காங்கேயம் காளையுடன்.. ஜாலியாக ஒரு வாக்கிங்.. கண நேரத்தில் கவனம் ஈர்த்த திமுக வேட்பாளர்
கோவை: தொண்டாமுத்தூர் தொகுதியில் போட்டியிடும் திமுக வேட்பாளர் கார்த்திகேய சிவசேனாபதி காங்கேயம் காளையுடன் நடைப்பயிற்சி மேற்கொண்டார்.
தமிழக சட்டசபை தேர்தலில் பலராலும் உற்று நோக்கப்படும் ஒரு தொகுதியாகக் கோவை தொண்டாமுத்தூர் தொகுதி மாறியுள்ளது. இங்கு அதிமுக சார்பில் அமைச்சர் வேலுமணி களமிறங்குகிறார்.

அவரை எதிர்த்து திமுக சார்பில் கார்த்திகேய சிவசேனாபதி போட்டியிடுகிறார். ஜல்லிக்கட்டு போராட்டத்தின் போது கவனிக்கப்பட்ட முக்கிய நபர்களில் ஒருவராகக் கார்த்திகேய சிவசேனாபதி இருந்தார். இவர் தற்போது திமுகவின் சுற்றுச்சூழல் அணியின் மாநிலச் செயலாளராக உள்ளார்.

தொண்டாமுத்தூர் தொகுதியில் அமைச்சர் எஸ்பி வேலுமணிக்கு செல்வாக்கு அதிகம் என்பதால், மக்களின் மனங்களைக் கவரக் கார்த்திகேய சிவசேனாபதி பல்வேறு யுக்திகளை கடைப்பிடித்து வருகிறார்.
இந்நிலையில் இன்று அவர் கோவை டி.பி.சாலை ஆர். எஸ்.புரம் அருகில் காங்கேயம் காளையுடன் நடைப்பயிற்சி மேற்கொண்டார். தேர்தல் விதிகளின்படி பிரசாரத்துக்கு விலங்குகளைப் பயன்படுத்தக் கூடாது.
இதனால் காங்கேயம் காளையுடன் அவர் நடைப்பயிற்சி மட்டும் மேற்கொண்டார். டி பி சாலை அன்னபூரணா முதல் நான்கு சாலை சந்திப்பு வரை காளையுடன் அவர் வாக்கிங் சென்றார். காளையை கண்டதும் அங்கு நடைப்பயிற்சி மேற்கொண்டிருந்தவர்கள், ஜாலியாக செல்ஃபிகளை தெறிக்கவிட்டனர்.












Click it and Unblock the Notifications