஸ் ஆகியுள்ளார். தற்போது, கோவை மாநகர பாஜக முன்னாள் ராணுவ பிரிவு துணைத் தலைவராக உள்ளார். இவர் பேரூர் படித்துறை பகுதியில் தான் காவல் உதவி ஆய்வாளர் எனக் கூறி பண வசூலில் ஈடுபட்டுள்ளார்.

பேரூர் படித்துறை அருகே உள்ள டாஸ்மாக் அரசு மதுபான கடை அருகே பெட்டிக்கடை வைத்துள்ள வெற்றிவேல் என்கிற சுரேந்திரன் என்பவரிடம், தான் காவல்துறை எஸ்.ஐ என்றும், குட்கா விற்பதாக வழக்கு பதிவு செய்வேன் என்றும் மிரட்டி, அவரிடம் இருந்த ரூ. 15 ஆயிரத்தை பறித்துக்கொண்டு, அவரையும் தனது வண்டியில் ஏற்றிக்கொண்டு உக்கடம் காவல் நிலையம் முன்பாக இறக்கிவிட்டுச் சென்றுள்ளார்.
இந்நிலையில், பெட்டிக்கடை உரிமையாளரான வெற்றிவேல் தொண்டாமுத்தூர் காவல் நிலையத்தில் கொடுத்த புகாரின் பேரில் பாஜக நிர்வாகி பெருமாளை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வந்தனர்.
இதற்கிடையே, வெற்றிவேலின் செல்போன் நம்பரை வாங்கிச் சென்ற பெருமாள் மீண்டும் அவரை அழைத்து ஆலாந்துறை அருகே வரும்படி கூறியதோடு, மீண்டும் பணம் கொண்டு வருமாறு மிரட்டியுள்ளார். இதையடுத்து வெற்றிவேல், தொண்டாமுத்தூர் போலீஸுக்கு தகவல் கொடுத்துள்ளார். இதையடுத்து ஆலாந்துறையில் நின்று கொண்டிருந்த பெருமாளை போலீசார் மடக்கி பிடித்தனர்.
அவரை காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்று விசாரணை மேற்கொண்ட போலீசார் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி கோவை மத்திய சிறையில் அடைத்தனர். கோவையில் போலீஸ் உதவி ஆய்வாளர் எனக் கூறி பெட்டிக்கடை உரிமையாளரிடம் பணம் பறித்த பாஜக நிர்வாகியால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
பெட்டிக்கடைக் காரரை ஏமாற்றி பணம் பறித்த பெருமாள் பாஜக கோவை மாநகர முன்னாள் ராணுவ வீரர்கள் பிரிவு துணைத் தலைவராக உள்ளார். பெருமாள், கோவை போத்தனூர் காவல் நிலையத்தில் பணியாற்றிய போது சூதாட்டத்தில் ஈடுபட்டதால் பணி நீக்கம் செய்யட்டவர் எனத் தகவல் வெளியாகியுள்ளது.












Click it and Unblock the Notifications