அதிமுகவின் அஸ்திவாரத்தை போட்டு ஆட்டும் திமுக.. பாஜகவும் இதை எதிர்பார்க்கலையே.. அடியோடு மாறுது
கோயம்புத்தூர்: 2026 சட்டமன்றத் தேர்தலை இலக்காகக் கொண்டு, மேற்கு தமிழ்நாட்டை, குறிப்பாக கோயம்புத்தூரை, திமுக தீவிரமாக குறி வைத்து வருகிறது. அதிமுக கோட்டையாகவும், பாஜக வளரும் தளமாகவும் கருதப்படும் கொங்கு மண்டலத்தில், சாதி வாரியான வாக்குகள், உள்ளூர் பிரச்சனைகள், தொழில்முனைவோருக்கான திட்டங்கள் அதிகம் கவனம் பெறுவது வழக்கம்.
2021 சட்டமன்றத் தேர்தலில் மாநிலம் முழுவதும் 234 தொகுதிகளில் 133-ல் வென்று ஆட்சி அமைத்தபோதிலும், மேற்கு தமிழ்நாட்டின் 68 தொகுதிகளில் வெறும் 24 இடங்களில் மட்டுமே திமுக வெற்றி பெற்றது. கோயம்புத்தூரில் திமுக ஒரு தொகுதியிலும் வெல்லவில்லை; அதிமுக 9 இடங்களிலும், பாஜக ஒரு இடத்திலும் வெற்றி பெற்றன.

2021 முதலே களப்பணிகளை மேற்கொண்டாலும், கடந்த சில மாதங்களில் மேற்குப் பகுதியில் கணிசமான அரசியல் முதலீடுகளை திமுக செய்துள்ளது. கோவையில் தொழிலதிபர் ஜி.டி. நாயுடு பெயரில் மேம்பாலம், ஸ்ரீ அன்னபூர்ணா உணவக சங்கிலியின் இயக்குநர் டி. சீனிவாசன் தமிழ்நாடு அரசு உணவு ஆணையத்தில் உறுப்பினராக நியமனம் ஆகியவை நாயுடு சமூகத்தினரால் வரவேற்கப்பட்டுள்ளன.
அதேபோல, முன்னாள் அமைச்சர் வி. செந்தில் பாலாஜி (கவுண்டர் சமூகத்தைச் சேர்ந்தவர்) கோயம்புத்தூர் மாவட்ட பொறுப்பாளராக நியமிக்கப்பட்டார். அவர் கோவை தொகுதிக்கே மாற உள்ளார். துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின், ராஜ் கவுண்டர் நடத்திய புதிய திராவிடக் கழக மாநாட்டில் பங்கேற்றதும் களத்தில் பலனளிப்பதாக திமுக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
கோயம்புத்தூர் சிங்காநல்லூர் தொகுதி திமுக நிர்வாகி ஒருவர், மக்களவைத் தேர்தலுக்குப் பிந்தைய மாதங்களில் இந்த இரு சமூகத்தினரின் ஆதரவில் ஏற்பட்ட மாற்றத்தை உறுதிப்படுத்தினார். "பல ஆண்டுகளாக இந்த சமூக மக்களுடன் பணிபுரிந்தாலும், 1990-களின் பிற்பகுதியில் மூத்த தலைவர்கள் கட்சியிலிருந்து வெளியேறிய பிறகு, எங்களுக்கு பெரிதாக கவுண்டர்கள், நாயுடுகள் ஆதரவு தரவில்லை. அந்த நிலைமை தற்போது மாறி உள்ளது. இப்போது அவர்கள் எங்களுக்கு ஆதரவு தருகிறார்கள்.
இப்போது எங்கள் கட்சி அனைவருக்கும், அனைத்துச் சாதியினருக்கும் சமமாகப் பிரதிநிதித்துவம் அளிக்கிறது என்பதை மக்கள் உணர்ந்துள்ளனர். அதனால்தான் இந்த மாற்றம் ஏற்பட்டுள்ளது," என்று அந்த நிர்வாகி தெரிவித்துள்ளார்.
திமுக எழுச்சி
இது தொடர்பாக நம்மிடம் பேசிய அரசியல் விமர்சகர்கள், "2021 உள்ளாட்சித் தேர்தலிலும், 2024 மக்களவைத் தேர்தலிலும் திமுக வெற்றி பெற்றாலும், உண்மையான மாற்றம் 2025 பிப்ரவரியில் நடந்த ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலுக்குப் பின்தான் நிகழ்ந்தது.
திமுக ஒருபுறம் கவுண்டர்களுக்கு ஆதரவான நிலைப்பாட்டை எடுத்து, மறுபுறம் சமூக விவகாரங்களில் வெளிப்படையாகப் பங்கேற்காமல் நலத்திட்டங்கள், பெண்களுக்கு ஆதரவான திட்டங்கள் எல்லா விதமான சமூகங்களை யும்ஒருங்கிணைக்கிறது. அதாவது ஒரு பக்கம் கவுண்டர்களை ஆதரிக்கிறது. இன்னொரு பக்கம் பிற்படுத்தப்பட்ட சமூகங்களையும் கைவிடாமல் துணை நிற்கிறது. இது 2026 சட்டமன்றத் தேர்தலுக்கு முன்திமுகவிற்கு உதவியுள்ளது.
ஒரு காலத்தில் மேற்குப் பகுதியில் வலுவான தளத்தைக் கொண்டிருந்த திமுக, 1990-களில் தனது அடிப்படையை இழந்தது. ஈரோடு ஏ. கணேசமூர்த்தி, திருப்பூர் துரைசாமி, எம். கண்ணப்பன் போன்ற தலைவர்கள் 1994-ல் வைகோவால் தொடங்கப்பட்ட மதிமுக-வில் இணைந்ததே இதற்குக் காரணம்.
மேற்கு மண்டல உத்தி, அரசியல் அடையாளங்கள் மற்றும் சாதி சமநிலையை நம்பியிருந்தாலும், வாக்குகளாக மாற்றக்கூடிய கிரவுண்டு பலம் திமுகவிற்கு இல்லாமல் இருந்தது. இப்போது அதை திமுக உருவாக்கி உள்ளது என்று அரசியல் விமர்சகர்கள் தெரிவிக்கின்றனர்.
திமுக திட்டங்கள்
இன்னொரு பக்கம் பிற்படுத்தப்பட்ட சமூகங்களை திமுக கைவிடவில்லை. பெண்கள், பழங்குடியினர், சிறுபான்மையினர் மற்றும் மீனவர்களுக்கு இலக்கு வைத்து சமூக அடிப்படையிலான திட்டங்களை திமுக செயல்படுத்தியுள்ளது. பழங்குடியினர் வாழ்வாதாரத்திற்கான 'தோல்குடி - ஐந்திணை' திட்டம், பட்டியல் சாதி/பழங்குடியினப் பெண்களுக்கு நில உரிமையாளர் மானியம் போன்றவை அவற்றில் சில.
மீனவப் பெண்களுக்கு நுண்கடன், நரிக்குறவர் சமூகங்களுக்கு வீட்டு வசதி, சிறுபான்மைப் பெண்களுக்குக் கல்வி உதவித்தொகை போன்ற திட்டங்கள் இந்த உத்தியின் முதுகெலும்பாக அமைந்துள்ளன.
ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத் துறையின் 'தோல்குடி-ஐந்திணை' திட்டத்தின் கீழ், பயனாளிகள் 2023-24ல் 1,090 ஆக இருந்து, 2025-26ல் 7,564 ஆக உயர்ந்துள்ளனர். இதற்கான ஒதுக்கீடு ₹5.59 கோடியிலிருந்து ₹17.80 கோடியாக அதிகரித்துள்ளது.
2024-ல் திமுக தனது வாக்கு சதவீதத்தை (மேற்கு மண்டலத்தில்) சுமார் ஐந்து சதவிகிதம் அதிகரித்துள்ளதுடன், உள்ளாட்சித் தேர்தல்களிலும் இடைத்தேர்தல்களிலும் வெற்றி பெற்றுள்ளது. இதற்கு மேற்கண்ட திட்டங்கள் முக்கிய காரணம். முக்கியமாக 2009-ல் திமுக அரசு, அருந்ததியர் சமூகத்திற்கு பட்டியல் சாதியினர் ஒதுக்கீட்டில் 3 சதவீத உள் ஒதுக்கீட்டை அறிமுகப்படுத்தியது. இது தற்போது மேற்குப் பகுதியில் கட்சிக்கு உதவுவதாக ஈரோடு மாவட்ட திமுக நிர்வாகிகள் கூறுகின்றனர்.
உச்ச நீதிமன்றம் ஆகஸ்ட் 2024-ல் உள் ஒதுக்கீட்டின் சட்டபூர்வமான தன்மையை உறுதி செய்த பிறகு, மேற்குப் பகுதியில், குறிப்பாக ஈரோடு மாவட்டத்தில், அதிமுக-வை ஆதரித்து வந்த அருந்ததியர் சமூகத்தினரை அணுக எங்களுக்கு மிகவும் எளிதாகிவிட்டது என்றுள்ளார்.
அதிமுக கோட்டை
இதன் மூலம் அதிமுகவின் கோட்டையான கொங்கில் திமுக வளர தொடங்கி உள்ளது.. அரசியல் ஆய்வாளர்கள் கூறுகையில், 2026 சட்டமன்றத் தேர்தல்களில் இரண்டு முக்கிய காரணிகள் மேலோங்கும். ஒன்று, சாதி அடிப்படையிலான வாக்குகள்.
மற்றொன்று, முதலீடுகள், மதச்சார்பின்மை, மொழி, கூட்டாட்சி தத்துவம், சுகாதாரம் மற்றும் வேலைவாய்ப்புத் திட்டங்கள் குறித்த விவாதங்களை உள்ளடக்கிய இந்துத்துவம் மற்றும் திராவிட அல்லது இந்துத்துவ எதிர்ப்பு அரசியல் இடையேயான சித்தாந்தப் போட்டி," என்றார் அவர்.
பெண்களுக்கான ₹1,000 நிதி உதவி குடும்ப பட்ஜெட்டின் பகுதியாக மாறிவிட்டது. இது பெண்கள் இடையே பெரிய வரவேற்பை பெற்றுள்ளது. கொங்கு மண்டலத்தில் ஓனர்களாக இல்லாமல் தினக்கூலிகளாக இருப்பவர்களுக்கு இது பெரிதும் உதவும். 'எனக்கு இதைத் தவிர வேறு என்ன இருக்கிறது?' என்பதே வாக்காளர்கள் இப்போது கேள்வி கேட்கும் அளவிற்கு இந்த திட்டம் உதவுகிறது. அதனால் அவர்களின் வாக்குகள் திமுகவிற்கு சாதகமாக வரும். இப்போது கோவையில் செந்தில் பாலாஜி நிற்க போவதாக வரும் செய்திகளால்.. கரூர், கோவை இரண்டிலும் திமுக பெரிய அளவில் இடங்களை வெல்லும்.. இது மற்ற கொங்கு மண்டல மாவட்டங்களையும் சென்று சேரும் என்று கூறப்படுகிறது.
-
ஒதுங்கும் துரைமுருகன்.. திமுகவின் புதிய பொதுச்செயலாளராகிறாரா ஆ.ராசா? உதயநிதி ஸ்டாலினும் ஆதரவாம்! -
ஸ்டாலினுக்கு அதிர்ச்சி கொடுத்த கருணாநிதி! திநகர் மாஜி எம்எல்ஏவை தட்டி தூக்கிய தவெக! -
தாத்தா காலத்து பாலிடிக்ஸ் வேலைக்கு ஆகாது! உதய் போடும் மாஸ்டர் ப்ளான்! இனி Gen Z ஸ்டைல் தானாமே! -
நேற்று பெய்த மழையில் இன்று முளைத்த விஷக்காளான் நீங்க! விஜய் குறித்து திமுக ஐடி விங்க் விமர்சனம் -
திமுக நாசமா போக காரணமே நாமதான்..ஒரிஜினல் திமுககாரன வளர்த்து விடுங்க! மேடையில் வெடித்த மாஜி மூர்த்தி! -
“திமுக தயவில்தான் தவெக ஆட்சி நடக்கிறது.. நான்தான் வழியனுப்பி வைத்தேன்”.. ஸ்டாலின் ஓபன் டாக்! -
உதயநிதியின் தவறுக்கான தண்டனைதான்.. திமுகவின் தோல்வி! ராகுல் காந்தியை இழுக்காதீங்க - மாணிக்கம் தாகூர் -
“தனது தலையில் தானே மண் அள்ளிப் போட்டுக் கொண்டுள்ளார் ராகுல்..” முரசொலி சரமாரி விமர்சனம்! -
"இது அதுல்ல?.. ஜனநாயகத்தை சிதைப்பதில் பாஜகவும் தவெகவும் ஒண்ணு” - திமுக சரமாரி அட்டாக்! -
காங். துரோகம்.. மனக்காயத்தில் தொண்டர்கள்! இந்திய கூட்டணி கூட்டத்தில் பங்கேற்க மாட்டோம்! - திமுக -
இந்தியா கூட்டணியில் இனி திமுக இல்லை? காங்கிரஸின் செயலால் பாஜகவிற்கு மிகப்பெரிய ஜாக்பாட் -
“ஒரு இயக்கம்.. இன்னொரு இயக்கத்தின் சின்னத்தில் போட்டியிடக்கூடாது” - துரை வைகோ!












Click it and Unblock the Notifications