களமிறங்கிய கரூர் டீம்! ஓட்டுக்கு ரூ 5000 பட்டுவாடா புகார்! கோவை தெற்கு தொகுதியில் தேர்தல் ரத்து?
கோவை: கோவை தெற்கு தொகுதி தேர்தலை ரத்து செய்ய வேண்டும். வாக்காளர்களுக்கு பணம் கொடுத்த வேட்பாளர் மீது வழக்குப் பதிவு செய்து தகுதி நீக்கம் செய்ய வேண்டும் என தேர்தல் ஆணையத்தில் பரபரப்பு புகார் அளிக்கப்பட்டுள்ளது.
தமிழக சட்டசபை தேர்தல் வரும் 23 ஆம் தேதி நடைபெறுகிறது. தேர்தல் பிரச்சாரங்கள் இறுதி கட்டத்தை எட்டியுள்ளன. கோவையில் பல்வேறு பகுதிகளில் நேற்று முதல் அதிமுக, திமுக ஆகிய கட்சிகள் வாக்காளர்களுக்கு பணம் வழங்கி வருவதாக சொல்கிறார்கள்.

குறிப்பாக கோவை தெற்கு சட்டசபை தொகுதிக்குள்பட்ட பகுதிகளில் கரூரை சேர்ந்த ஒரு டீம், திமுக வேட்பாளர் செந்தில் பாலாஜிக்கு ஆதரவாக வாக்காளர்களுக்கு ரூ 5 ஆயிரம் வரை பணம் வழங்கி வருவதாக சொல்லப்படுகிறது. அது போல் அதிமுகவினர் வாக்காளர்களுக்கு ரூ 1000 வழங்குவதாக கூறப்படுகிறது.
இதனிடையே நேற்று இரவு ராமநாதபுரம் 80 அடி வீதியில் பணப்பட்டுவாடா செய்ததாக கரூர் டீம் மீது அதிமுகவினர் தாக்குதல் நடத்தினர். மேலும் அவர்களில் பிடிபட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி, ராமநாதபுரம் காவல் நிலையத்தை அதிமுகவினர் முற்றுகையிட்டனர். அப்போது அந்த இடத்தில் திமுகவினரும் குவிந்ததால் காவல் துறையினர் லேசான தடியடி நடத்தி கலைத்தனர்.
வெரைட்டி ஹால் பகுதியிலும் பணப்பட்டுவாடா நடத்துவதாக அதிமுகவினர் புகாருடன், கரூர் டீமை பிடித்து காவல் நிலையத்தில் ஒப்படைத்ததால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. புலியகுளத்தில் வாக்காளர்களுக்கு பணம் கொடுத்ததாக திமுகவினரை கண்டித்து நாம் தமிழர் கட்சியினர் சாலை மறியல் போராட்டம் நடத்தினர்.
இந்த நிலையில் கோவை தெற்கு தொகுதி தேர்தலை ரத்து செய்யக் கோரி, மறுமலர்ச்சி மக்கள் இயக்கத் தலைவர் ஈஸ்வரன் தேர்தல் ஆணையத்திற்கு ஒரு புகார் மனு அளித்தார்.
அந்த புகாரில் அவர் கூறியிருப்பதாவது: கோவை தெற்கு தொகுதியில் திமுகவிற்கு ஓட்டு போடுவதற்காக வாக்காளர்களுக்கு பணம் விநியோகம் நடந்து வருகிறது. ஒரு ஓட்டுக்கு ரூ 5000 வரை கொடுக்கப்படுகிறது. இது ஜனநாயகத்திற்கு எதிரான கொடுஞ்செயல். இதனால் இந்த தொகுதிக்கான தேர்தலை ரத்து செய்ய வேண்டும், பணம் கொடுத்த வேட்பாளர் மீது வழக்குப் பதிவு செய்து அவரை தகுதி நீக்கம் செய்ய வேண்டும்.
சிங்காநல்லூர், தொண்டாமுத்தூர், கிணத்துக்கடவு ஆகிய தொகுதிகளில் அதிமுக, திமுக ஆகிய இரு கட்சிகளும் ஓட்டுக்கு பணம் கொடுத்து வருகின்றன. இந்தத் தொகுதிகளிலும் தேர்தலை ரத்து செய்து, ஓட்டுக்கு பணம் கொடுத்த நபர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என அந்த மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications