கோயம்புத்தூர் திரைப்படத் தயாரிப்பாளர் மோசடி வழக்கு: ஆடியோவால் வெடித்த சர்ச்சை!
கோவை: கோயம்புத்தூரைச் சேர்ந்த திரைப்படத் தயாரிப்பாளர் சஞ்சய்குமார் ரெட்டி, மர்ம நபர் ஒருவர் தன்னை மிரட்டியதாக ஒரு ஆடியோவை வெளியிட்டிருந்தார். ஆனால், அந்த ஆடியோ போலியானது என்றும், சஞ்சய்குமார் ரெட்டி தங்கள் மீது பொய் புகார் அளித்துள்ளதாகவும் எதிர் தரப்பினர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர்.
கோயம்புத்தூரைச் சேர்ந்த திரைப்படத் தயாரிப்பாளர் சஞ்சய்குமார் ரெட்டி, தன் தயாரிப்பில் உருவான 'பேசஸ்' (Phases) என்ற திரைப்படத்தின் பணிகளை, கேரளாவின் கொச்சியில் உள்ள ஒரு நிறுவனத்திடம் ஒப்படைத்துவிட்டு மனைவியுடன் லண்டன் சென்றதாகக் கூறப்படுகிறது.

இந்நிலையில், சஞ்சய்குமார் இறந்ததாக போலி ஆவணங்கள் தயாரித்து, அவரது படத்தை அங்காளம்மன் பிலிம்ஸ் என்ற நிறுவனத்துக்கு விற்றதாக, அதே நிறுவனத்தில் பணிபுரியும் ரமேஷ், திரைப்பட இயக்குநர் நீலேஷ், நிறுவன உரிமையாளர் ராஜேஷ், முருகேசன், மற்றும் ஆரோக்கியராஜ் ஆகியோர் மீது சஞ்சய்குமார் கேரள டிஜிபியிடம் புகார் அளித்தார். மேலும், புகார் வாபஸ் பெறாவிட்டால், அவரைக் கொன்றுவிடுவதாகவும், அவரது மகளைக் கடத்திவிடுவதாகவும் ஒரு மர்ம நபர் செல்போனில் மிரட்டியதாகவும், அதற்கான ஆடியோ ஆதாரத்தை வெளியிட்டு தமிழக மற்றும் கேரள டிஜிபிக்களிடம் ஆன்லைனில் புகார் அளித்திருந்தார்.
இந்நிலையில், சஞ்சய்குமார் ரெட்டி சுமத்திய குற்றச்சாட்டுகள் அனைத்தும் பொய் என்று கூறி, ரமேஷ் உள்ளிட்டோர் கோயம்புத்தூர் மாநகர காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் அளித்துள்ளனர்.
அவர்கள் தங்கள் புகாரில் கூறியுள்ளதாவது:
சஞ்சய்குமார் ரெட்டிக்கு மகளே கிடையாது, அவர் ஒரு ஆளை வைத்து தனக்குத்தானே மிரட்டல் விடுத்து, அதை வைத்து தங்கள் மீது பொய்ப் புகார் அளித்துள்ளார்.
சஞ்சய்குமார், தங்கள் பணத்தை முதலீடாகப் பெற்றார். ஆனால், படத்தின் பணிகள் பாதியிலேயே முடிந்த நிலையில், பணிகளை முடிக்காமல் அவர் சென்றுவிட்டார்.
இதனால், எங்களது பணத்தை மீண்டும் செலவிட்டு படத்தின் பணிகளை முடித்தோம். அந்த படத்தின் மூலம் கிடைக்கும் பணத்தை எங்களுக்குத் தராமல் அவர் ஏமாற்றுகிறார்.
சஞ்சய்குமார் மற்றும் அவரது மனைவி லாவண்யா இருவரும் பல்வேறு பெயர்களில் மோசடி செய்துள்ளதாகவும், அவர் மீது குனியமுத்தூர் காவல் நிலையத்தில் மோசடி வழக்குகள் உள்ளதாகவும் அவர்கள் தெரிவித்தனர்.
தற்போது, இரு தரப்பினரின் புகார்கள் குறித்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.












Click it and Unblock the Notifications