கோவையை உலுக்கிய துப்பாக்கிச்சூடு.. போலீசாரை நோக்கி துப்பாக்கியை திருப்பிய ரவுடி.. சுட்டுப் பிடிப்பு!
கோவை: கோவையில் துப்பாக்கி கலாச்சாரம் தலைதூக்கி உள்ளது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. ரவுடி ஒருவரிடம் ஆயுதங்களை கைப்பற்றச் சென்றபோது அவர் போலீசாரை நோக்கி துப்பாக்கியால் சுட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அந்த ரவுடியை போலீசார் சுட்டுப் பிடித்துள்ளனர்.
கோவை மாவட்டம் கோவில்பாளையம் பகுதியைச் சேர்ந்தவர் ரவுடி ஹரிஸ்ரீ. இவர் மீது பல்வேறு கிரிமினல் வழக்குகள் காவல் நிலையங்களில் நிலுவையில் இருப்பதாக கூறப்படுகிறது. அண்மையில் பீகாருக்கு சென்ற ரவுடி ஹரிஸ்ரீ, அங்கிருந்து கள்ளத் துப்பாக்கிகளை வாங்கி வந்து கோயம்புத்தூரில் விற்பனை செய்து வருவதாக போலீசாருக்கு தகவல் கிடைத்துள்ளது. இதைத் தொடர்ந்து, பீளமேடு போலீசார் ஹரிஸ்ரீ வீட்டில் சோதனை நடத்தி, அவரை கைது செய்தனர். இந்த வழக்கில் ரவுடி ஹரிஸ்ரீ, அண்மையில் ஜாமீனில் வெளியே வந்தார்.

இந்நிலையில் ரவுடி ஹரிஸ்ரீக்கு திருச்சியை சேர்ந்த சக்திவேல் என்பவருடன் காளப்பட்டி பகுதியில் தகராறு ஏற்பட்டுள்ளது. அப்போது ஆத்திரம் அடைந்த ஹரிஸ்ரீ சட்டவிரோதமாக மறைத்து வைத்திருந்த நாட்டுத் துப்பாக்கியை எடுத்து வானில் சுட்டு சக்திவேலை மிரட்டியதாகக் கூறப்படுகிறது. இதையடுத்து பயந்து போன சக்திவேல் இது குறித்து காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அதன் பேரில் போலீசார் வழக்குப் பதிவு செய்து ஹரிஸ்ரீயை கைது செய்தனர்.
அவரிடம் தொடர்ந்து விசாரணை நடத்தினர். அப்போது, தன்னிடம் மற்றுமொரு நாட்டு துப்பாக்கி இருப்பதையும் அவர் ஒப்புக் கொண்டார். அதைக் கைப்பற்றுவதற்காக, செரையாம்பாளையம் பகுதிக்கு போலீசார் அவரை அழைத்து சென்றனர். அவரிடம் இருந்து துப்பாக்கியை கைப்பற்ற முயன்ற போது ஹரிஸ்ரீ திடீரென தப்பிக்க முயற்சித்து போலீசாரை சுட முயன்றுள்ளார். இதையடுத்து தற்காப்புக்காக போலீசார் ஹரிஸ்ரீயின் இடது காலில் துப்பாக்கியால் சுட்டனர். துப்பாக்கிக் குண்டு பாய்ந்து அவர் அங்கேயே சரிந்து விழுந்தார். பின்னர், அவரிடம் இருந்த துப்பாக்கியை போலீசார் பறிமுதல் செய்தனர்.
பின்னர் காயமடைந்த ரவுடி ஹரிஸ்ரீயை மீட்டு கோவையில் உள்ள அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். கைது செய்யப்பட்ட ஹரிஸ்ரீ மீது ஏற்கனவே பீளமேடு காவல் நிலையத்தில் ஆயுத தடைச் சட்டத்தின் கீழ் வழக்கு நிலுவையில் உள்ளது. இந்த துப்பாக்கிச் சூடு சம்பவம் குறித்து போலீசார் தொடர்ந்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
கோவை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் கார்த்திகேயன், சம்பவ இடத்திற்கு நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டு விசாரணை நடத்தினார். போலீசார் மீது ரவுடி துப்பாக்கிச் சூடு நடத்திய சம்பவம் கோவை மக்கள் மத்தியில் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது. கோவையில் துப்பாக்கி கலாச்சாரம் தலைதூக்கி விட்டதா என பொதுமக்கள் அச்சம் தெரிவித்து வருகின்றனர்.












Click it and Unblock the Notifications