அசையவே இல்லை.. கார் சீட்டில் "கல் மகள்".. கோவை பஸ் ஸ்டாப்பில் முடியை விடாத தாய்.. பரபர கோயம்புத்தூர்
கோவை: கோவையில் நடந்த சம்பவம் கடந்த 2 நாட்களாகவே இணையத்தில் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது. இது தொடர்பான வீடியோவும் இணையவாசிகளின் கவனத்தை திரும்பி பார்க்க வைத்து வருகின்றன.
தஞ்சையை சேர்ந்த தம்பதி மணிவேல் - கோமளவள்ளி.. இவர்களது மகள் மோகனா, கோவை மாவட்டம் கருமத்தம்பட்டியில் ஒரு தனியார் பஞ்சாலையில் வேலைபார்த்து வருகிறார்.

வெளியூர்: சம்பவத்தன்று, மோகனா வெளியூருக்கு செல்வதற்காக, தன்னுடைய அம்மா கோமளவள்ளியுடன், கருமத்தம்பட்டி பஸ் ஸ்டாண்டுக்கு வந்திருக்கிறார். அப்போது திடீரென ஒரு கார் வந்து, பஸ் ஸ்டாண்டில் நின்றுள்ளது. உடனே மோகனா, அந்த காரில் ஓடிச்சென்று ஏற முயன்றார். இதைப்பார்த்து பதறிப்போன கோமளவள்ளி, ஓடிச்சென்று தன்னுடைய மகளை தடுத்து நிறுத்தினார்.
ஆனால், அதற்குள் காரிலிருந்த இளைஞர்கள் திபுதிபுவென கீழே இறங்கி, மோகனாவை காருக்குள் தள்ள முயன்றனர். ஒருபக்கம் தாய், மறுபக்கம் இளைஞர்கள் என மாறி மாறி மோகனாவை பிடித்து இழுத்தனர். மோகனா காரை பிடித்து கொள்ள, கோமளவள்ளி மோகனாவின் தலைமுடியை பிடித்துக் கொள்ள, அப்படியே ரோட்டில் ஓடினார்கள். தாயின் கதறலையும், போராட்டத்தையும் கண்ட பொதுமக்கள், ஓடிச்சென்று காரை சுற்றி வளைத்து நிறுத்திவிட்டனர்.
இளைஞர்கள்: பிறகு, காரிலிருந்தவர்களை வெளியே இறங்கி வர சொன்னார்கள். அந்த இளைஞர்களோ, மோகனாவை காருக்குள் உட்காரவைத்துவிட்டு, அவர்கள் மட்டும் இறங்கி வந்தனர்.. இதனால் கொதிப்படைந்த சிலர் இளைஞர்களை தாக்க முயன்றனர். கோமளவள்ளி, காரின் பின்சீட்டில் உட்கார்ந்திருந்த மோகனாவிடம் சென்று அழுது கொண்டே , அவரது கையை பிடித்து இழுத்தார். அப்போதுகூட மோகனா அசையவே இல்லை. கீழே இறங்கி வரவும் இல்லை.
அதற்குள் போலீசார் விரைந்து வந்து அனைவரையும் ஸ்டேஷனுக்கு அழைத்து சென்றனர். அதேபோல, கோமளவள்ளியிடமிருந்தும், இளைஞர்களிடமிருந்தும் மோகனாவை மீட்ட பெண் போலீசார், தங்களது டூவீலரில் ஸ்டேஷனுக்கு அழைத்து சென்றனர். அனைவரிடம் விசாரணை மேற்கொண்டபோதுதான் மோகனகாவின் காதல் அம்பலமானது.
காதல்: மதுக்கரை பகுதியை சேர்ந்த டேனியல் என்பவரை மோகனாவும் 2 வருடமாக காதலித்து வருகிறாராம். இந்த விஷயம் வீட்டிற்கு தெரிந்ததால், காதலுக்கு குறுக்கே நின்றுள்ளனர். அதனால்தான் வீட்டை விட்டு வெளியேறி திருமணம் செய்ய முடிவு செய்துள்ளதாக போலீசாரிடம் சொன்னார்..
இதற்கு பிறகு, மோகனாவிடம் போலீசார் பேச்சுவார்த்தை நடத்தினார்கள்.. ஆனால், காதலனை திருமணம் செய்தே தீருவேன் என்று போலீசாரிடம் திடமாக சொன்னார் மோகனா. இதைக்கேட்டு கதறிய தாய், மகளிடம் என்னென்னவோ பேசினார்.. அழுதுகொண்டே சமாதானம் செய்தார்.. ஆனால், தன்னுடைய அம்மாவுடன் செல்ல மோகனா மறுத்துவிட்டார்.. இதனால், துடியலூர் பகுதியில் உள்ள காப்பகத்துக்கு போலீசார் மோகனாவை அனுப்பி வைத்திருக்கிறார்கள். மற்றவர்களை திருப்பி அனுப்பி வைத்தனர்.
பதறிய தாய்: ஆனால், மகளை பிடித்து இழுத்து, தடுத்து நிறுத்த முயன்ற தாய், அந்த காரின் பின்னாலேயே ஏக்கத்துடனும், பதற்றத்துடனும் ஓடிச்செல்லும் வீடியோ கடந்த 2 நாட்களாகவே இணையத்தில் வைரலாகி பரபரப்பை தந்து வருகிறது. இதற்கு நெட்டிசன்கள் பலரும், தாயின் பதற்றத்தை கண்டு, தங்களது கருத்துக்களை பதிவிட்டு வருகிறார்கள்.
'இந்த காதல் என்றைக்கும் நிலைக்காது. நல்லவன் என்றால் பெற்றதாயுடன் வரும் பெண்ணை இப்படி அபகரிக்க துணியமாட்டானே? வீட்டிற்கு பெற்றோருடன் போய் பெண் கேட்பான்' என்று பதிவிட்டு வருகிறார்கள்.
அம்மா பாவம்: மேலும் சிலர், "இதுக்கு தான் பெண் குழந்தை பிறந்தாலே பெற்றவர்கள் பயப்படுறாங்க. யாரை நம்பி பெற்ற தாயை தவிக்க விட்டு போக முயல்கிறாரோ, கடைசியில் அந்த பெண்ணின் காதலனே நடுரோட்டில் விட்டு செல்லவும் தயங்க மாட்டான்.. தாயை தவிக்க விட்டு இப்படியொரு காதல் தேவையா? இவ்வளவு வலுக்கட்டாயம் ஒருவன் கடத்தி செல்கிறான் என்றால் அந்த வாழ்க்கை எப்படி இருக்கும்? அந்த தாய் பாவம்?" என்றெல்லாம் அனுதாப கமெண்ட்கள் எழுந்தவாறே உள்ளன.












Click it and Unblock the Notifications