1 ரூபா கொடுத்தால் 29 பைசாதான் ரிட்டன் வருது! வரி பகிர்வு குறித்து.. மத்திய அரசு மீது உதயநிதி தாக்கு
கோயம்புத்தூர்: வரி பகிர்வு குறித்த தென் மாநிலங்கள், மத்திய அரசை எதிர்த்து சண்டை செய்ய தொடங்கியுள்ளன. இந்நிலையில் அரசு நலத்திட்டங்களை தொடங்கி வைத்த அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், தமிழ்நாடு ரூ.5 லட்சம் கோடியை வரியாக கொடுத்தால், ரூ.1.58 லட்சம் கோடிதான் மத்திய அரசு ரிட்டன் தருகிறது என குற்றம்சாட்டியுள்ளார்.
கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் 22ம் தேதி மத்திய நிதியமைச்சகம் மாநிலங்களுக்கான வரி பகிர்வு குறித்த அறிக்கையை வெளியிட்டது. அதாவது, மொத்தமாக ரூ.72,961 கோடி விடுவிக்கப்பட்டது. இதில், அதிகபட்சமாக வரி பகிர்வு வழங்கப்பட்டுள்ள முதல் 5 மாநிலங்களில் 4 மாநிலங்கள் பாஜக ஆளும் மாநிலங்கள் அல்லது பாஜகவுடன் கூட்டணியில் உள்ள மாநிலங்களாகும்.

தமிழ்நாடு: விரிவாக சொல்வதெனில், உத்தரப் பிரதேசத்துக்கு 13088 கோடி ரூபாயும், பிகாருக்கு 7338 கோடி ரூபாயும் விடுவிக்கப்பட்டுள்ளது. மத்தியப் பிரதேசத்துக்கு 5727 கோடி ரூபாயும், மேற்கு வங்கத்துக்கு 4488 கோடி ரூபாயும், மகாராஷ்டிராவுக்கு 4609 கோடியும், ராஜஸ்தானுக்கு 4396 கோடி ரூபாயும், தமிழ்நாட்டிற்கு 2976 கோடியும் வரி பகிர்ந்தளிக்கப்பட்டிருக்கிறது. தேசிய அளவில் அதிக வரி செலுத்தும் மாநிலங்களில் முன்னணியில் இருக்கும் தமிழ்நாட்டு, வரியை திரும்ப பெறுவதில் மட்டும் ஏன் 7வது இடத்திற்கு தள்ளப்பட்டிருக்கிறது என மத்திய அரசை நோக்கி தமிழக அரசியல் தலைவர்கள் பலர் கேள்வியெழுப்பியிருந்தனர்.
தமிழ்நாட்டை தொடர்ந்து, கர்நாடக அரசும் வரி பகிர்வு குறித்து கேள்வி எழுப்ப தொடங்கியது. அதாவது, "நிதி ஆணையம் கர்நாடகாவுக்கான நிதி ஒதுக்கீட்டை குறைத்துவிட்டது. நிதி இழப்பை சரி செய்ய கர்நாடகாவுக்கு ரூ5,495 கோடி சிறப்பு நிதி ஒதுக்க பரிந்துரைத்தது நிதி ஆணையம். இதை மத்திய அரசு தரவே இல்லை. கடந்த 15 ஆவது நிதி ஆணையம் கர்நாடகாவுக்கு ரூ73,593 கோடி நிதியை குறைத்துவிட்டது.
கர்நாடகா, மத்திய அரசுக்கு ரூ100 கொடுத்தால் எங்களுக்கு ரூ12 அல்லது ரூ13 தான் தருகிறது. கர்நாடகா மட்டும் ஆண்டுக்கு ரூ4.30 லட்சம் கோடி வரி செலுத்துகிறது. இதில் வெறும் ரூ50,257 கோடிதான் கர்நாடகாவுக்கு கிடைக்கிறது. 15-வது நிதி ஆணையத்தை அமைத்த பின்னர் ரூ.1.87 லட்சம் கோடி இழப்பு கர்நாடகாவுக்கு ஏற்பட்டிருக்கிறது" என அம்மாநில முதலமைச்சர் சித்தராமையா கொந்தளித்தார். மட்டுமல்லாது இது தொடர்பாக டெல்லியில் போராட்டத்தையும் நடத்தினார்.
கேரளாவை பொறுத்த அளவில், "தேசிய அளவில் வரி பகிர்வில் தென் மாநிலங்களுக்கு குறைவான தொகை மட்டுமே கொடுக்கப்படுகிறது. குறிப்பாக, கேரளா இந்த குறைவான வரி பகிர்வால் கடுமையாக பாதிக்கப்பட்டிருக்கிறது" என்று கூறி கேரள அமைச்சர்கள், எம்பிக்களை திரட்டி கட்ந்த 8ம் தேதி டெல்லியில் மத்திய அரசுக்கு எதிரான போராட்டத்தில் ஈடுபட்டார் அம்மாநில முதலமைச்சர் பினராயி விஜயன். அதேபோல தமிழ்நாட்டு எம்பிக்களும் கருப்பு சட்டை அணிந்து நாடாளுமன்றத்தில் மத்திய அரசுக்கு கண்டனம் தெரிவித்தனர்.
இப்படியாக, மத்திய அரசுக்கு எதிராக மாநில அரசுகள் வரிசைக்கட்டி நிற்க, அரசியல் களம் சூடுபிடித்திருக்கிறது. இந்நிலையில் இன்று கோயம்புத்தூரில் அரசு நலத்திட்டங்களை தொடங்கி வைத்த அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் மத்திய அரசின் வரிப்பகிர்வு குறித்து விமர்சித்துள்ளார்.
அவர் பேசியதாவது, "மத்திய அரசுக்கு தமிழ்நாடு வரியாக ஒரு ரூபாய் கொடுத்தால், பதிலுக்கு வரி பகிர்வாக வெறும் 29 பைசாதான். இருப்பினும் இந்த கடும் நிதி நெருக்கடிக்கு மத்தியில் நம்முடைய கழக அரசு பல்வேறு நலத்திட்டங்களை தமிழ்நாட்டு மக்களுக்காக தொடர்ந்து செயல்படுத்தி வருகிறது. பொதுமக்களாகிய உங்களை இந்த திட்டங்களின் பயனாளர்களாக அல்லாமல், பங்கேற்பாளராகவே இந்த அரசு உங்களை பார்க்கிறது. அடுத்து வரும் இரண்டு மாதங்கள் மிக முக்கியமானவை. எனவே கடந்தமுறை நடந்த தவறுகளை சரி செய்ய வேண்டும்" என்று கோரிக்கை விடுத்திருக்கிறார்.












Click it and Unblock the Notifications