”உயர்ந்த தலைவரை பற்றி பேசுகிறேன்.. யாரையோ பற்றி கேட்கிறீர்கள்” மோடி பற்றிய கேள்வியால் வைகோ காட்டம்!
கோவை: பிரதமர் நரேந்திர மோடி குறித்த கேள்வியால் மதிமுக பொதுச்செயலாளர் வைகோ கோபமடைந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சுதந்திரப் போராட்ட வீரர் வ.உ.சிதம்பரனாரின் 151வது பிறந்தநாள் விழா இன்று கொண்டாடப்பட்டு வருகிறது. இதனையொட்டி கோவை மத்திய சிறையில் அவர் இழுத்த செக்கிற்கு அஞ்சலி செலுத்த பொதுமக்கள், அரசியல் கட்சியினர் என ஏராளமானோர் வருகின்றனர்.
இதன் ஒரு பகுதியாக மதிமுக பொதுச்செயலாளர் வைகோ வ.உ.சிதம்பரனார் இழுத்த செக்கிற்கு மலர்தூவி மரியாதை செலுத்தினார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்து வைகோ கூறுகையில், வ.உ.சிதம்பரனார் பல சித்திரவதைகளை அனுபவித்து, செக்கிழுத்த கொடுமை நடந்தது இந்த சிறையில்தான். வ.உ.சி இழுத்த செக்கை தொட்டு பார்த்து வணக்கம் செலுத்த வந்துள்ளேன் என்று தெரிவித்தார்.

கோபமடைந்த வைகோ
தொடர்ந்து வ.உ.சி-யின் போராட்ட வரலாற்றை பற்றி பேசிய அவர், தூத்துக்குடி என்று சொன்னால் வ.உ.சி என்ற பெயர் நீடித்து இருக்கும் என்று தெரிவித்தார். அதேபோல் பிரதமர் மோடி படத்தை அரசு அலுவலகங்களில் வைப்பது குறித்த கேள்விக்கு, உயர்ந்த தலைவரை பற்றி பேசிக் கொண்டிருக்கிறேன். ஆனால் நீங்கள் யாரையோ பற்றி கேட்கிறீர்கள் என்று காட்டமாக பதில் அளித்தார்.

எஸ்.பி.வேலுமணியுடன் சந்திப்பு
அதே சமயம் அதிமுக கொறடாவும் முன்னாள் அமைச்சருமான வேலுமணியும் செக்கிற்கு மரியாதை செலுத்தி விட்டு வந்த போது வைகோவும், வேலுமணியும் மரியாதை நிமித்தமாக சந்தித்து ஒருவருக்கு ஒருவர் நலம் விசாரித்து கொண்டனர். அப்போது வடக்கு சட்டமன்ற உறுப்பினர் அம்மன் அர்ஜுனன் உட்பட அதிமுக நிர்வாகிகள் பலர் உடனிருந்தனர்.

நிர்மலா சீதாராமன் சர்ச்சை
அண்மையில் தெலங்கானா மாநிலத்தில் ரேஷன் கடைக்கு சென்ற மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், மாவட்ட ஆட்சியரிடம் ரேஷன் அரிசிக்கு மத்திய அரசு வழங்கும் மானியம் எவ்வளவு, பிரதமர் மோடியின் படம் எங்கே என்று கேள்வி எழுப்பியது தேசிய அளவில் பேசுபொருளாகியது. இதுகுறித்து பல்வேறு தலைவர்களும் கருத்து தெரிவித்து வந்தனர்.

பாஜகவுக்கு எதிராக வைகோ
அண்மைக் காலமாக மதிமுக பொதுச்செயலாளர் வைகோ, பாஜக மற்றும் பிரதமர் நரேந்திர மோடியை கடுமையாக விமர்சித்து வருகிறார். சில நாட்களுக்கு முன், தமிழ்நாட்டிற்கு வரும்போது தமிழில் பேசும் பிரதமர் மோடி, வடமாநிலங்களில் இந்தி மற்றும் சமஸ்கிருதத்தை பெருமையாக பேசுவதாக விமர்சித்தது பாஜகவினர் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தியது.












Click it and Unblock the Notifications