நாக்கு துண்டாகி.. தாடையில் காயமடைந்து.. ஒரு மாதமாக வலியுடன் போராடிய மக்னா யானை உயிரிழப்பு
கோவை: கோவை வனப்பகுதியில் வாயில் பலத்த காயத்துடன் சுற்றித் திரிந்த மக்னா யானை இன்று சோலையூர் வனப்பகுதியில் உயிரிழந்துவிட்டது. இதையறிந்த விலங்குகள் நல ஆர்வலர்கள் கவலையில் ஆழ்ந்துள்ளனர்.
Recommended Video
கோவை மாவட்டத்தில் யானைகள் தந்தத்துக்காக கொல்லப்படும் சம்பவம் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியது. தந்தங்களை எடுக்க அவை உண்ணும் உணவில் வெடிமருந்து வைத்து சமூக விரோதிகள் அவற்றின் உயிருக்கே உலை வைப்பது தெரியவந்தது.
இந்த நிலையில் கேரளாவில் அன்னாசி பழத்தில் வெடிமருந்து வைக்கப்பட்டதை அறியாத பெண் யானை வயிற்றில் குட்டி இருந்த நிலையில் அதை சாப்பிட்டதால் வாய் சிதறி பலியானது.

வலியுடன் சுற்றிய யானை
அது போல் போட்ஸ்வானாவிலும் யானைகள் மர்மமான முறையில் உயிரிழந்தது வனவிலங்குகள் நல ஆர்வலர்களை கவலை கொள்ள வைத்தது. இந்த நிலையில் அவுட்டுக்காய் எனும் வெடிமருந்தை சாப்பிட்ட மக்னா யானையின் வாய் சேதமடைந்து கடந்த ஒரு மாதமாக வலியுடனே சுற்றி வந்தது. இந்த யானை கேரள, தமிழக வனத்துறைக்கு மாறி மாறி சென்று வந்தது.

உயிர் வாழ முடியாது
இந்த யானையை இரு மாநில வனத்துறையினரும் ஆய்வு செய்தனர். அதில் அவுட்டுக்காய் வெடித்ததில் யானையின் நாக்கு துண்டிக்கப்பட்டு, மேல் தாடை கிழிந்துவிட்டது. இதனால் உணவு உண்ண முடியாமல் அவதிப்பட்டது தெரியவந்தது. யானைக்கு இரு மாநில வனத்துறையினரும் சிகிச்சை அளித்தும் பலனில்லை என்றும் வாயில் காயமடைந்ததால் யானையால் நீண்ட காலம் உயிர் வாழ முடியாது என்றும் மருத்துவர்கள் தெரிவித்தனர்.

தமிழகம்
இந்த நிலையில் இதையடுத்து யானை ஆகஸ்ட் 27-ஆம் தேதி தமிழகத்தில் உள்ள போலவம்பட்டி வரம்பில் உள்ள தேவராயபுரம் பகுதியில் நுழைந்தது. கோவை வன வனக்கோட்ட பணியாளர்கள் அன்றிலிருந்து தொடர்ந்து யானையினை கண்காணித்து வந்தனர்.

வரபாளையம்
இதற்கிடையில் மருதமலை, நஞ்சுண்டாபுரம், வரபாளையம் மற்றும் ஜம்புகண்டி பிரிவு பகுதிகளில் 7 வீடுகளையும் இந்த யானை அரிசி சாப்பிடுவதற்காக சேதப்படுத்தியது. செப்டம்பர் 5-ஆம் தேதி தடாகம் வனப்பகுதியில் சுற்றி திரிந்த யானை தற்போது சோலையூர் வனப்பகுதியில் இறந்து கிடந்தது வன விலங்குகள் ஆர்வலர்கள் மத்தியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.












Click it and Unblock the Notifications