பாரா கிளைடர் மூலமாக கிருமி நாசினி தெளிப்பு.. ஆச்சரியத்தில் வால்பாறை மக்கள்!
கோவை: கோவை மாவட்டம் வால்பாறை மலை கிராமங்களில் பாரா கிளைடர் மூலமாக கிருமி நாசினி தெளிக்கும் பணி நடைபெற்று வருகிறது.
Recommended Video
கொரோனா வைரஸ் பரவுவதை தடுக்க கோவை மாவட்டம் வால்பாறையில் பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. வால்பாறை நகர் மற்றும் அனைத்து எஸ்டேட் பகுதிகளில் தொழிலாளர் குடியிருப்பு பகுதிகளிலும், வீடு மற்றும் வீதிகளில், கிருமி நாசினி தெளிக்கும் பணி தொடர்ந்து நடைபெற்று வருகிறது.

இந்நிலையில் வால்பாறையில் கடந்த சில தினங்களுக்கு முன்பு கர்ப்பிணி பெண்ணுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது . அவருக்கு கோவையிலுள்ள ஈ.எஸ்.ஐ மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதன் காரணமாக அப்பெண் வசித்துவந்த மார்க்கெட் காந்தி நகர் பகுதி முழுவதும் தனிமைப்படுத்தப்பட்ட பகுதியாக அறிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் வால்பாறை நகராட்சி சார்பில் அப்பகுதி முழுவதும் கிருமி நாசினி மருந்து தெளிக்கும் பணியில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். மேலும் மருத்துவத் துறையினர் அப்பகுதி முழுவதும் கண்காணித்து வருகின்றனர். அப்பகுதியில் உள்ள 20 நபர்களிடம் இருந்து இரத்த மாதிரிகள் சேகரிக்கப்பட்டு சோதனைக்கு அனுப்பப்பட்டுள்ளது.

மேலும் வால்பாறை நகர் முழுவதும் பாரா கிளைடர் மூலம் கிருமி நாசினி தெளிக்க அதிகாரிகள் முடிவு செய்தனர். அதன்படி உடுமலைப்பேட்டை ஹேம்ரோடியோ கிளப் சார்பில் வால்பாறை கல்லுாரி விளையாட்டு மைதானத்தில் பாரா கிளைடர் மூலம் கிருமி நாசினி தெளிக்கும் பணி துவங்கப்பட்டுள்ளது.

வாகனங்கள் மூலம் சென்று கிருமி நாசினி தெளிக்க முடியாத பகுதிகளில் பாரா கிளைடர் மூலம் கிருமி நாசினி தெளிக்கப்படுகிறது. இதனை வால்பாறை மக்கள் ஆச்சரியத்துடன் பார்த்து செல்கின்றனர்.












Click it and Unblock the Notifications