கதவில் மோதி உயிரிழந்த கணவர்.. நேரில் பார்த்த மனைவிக்கு மாரடைப்பு.. அடுத்தடுத்து சோகம்.. கோவை அருகே!
வயதான தம்பதி ஒரே நேரத்தில் மாரடைப்பால் உயிரிழந்துள்ளனர்
கோவை: கதவில் மோதி விழுந்து இறந்துவிட்டார் கணவன்.. கண்ணெதிரே கணவன் உயிரிழப்பதை கண்ட மனைவிக்கு நெஞ்சுவலி வந்து... அவரும் உயிரிழந்துவிட்டார்.. இந்த துயர சம்பவம் கோவை அருகே நடந்துள்ளது.
கோவை மாவட்டம் சிறுமுகை அருகே வசித்து வந்தவர் ரங்கசாமி.. 86 வயதாகிறது.. இவர் ஒரு கட்டிட தொழிலாளி... இவருடைய மனைவி பெயர் கண்ணம்மாள்.. அவருக்கு 68 வயதாகிறது.. இந்த தம்பதிக்கு 3 மகள்கள், 2 மகன்கள், பேரன், பேத்திகள் உள்ளனர்.
கண்ணம்மாளுக்கு புற்று நோய் இருந்திருக்கிறது.. அதனால் வீட்டிலேயே சில மாதமாக சிகிச்சை பெற்று வந்தார். இந்நிலையில், நேற்று வெளியில் சென்றுவிட்டு, ரங்கசாமி வீட்டுக்குள் நுழைந்தார்.. அப்போது எதிர்பாராதவிதமாக வீட்டின் கதவில் மோதி கொண்டார்.. இதில், நிலைதடுமாறி கீழே விழுந்து படுகாயமடைந்தார்.
இதை பார்த்து கண்ணம்மாள் அருகில் ஓடிச்சென்றார்.. ஆனால், சில நிமிடங்களிலேயே ரங்கசாமி உயிர் அப்படியே பிரிந்துவிட்டது.. இதை பார்த்து கொண்டே இருந்த கண்ணம்மா, அதிர்ச்சி அடைந்து, ரங்கசாமி மீது விழுந்து கதறினார்.. அப்போது கண்ணம்மாவுக்கு நெஞ்சுவலி வந்து.. அவரும் அப்படியே இறந்துவிட்டார்.
ஒரே நேரத்தில் கணவனும், மனைவியும் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது. சாவிலும் இணைபிரியாத இந்த தம்பதியின் சடலங்களை கண்டு இவர்களது பிள்ளைகள் கதறி அழுதது மனதை கலங்க வைத்தது!