கோவையில் நாதக வலுவாக உள்ளது.. நிர்வாகிகள் விலகல் என்பது பிற கட்சிகளின் சதி.. நடந்தது என்ன?
கோவை: கோவை மாவட்ட நாம் தமிழர் கட்சி கூண்டோடு கலைப்பு என வந்த செய்திகள் தவறானது எனவும், நேற்று கட்சியிலிருந்து விலகுவதாக சொன்னவர்கள் நாம் தமிழர் கட்சியில் எந்த பொறுப்பிலும் இல்லை என கோவை மண்டல செயலாளர் வகாப் தெரிவித்துள்ளார்.
கோவை வடக்கு மாவட்ட நாம் தமிழர் கட்சி நிர்வாகிகள் 20க்கும் மேற்பட்டோர் கட்சியில் இருந்து விலகுவதாக அறிவித்திருந்தனர். இதுதொடர்பாக கட்சியின் வடக்கு மாவட்ட செயலாளர் ராமச்சந்திரன், மகளிர் அணி மாவட்ட செயலாளர் அபிராமி, வணிகர் பாசறை மாவட்ட செயலாளர் செந்தில்குமார், தொழிற்சங்க செயலாளர் ஏழுமலை பாபு ஆகியோர் செய்தியாளர்களை நேற்று சந்தித்தனர்.

அப்போது அவர்கள், நாம் தமிழர் கட்சியின் செயல்பாடு மீது நீண்டகாலமாகவே கடும் அதிருப்தி இருந்தது. அதனால், ஒட்டுமொத்தமாக கோவை வடக்கு மாவட்ட நாம் தமிழர் கட்சியினர் வெளியேற முடிவெடுத்துள்ளோம். எந்தக் கட்சியில் சேரப் போகிறோம் என்பது குறித்து விரைவில் தெரிவிப்போம். பொறுப்பாளர்கள் 20 பேர் மற்றும் நாதக உறுப்பினர்கள் நூற்றுக்கணக்கானோர் உள்ளோம்.
அண்ணன் சீமான் மீது மதிப்பு வைத்திருக்கிறோம். ஆனால், தொடர்ச்சியாக முன்னுக்குப் பின் முரணாக அவர் பேசி வருவதால் கொங்கு மண்டலத்தில் அரசியல் செய்ய முடிவதில்லை. மாற்றத்துக்கான கட்சி என்று நினைத்துதான் களத்துக்கு வந்தோம். அதுபோன்ற எந்த மாற்றமும் இல்லை. அருந்ததியர் குறித்து சீமான் பேசியது கொங்கு பகுதியில் பெரும் பாதிப்பை ஏற்படுத்துகிறது என்று கூறி விலகுவதாக தெரிவித்தனர்.
இந்நிலையில், கோவை மாவட்ட நாம் தமிழர் கட்சி கூண்டோடு கலைப்பு என வந்த செய்திகள் தவறானது எனவும், நேற்று கட்சியிலிருந்து விலகுவதாக சொன்னவர்கள் நாம் தமிழர் கட்சியில் எந்த பொறுப்பிலும் இல்லை என நாதக கோவை மண்டல செயலாளர் வகாப் தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக, அக்கட்சியின் கோவை மண்டல நாம் தமிழர் கட்சி செயலாளர் அப்துல் வகாப் மற்றும் மகளிரணி மாநில ஒருங்கிணைப்பாளர் உள்ளிட்ட நிர்வாகிகள் கூட்டாக செய்தியாளர்களை சந்தித்தனர். அப்போது, அவர்கள் கூறுகையில், நாம் தமிழர் கட்சியில் மாவட்ட பொறுப்புகள் நீக்கப்பட்டு ஒரு வருடத்திற்கு மேலாகிவிட்டது.
தற்பொழுது தான் புதிதாக மாவட்ட வாரியாக நாம் தமிழர் கட்சி கட்டமைப்பை ஏற்படுத்தி வருகிறது. எனவே, கட்சியின் எந்த பொறுப்பிலும் இல்லாமல் அவர்கள் யார் தூண்டுதலின் பெயரிலோ தவறான தகவலை செய்தியாளர்களுக்கு கொடுத்துள்ளனர். நாம் தமிழர் கட்சி கோவை மாவட்டத்தில் வலுவோடு இருக்கிறது.
நாள்தோறும் அதிக உறுப்பினர்களை சேர்த்து வருகிறோம். கட்சியின் வளர்ச்சி பிடிக்காமல் பிற கட்சியினர் இதுபோன்ற ஒரு சில நபர்களை வைத்து குழப்பத்தை ஏற்படுத்தி வருகின்றனர். இதனால் எந்த பாதிப்பும் ஏற்படாது. மக்களுக்கு ஆளும் கட்சி எந்த வகையில் பிரச்சனை ஏற்படுத்தினாலும், அதனை எதிர்த்து தொடர்ச்சியாக நாம் தமிழர் கட்சி போராடி வருகிறது.
மேலும், திமுகவிற்கு எதிரியாக இருந்து தொடர்ந்து செயல்பட்டு வருகிறோம். கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமானின் செயல்பாடுகள் தங்கள் அனைவரும் ஏற்று கொள்ளும் விதமாகத்தான் உள்ளது என்றனர்.












Click it and Unblock the Notifications