கோவை மாசாணியம்மன் கோயிலுக்குள் நுழைந்த பிரபலம்.. வாயடைத்துபோன அரசியல் கட்சிகள்! திமுக வேலையை பாருங்க
சென்னை: கோவை, பொள்ளாச்சியை அடுத்த ஆனைமலை பகுதியில் மாசாணியம்மன் கோயில் அமைந்துள்ளது. இந்த கோயிலுக்கு தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து தினமும் ஏராளமான பக்தர்கள் வருகை புரிந்து அம்மனை தரிசனம் செய்து செல்கின்றனர்... இந்த மாசாணியம்மன் கோயிலில் திமுகவினர் நூதன வழிபாடு நடத்தியிருக்கிறார்கள்.. இது பலருக்கும் வியப்பை தந்து வருகிறது. என்ன நடந்தது ஆனைமலை மாசாணியம்மன் கோயிலில்?
அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, மக்களை காப்போம் - தமிழகத்தை மீட்போம் என்ற பெயரில் எழுச்சி பயணத்தை மேற்கொண்டு வருகிறார். அந்தவகையில் கடந்தமாதம் வேலூர் மாவட்டம் அணைக்கட்டு பகுதியில் உரையாற்றியபோது, திடீரென அங்கு ஒரு ஆம்புலன்ஸ் வந்தது.

இதனால் எடப்பாடி பழனிசாமி ஆவேசமடைந்து பேச தொடங்கினார். "என்னுடைய ஒவ்வொரு பொதுக்கூட்டத்திலும் திட்டமிட்டே ஆம்புலன்ஸ் விடுகிறார்கள். மக்கள் நடுவே கலாட்டா செய்யும் இந்த கேவலமான அரசாங்கத்துக்கு 'தில்' இருக்க வேண்டும். இப்படி ஆயிரம் ஆம்புலன்ஸ் விட்டாலும், மக்கள் மனதை அவர்களால் மாற்ற முடியாது.
தில்லு, தெம்பு, திராணி
தில்லு, தெம்பு, திராணி இருந்தால் அரசியல் ரீதியாக போட்டி போடுங்கள். ஆம்புலன்ஸில் நோயாளி யாரும் இல்லை. அடுத்த கூட்டத்தில் நோயாளி இல்லாமல் ஆம்புலன்ஸ் ஏதேனும் வந்தால், அதை ஓட்டி வந்தவரே நோயாளியாக மாறி ஆம்புலன்ஸில் செல்வது போல ஆகிவிடும்" என்று கூறியிருந்தார்.
ஆம்புலன்ஸ் வெறும் வண்டி வந்தால், ஆம்புலன்ஸை யார் ஓட்டிக்கிட்டு வருகிறார்களோ, அவர் பேஷண்ட்டாக மாறி ஹாஸ்பிட்டலுக்கு போக வேண்டிவரும் என்று எடப்பாடி பழனிசாமி பேசியிருந்தது ஆம்புலன்ஸ் ஊழியர்கள் மத்தியில் கடுமையான அதிருப்தியை ஏற்படுத்தியது.. இதனால் எடப்பாடியின் பேச்சை கண்டித்து சென்னையில் ஆர்ப்பாட்டமும் நடத்தினார்கள்.
அரண்டவன் கண்ணுக்கு
இதனிடையே செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் மா.சுப்பிரமணியன், "எங்கேயாவது விபத்து ஏற்பட்டால் 8 முதல் 10 நிமிடங்களுக்குள் ஆம்புலன்ஸ் விரைந்து சென்று உயிர்களை காக்க வேண்டும். எடப்பாடி எங்கு சென்றாலும் அங்கு ஆம்புலன்ஸ் வருவதாக சொல்றார்.. . அவர் பெரும்பகுதி ஆதரவு திரட்டுவதற்கு பிரதான சாலையில்தான் செல்கிறார்.
சாலைகளில் ஆம்புலன்ஸ்கள் வந்தால் வழிவிட்டு விலகுவது தான் உலகம் முழுவதும் கடைபிடிக்கப்படும் மரபாகும். ஆனால் எதிர்க்கட்சி தலைவராக இருக்கும் எடப்பாடி பழனிசாமிக்கு, இதுகுறித்து கூட தெரியவில்லை. அரண்டவன் கண்ணுக்கு மிரண்டதெல்லாம் பேய் என்பார்கள்.. ஆம்புலன்ஸ் டிரைவர் பெயரை நோட் பண்ணு என்றெல்லாம் சொல்கிறார். ஒரு முன்னாள் முதல்வர், மிரட்டுகின்ற தொனியில் பேசுவது அநாகரிகமான செயல்.
ஏற்கனவே உயிர் காக்கும் ஆம்புலன்ஸ் மற்றும் அதன் டிரைவர்கள்-பணியாளர்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டால் 3 ஆண்டுகள் முதல் 10 ஆண்டுகள் வரை சிறை தண்டனை வழங்க சட்டத்தில் இடம் உள்ளது. இந்த சட்டத்தை நடைமுறைப்படுத்திட தமிழக அரசை தூண்டிவிட வேண்டாம் என்று எச்சரித்திருந்தார்.
பொள்ளாச்சி எடப்பாடி பழனிசாமி
இந்நிலையில், வருகிற 10ம் தேதி அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி பொள்ளாச்சிக்கு சுற்றுப்பயணம் வருகிறார்.. இதையொட்டி அந்நாளில் அப்பகுதியில் ஆம்புலன்ஸில் செல்லும் அளவிற்கு பொதுமக்கள் யாருக்கும் உடல்நிலை பாதிக்கப்படக் கூடாது என்று திமுகவினர் வேண்டி நூதன முறையில் பூஜைகளை செய்துள்ளனர்.
வரும் 10ம் தேதி சுற்றுப்பயணமாக பொள்ளாச்சி சட்டமன்ற தொகுதி மற்றும் வால்பாறை சட்டமன்ற தொகுதியில் உள்ள மக்களை சந்திக்க எடப்பாடி பழனிச்சாமி வருகிறார்.
இதனையொட்டி, அந்த நாளன்று இந்த பகுதியில் உள்ள மக்களுக்கு ஆம்புலன்ஸில் செல்லும் அளவிற்கு எந்தவித உடல்நிலை சரியில்லாமல் போக கூடாது என்றும் சாலையில் எந்த ஒரு விபத்து நடக்கக்கூடாது என்றும் கூறி திமுகவினர் சிறப்பு பூஜைகளை நடத்தினார்கள்.
ஆனைமலை மாசாணியம்மன் கோவில்
ஆனைமலை பகுதியில் மிகவும் பிரசித்தி பெற்ற ஆனைமலை மாசாணியம்மன் கோவிலில் திமுக கோவை தெற்கு மாவட்டம் இளைஞர் அணி துணை அமைப்பாளர் தென்றல் மணிமாறன் தலைமையில் திமுகவினர் மற்றும் ஆம்புலன்ஸ் ஓட்டுநர்களும் பிரார்த்தனை வழிபாடு செய்தனர்.. கோவை ஆனைமலை மாசாணியம்மன் கோயிலில் திமுகவினர் நூதன வழிபாடு நடத்தியதுதான், இணையத்தில் வைரலாகி கொண்டிருக்கிறது.












Click it and Unblock the Notifications