பணம் வரும்.. ஆனா வராது.. ஏடிஎம்களில் டேப் ஒட்டி நூதன திருட்டு.. கோவை மக்களை அலற விடும் மர்ம கும்பல்!
கோவை: கோவையில் நூதன முறையில் ஏடிஎம் மையத்தில் திருடும் சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. புது டெக்னிக்கை கையாண்டு ஏடிஎம் மையங்களில் நூதன திருட்டில் ஈடுபடும் மர்ம கும்பலுக்கும் வடமாநில கொள்ளை கும்பலுக்கும் தொடர்பு உள்ளதா? என போலீசார் விசாரித்து வருகின்றனர்.
கோவை நகரில் பல்வேறு இடங்களில் வங்கி ஏடிஎம் இயந்திரங்கள் செயல்பட்டு வருகின்றன. ஏடிஎம் மையங்களை குறிவைத்து அவ்வப்போது நூதன முறையில் திருட்டு சம்பவங்கள் அரங்கேறி வருகின்றன. ஏடிஎம் மையங்களில் பணம் எடுக்க வரும் முதியவர்கள் மற்றும் எடுக்க தெரியாதவர்களை குறி வைத்து உதவி செய்வது போல் நடித்து பணம் எடுத்து மோசடி செய்யும் சம்பவம் நடைபெற்று வந்தது.

தற்போது மோசடி நபர்கள் நூதன முறையை கையாண்டு திருட்டில் ஈடுபட்டு வருகின்றனர். மர்ம நபர்கள், ஏடிஎம் மையத்தில் பணம் வரும் பகுதியை டேப் போட்டு ஒட்டி விட்டு சென்று விடுகின்றனர். இதை அறியாத வாடிக்கையாளர்கள் பணம் எடுக்க பின் நம்பரை பதிவு செய்தவுடன் பணம் எண்ணுவது போல சத்தம் மட்டுமே வரும். ஆனால், பணம் வெளியே வராது. வழக்கமாக பணம் வரவில்லையென்றால் சிறிது நேரத்தில் அந்த பணம் நமது வங்கி கணக்கில் வந்து விடும் என்பதால், வாடிக்கையாளர்கள் சென்று விடுகின்றனர்.
ஆனால் பணம் வெளியேயும் வராமல், ஏடிஎம் இயந்திரத்திற்கு உள்ளேயும் செல்லாமல் சிக்கிக்கொண்டு இருக்கும். அதன் பிறகு நோட்டமிடும் மர்ம நபர்கள் அங்கு வந்து அந்த டேப்பை எடுத்துவிட்டு பணத்தை எடுத்துச் செல்வதை வாடிக்கையாக வைத்துள்ளனர். இப்படி கோவையில் ஒருவர் 30,000 பணம் எடுக்க முயன்றபோது பணம் வராமல் இருந்த நிலையில், அவர் வங்கியில் புகார் அளித்துள்ளார். அதன் பிறகுதான் மர்ம கும்பலால் அவரது பணம் திருடப்பட்டது தெரியவந்தது.
வாடிக்கையாளர்கள் தங்களுக்கு ஏ.டி.எம் எந்திரத்தில் இருந்து பணம் வராத நிலையில் வங்கி கணக்கிற்கு சம்பந்தப்பட்ட பணம் திரும்ப செல்லாததாலும் வங்கிக்கு தொடர்பு கொண்டு புகார் தெரிவித்தனர். இதையடுத்து வங்கி அதிகாரிகள் போலீசாரின் உதவியுடன் சம்பந்தப்பட்ட ஏ.டி.எம் களில் பதிவான சிசிடிவி காட்சிகளை சோதனை செய்தனர். இதில் இரண்டு இளைஞர்கள் ஏ.டி.எம் எந்திரங்களில் பணம் வெளியே வரும் இடத்தில் டேப் ஒட்டி திருட்டில் ஈடுபட்டது தெரிய வந்தது.
இதேபோல், குனியமுத்தூர், ரத்தினபுரி, ஆவாரம்பாளையம், சுந்தராபுரம் உள்ளிட்ட இடங்களில் உள்ள ஐந்துக்கும் மேற்பட்ட ஏடிஎம் மையங்களில் கொள்ளையர்கள் கைவரிசை காட்டி உள்ளனர். இதனால், பாதிக்கப்பட்ட பொதுமக்கள் சம்பந்தப்பட்ட வங்கி அதிகாரிகளிடம் புகார் அளித்தனர். இதையடுத்து அதிகாரிகள் குறிப்பிட்ட வங்கி ஏடிஎம் மையத்திறகு சென்று பார்த்த போது, இயந்திரத்தில் பணம் வெளியே வரும் பகுதியில் சிறிய டேப்பால் ஸ்டிக்கர் போன்று ஒட்டப்பட்டிருந்ததை கண்டு அதிர்ச்சியடைந்தனர்.
இது சாதாரணமாக பார்க்கும் போது வாடிக்கையாளர்களுக்கு தெரியாது. அதனை பயன்படுத்தி இந்த மர்ம கும்பல் தொடர் திருட்டு வேலையில் ஈடுபட்டு வருகிறது. போலீசார் ஏடிஎம் மையத்தில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி கேமரா காட்சிகளை ஆய்வு செய்து மர்ம ஆசாமிகளை தேடி வருகின்றனர்.
ரத்தனபுரி பகுதியில் உள்ள ஏடிஎம் மையத்தில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி கேமராவை போலீசார் ஆய்வு செய்தனர். அதில் ஸ்கூட்டரில் வந்த 2 வாலிபர்கள் ஏடிஎம் மையத்திற்கு சென்று ஸ்டிக்கர் ஒட்டுவதும், பின்னர் அங்கிருந்து வெளியே வந்து காத்திருந்து வாடிக்கையாளர்கள் சென்றபின் பணம் எடுத்துச் செல்வதும் பதிவாகி உள்ளது.
போலீசார் நடத்திய விசாரணையில் அந்த இரண்டு இளைஞர்களும் உத்தர பிரதேசத்தை சேர்ந்தவர்கள் என்பதும், சமீபத்தில் சென்னையில் இது போல் அவர்கள் கைவரிசை காட்டி போலீசில் சிக்கி வெளியே வந்ததும் தெரியவந்தது. இந்த கும்பலுக்கும், நாமக்கல் மாவட்டம் குமாரபாளையத்தில் கண்டெய்னருடன் பிடிபட்ட ஏடிஎம் கொள்ளையர்களுக்கும் தொடர்பு உள்ளதா? என போலீசார் விசாரித்து வருகின்றனர்.
போலீசார் நூதன முறையில் ஏடிஎம்களில் கைவரிசை காட்டும் கொள்ளை கும்பலை தீவிரமாக தேடி வருகின்றனர். இதற்காக தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது. மேலும், ஏடிஎம் மையங்களில் பணம் எடுக்கும்போது எச்சரிக்கையாக இருக்கவும் பொதுமக்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications