புதிய தொழில் முனைவோருக்கு கடன்.. லட்சங்களில் கிடைக்கும் மானியம்.. கோவை அதிகாரி விளக்கம்
கோவை: புதிய தொழில் முனைவோர் மற்றும் நிறுவன மேம்பாட்டு திட்டத்தில் (நீட்ஸ்) தொழில் தொடங்க 20 நிறுவனங்களுக்கு ரூ.1 கோடியே 78 லட்சம் மானியத்துடன் கடன் வழங்க இலக்கு நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது என்று கோவை மாவட்ட தொழில் மைய மேலாளர் சண்முக சிவா கூறினார். அதேபோல் வேலை வாய்ப்பற்ற இளைஞர்களுக்கான வேலை வாய்ப்பு உருவாக்கும் திட்டத்தில் (யு.ஒய்.இ.ஜி.பி.) தொழில் தொடங்க 53 பேருக்கு ரூ.69 லட்சம் மானியத்துடன் கடன் வழங்க நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது என்றும் கூறினார்.
புதிய தொழில் முனைவோருக்கு தமிழக அரசு கடன் உதவி செய்கிறது. அதாவது கிட்டத்தட்ட வட்டியில்லாத கடன் என்கிற அளவில் வட்டி மானியத்துடன் கடன் வழங்குகிறது. அவர்கள் வாங்கும் கடன் தொகையை நல்ல விதமாக பயன்படுத்த தொழில் தொடங்கி முன்னேறி தொழில் அதிபர்களாக வர வேண்டும் என்று அரசு இந்த திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. பல்வேறு தொழில்களை தொடங்க தமிழக அரசு கடன் உதவி வழங்குகிறது.

தமிழக அரசு மட்டுமல்ல, மத்திய அரசுமே சிறுகுறு தொழில்களை ஊக்குவிக்கும் நோக்கில் கடன் உதவிகளை வழங்கி வருகிறது. அதேபோல் பாரம்பரிய தொழில்களை ஊக்குவிக்கும் வகையில் கலைஞர் கைவினைத்திட்டத்தில் வட்டியில்லா கடன் உதவியும் வழங்கப்படுகிறது. இந்த கடன் உதவிகள் பற்றி முழு விவரம் அறிய உங்கள் மாவட்டத்தில் உள்ள தொழில் மையத்தை அணுக வேண்டும்.
கோவை மாவட்ட தொழில் மைய மேலாளர் சண்முக சிவா வெளியிட்ட தகவலின் படி," புதிய தொழில் முனைவோர் மற்றும் நிறுவன மேம்பாட்டு திட்டத்தில் (நீட்ஸ்) தொழில் தொடங்க 20 நிறுவனங்களுக்கு ரூ.1 கோடியே 78 லட்சம் மானியத்துடன் கடன் வழங்க இலக்கு நிர்ணயம் செய்யப்பட்டிருக்கிறது. அண்ணல் அம்பேத்கர் தொழில் முன்னோடி திட்டத்தில் பட்டியலினத்தவர் மற்றும் பழங்குடியினர் தொழில் தொடங்க 46 நிறுவனங்களுக்கு ரூ.3 கோடியே 83 லட்சம் மதிப்பில் மானியத்துடன் கடன் வழங்க முடிவு செய்யப்பட்டிருக்கிறது.
வேலை வாய்ப்பற்ற இளைஞர்களுக்கான வேலை வாய்ப்பு உருவாக்கும் திட்டத்தில் (யு.ஒய்.இ.ஜி.பி.) தொழில் தொடங்க 53 பேருக்கு ரூ.69 லட்சம் மானியத்துடன் கடன் வழங்க நிர்ணயம் செய்யப்பட்டிருக்கிறது. இதேபோல் கலைஞர் கைவினை திட்டத்தில் கைவினை தொழில் புரிய 326 பேருக்கு ரூ.1 கோடியே 26 லட்சம் மானியத்துடன் கடன் வழங்க இலக்கு நிர்ணயம் செய்யப்பட்டிருக்கிறது.
அதேபோல் பிரதம மந்திரியின் உணவு பதப்படுத்துதல் குறு நிறுவனங்களை முறைப்படுத்தும் திட்டத்தில் தொழில் தொடங்க 164 நிறுவனங்களுக்கு ரூ.3 கோடியே 72 லட்சம் மானியத்துடன் கடன் வழங்க முடிவு செய்யப்பட்டிருக்கிறது.. அந்த வகையில் மொத்தம் ரூ.11 கோடி மதிப்புக்கு கோவை மாவட்டத்தில் உள்ளவர்களுக்கு கடன் வழங்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டிருக்கிறது. கோவை மாவட்டத்தில் கடந்த 2021 முதல் 2024-ம் ஆண்டுவரை புதிய தொழில் முனைவோர் மற்றும் தொழில் நிறுவன மேம்பாட்டு திட்டத்தில் மொத்தம் ரூ.21 கோடி வழங்கப்பட்டிருக்கிறது.
வேலைவாய்ப்பற்ற இளைஞர்களுக்கு வேலை வாய்ப்புகளை உருவாக்கும் திட்டத்தில் கடந்த 4 ஆண்டுகளில் ரூ.17 கோடி கடன் வழங்கப்பட்டு உள்ளது. பிரதம மந்திரியின் வேலை வாய்ப்பு உருவாக்கும் திட்டத்தில் கடந்த 4 ஆண்டுகளில் ரூ.58 கோடியே 63 லட்சம், மானியமாக ரூ.15 கோடியே 86 லட்சம் வழங்கப்பட்டிருக்கிறது.
கலைஞர் கைவினை திட்டத்தில் கட்டிடம், மரவேலை, பாரம்பரிய முறையில் ஜவுளி அச்சிடுதல், தோல் கைவினை பொருட்கள், காலணி, மீன் வலை, சணல், மலர், பனை ஓலை, துணிகளில் வேலைப்பாடு, நகை செய்தல், அழகுகலை, துணி நெய்தல், தையல், கூடை முடைதல், கயிறு, பாய் பின்னுதல், மண்பாண்டங்கள், பொம்மை தயாரித்தல், படகு கட்டுமானம் உள்ளிட்ட கைவினை தொழில் செய்ய கடன் வழங்கப்படுகிறது. இதற்கு www.msmeonline.tn.gov.in என்ற இணையதளம் மூலம் விண்ணப்பிக்கலாம்" இவ்வாறு கோவை மாவட்ட தொழில் மைய மேலாளர் சண்முக சிவா கூறினார்.












Click it and Unblock the Notifications