பீகாரின் காற்று தமிழ்நாட்டில் வீசுகிறதோ! தென்னகத்தின் சக்தி பீடம் கோவை.. பிரதமர் மோடி
கோவை: தென்னிந்திய இயற்கை வேளாண் மாநாட்டை தொடங்கி வைக்க மேடைக்கு வந்த போது விவசாயிகள் தங்களின் தோளில் இருந்த துண்டை எடுத்து சுற்றியதை பார்த்த போது, பீகாரின் காற்று தமிழ்நாட்டிலும் வீசுகிறதோ என்ற எண்ணம் தோன்றியதாக பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். மருதமலை முருகனுக்கு தலை வணங்குவதாக கூறிய மோடி, சிபி ராதாகிருஷ்ணன் நமக்கு குடியரசு துணைத் தலைவராக இருந்து வழிகாட்டுவதாகவும் தெரிவிவித்துள்ளார்.
கோவை கொடிசியா மைதானத்தில் தென்னிந்திய இயற்கை வேளாண்மை மாநாட்டை பிரதமர் நரேந்திர மோடி தொடங்கி வைத்துள்ளார். பாஜகவினரின் பிரம்மாண்ட வரவேற்புக்கு பின் அரங்கிற்கு வந்த பிரதமர் மோடி, விவசாயிகள் 10 பேருக்கு விருது வழங்கி கவுரவித்தார். இதன்பின் பிரதமர் மோடி பேசுகையில், பிஆர் பாண்டியனின் உரை மிகச்சிறப்பாக அமைந்தது.

ஆனால் அவரின் உரையை முழுமையாக என்னால் புரிந்து கொள்ள முடியவில்லை. சிறுவயதிலேயே தமிழை கற்று இருக்கலாம் என்று தோன்றுகிறது. அவரின் உரையை மொழியாக்கம் செய்து கொடுக்குமாறு ஆளுநர் ஆர்.என்.ரவியிடம் கேட்டுள்ளேன். புட்டபர்த்தி விழாவுக்கு சென்றதால், இங்கு வருவதற்கு தாமதம் ஆகிவிட்டது. அதனால் விவசாயிகளிடம் மன்னிப்பு கேட்டுக் கொள்கிறேன்.
நான் இந்த அரங்கிற்கு வரும் போது விவசாயிகள் பலரும் தங்களின் தோளில் இருந்த துண்டை கையில் எடுத்து சுழற்றினர். அப்போது பீகாரின் காற்று தமிழ்நாட்டிலும் வீசுகிறதோ என்ற எண்ணம் தோன்றியது. மருதமலை முருகனுக்கு தலை வணங்குகிறேன். கோவை எம்பியாக இருந்த சிபி ராதாகிருஷ்ணன் நமக்கு குடியரசு துணைத் தலைவராக இருந்து வழிகாட்டிக் கொண்டிருக்கிறார்.
தமிழ்நாட்டின் சக்தி பீடமாக கோவை விளங்கி வருகிறது. கோவை ஜவுளித் துறை தேசத்திற்கே பங்களித்து வருகிறது. வேளாண் மாநாடு மூலமாக பல விவசாயிகளுடன் உரையாடக் கூடிய வாய்ப்பு கிடைத்தது. இயற்கை விவசாயம் எனது இதயத்திற்கு மிகவும் நெருக்கமானது. இஸ்ரோவில் சந்திரயான் திட்டத்தில் பணிபுரிந்துவிட்டு இயற்கை விவசாயம் செய்ய வந்துவிட்டார் ஒருவர்.
கோவைக்கு வராமல் இருந்திருந்தால் பல விஷயங்களை தெரிந்து கொள்ளாமல் போயிருக்கும். இயற்கை வேளாண்மையின் சர்வதேச மையமாக உருவெடுக்கும் பாதையில் இந்தியா பயணித்துக் கொண்டிருக்கிறது. இந்திய இளைஞர்கள் விவசாயத்தை நவீனமயமானதாக பார்க்க தொடங்கி இருக்கிறார்கள். கடந்த 11 ஆண்டுகளில் ஒட்டுமொத்த வேளாண் துறையிலும் மிகப்பெரிய மாற்றம் ஏற்பட்டுள்ளது.
விவசாயத்தை நவீனப்படுத்த தேவையான அனைத்து வழிகளையும் அரசு திறந்துவிட்டுள்ளது. கிஷான் கிரெடிட் கார்டு திட்டத்தில் ரூ.10 லட்சம் கோடிக்கும் அதிகமாக விவசாயிகளுக்கு நிதி வழங்கி இருக்கிறோம். இந்த திட்டத்தால் தமிழ்நாட்டிலும் பல ஆயிரம் விவசாயிகள் பயன் பெற்றுள்ளனர். ரசாயன உரங்களால் நமது மண்ணின் வளம் அழிந்து கொண்டே செல்கிறது.
ரசாயன உரங்கல் ஏற்படுத்தும் தாக்கத்தில் இருந்து பாதுகாத்துக் கொள்ள மாற்றுப் பயிர், இயற்கை விவசாயம் அவசியம். ரசாயன உரங்களின் பயன்பாட்டால் விவசாயத்தின் செலவீனமும் அதிகரித்து வருகிறது. இயற்கை விவசாயத்தில் இந்தியா முன்னேறியே ஆக வேண்டும். பருவ நிலையில் ஏற்படும் மாற்றத்தை எதிர்கொள்ள இயற்கை விவசாயம் பேருதவியாக இருக்கிறது.
மண்ணின் நலத்தை ஆரோக்கியமாக வைக்க இயற்கை வேளாண்மை உதவியாக உள்ளது. இயற்கை விவசாயத்தை ஊக்குவிப்பதில் பாஜக முனைப்புடன் உள்ளது. தமிழ்நாட்டில் மட்டும் 35 ஆயிரம் ஹெக்டேர் பரப்பில் இயற்கை விவசாயம் நடந்து வருகிறது. இயற்கை விவசாயம் என்பது இந்தியாவுக்கு சொந்தமான சுதேசி கருத்தாகும்.
இயற்கை விவசாயத்தை நாம் யாரிடம் இருந்து இறக்குமதி செய்யவில்லை. அது நமது பாரம்பரியத்தில் பிறந்தது. நமது சுற்றுச்சூழலுக்கு உகந்தது. இயற்கை விவசாயத்துடன் சிறு தானியங்கள் விவசாயத்தை இணைக்க வேண்டும். முருகனுக்கு தேனும், திணை மாவையும் நிவேதன பொருட்களாக படைக்கிறோம். தமிழ்நாட்டில் கம்பு, சாமை போன்றவை பல தலைமுறைகளாக நமது உணவில் ஒன்றுடன் கலந்தவை என்று தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications