டேட்டிங் ஆப்பில் வந்த மசாஜ் ஆபர் - ஹனி டிராப்பில் சிக்கிய கோவை ஐடி நிறுவன உரிமையாளர்
கோவை: ஆன்லைன் டேட்டிங் ஆப்களால் ஏராளமான பிரச்சனைகள் உருவாகி வருகின்றன. இந்த ஆப்பை பயன்படுத்தி பணம் பறிப்பதற்காகவே பல மோசடி கும்பல்கள் இயங்கி வருகின்றன. இந்நிலையில் கோவை ஐடி நிறுவன உரிமையாளர் ஒருவரை இந்த ஆப் மூலம் ஹனி டிராப் செய்து பணம், நகை பறித்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதுதொடர்பாக ஒரு பெண் உள்ளிட்ட 4 பேரை கைது செய்து காவல்துறை விசாரணை நடத்தி வருகிறார்கள்.
கோவை பீளமேடு பகுதியைச் சேர்ந்த 45 வயது ஆண் ஒரு ஐடி நிறுவனம் நடத்தி வருகிறார். அவருக்கு டேட்டிங் ஆப் மூலம் மற்றொரு ஆணுடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது. அதில் அவர்கள் சிறிது நாட்கள் பேசி வந்துள்ளனர். அப்போது ஐடி நிறுவன உரிமையாளருக்கு மசாஜ் ஏற்பாடு செய்வதாக எதிரில் பேசியவர் சொல்லியுள்ளார்.

ஹனி டிராப்பில் சிக்கிய ஐடி பிரமுகர்
இதற்காக ஐடி நிறுவன உரிமையாளரை காந்திபார்க் அருகே ஒரு ரகசிய இடத்திற்கு வர சொல்லியுள்ளார். அதை நம்பி ஐடி நிறுவன ஊழியர் அவர் சொன்ன ஒரு வீட்டிற்கு சென்றுள்ளார். அங்கு ஒரு பெண்ணை வைத்து மசாஜ் செய்வது போல, ஆபாசமாக போட்டோ எடுத்துள்ளனர். அதன் பிறகு தான் பிரச்சனை தொடங்கியுள்ளது.
அந்த போட்டோக்களை வீட்டிற்கு அனுப்பிவிடுவோம் என்று மிரட்டியுள்ளனர். சம்பவ இடத்திலேயே உடனடியாக பணம் கொடுக்க வேண்டும் என்று மிரட்டியிருக்கிறார்கள். இதனால் அவர் கூகுள் பே மூலம் ரூ.1,30,000 அனுப்பியுள்ளார். அதனுடன் அவரின் இரண்டு ஸ்மார்ட் போன்கள், ஏடிஎம் கார்டு, 3 சவரன் நகை, ஒரு வெள்ளி கொலுசு ஆகியவற்றை வாங்கியுள்ளனர்.
டார்ச்சர் தாங்க முடியவில்லை
இந்த சம்பவத்தில் ஐடி உரிமையாளர் அதிர்ச்சியடைந்துள்ளார். பணத்துடன் விட்டுவிடுவார்கள் என்று நினைத்தபோது, அந்த கும்பல் அவரை தொடர்ந்து போட்டோவை காண்பித்து மிரட்டி பிளாக் மெயில் செய்து வந்துள்ளனர். ஒருகட்டத்தில் அவர்களின் டார்ச்சர் தாங்க முடியாமல் அவர் ஆர்எஸ்புரம் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.
அவரின் புகாரின் அடிப்படையில் வழக்குப்பதிவு செய்து விசாரித்த ஆர்எஸ்புரம் காவல்துறையினர், ஒரு பெண் உள்ளிட்ட 4 பேரை கைது செய்துள்ளனர். திண்டுக்கல் மாவட்டத்தைச் சேர்ந்த கண்ணப்பன், தேனி மாவட்டத்தைச் சேர்ந்த ஶ்ரீலட்சுமணன், நாமக்கல் மாவட்டத்தைச் சேர்ந்த பிரசன்னா, கோவை மாவட்டம், வால்பாறை பகுதியைச் சேர்ந்த லாவண்யா ஆகிய 4 பேரை கைது செய்துள்ளனர்.
4 பேர் கைது
அவர்களிடம் இருந்து 2 சவரன் தங்க நகை, ஒரு ஜோடி கொலுசு ஆகியவற்றை காவல்துறை காவல்துறையினர் பறிமுதல் செய்துள்ளனர். அவர்களிடம் தொடர்ந்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. அவர்கள் இதேபோல மேலும் சிலரை மிரட்டி பணம், நகை பறித்தது விசாரணையில் தெரியவந்துள்ளது. இந்த சம்பவம் கோவையில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.












Click it and Unblock the Notifications