கோவை தெற்கு தொகுதி மையத்தில் பரபரப்பு: மஞ்சள் துண்டால் செந்தில் பாலாஜிக்கு அனுமதி மறுப்பு!
கோவை: தமிழ்நாடு சட்டமன்ற தேர்தலுக்கான வாக்குப்பதிவு ஏப்ரல் 23 ஆம் தேதி நடைபெற்றது. இதற்கான வாக்குகள் இன்று எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்படவுள்ளன. ஆட்சியை யார் பிடிப்பார்கள் என்பதுடன் கோவையின் நிலவரத்தையும் உற்று கவனித்து வருகிறார்கள். அதிலும் கோவை தெற்கு தொகுதியின் நிலவரத்தை தமிழகமே எதிர்பார்த்துள்ளது. இந்நிலையில், வாக்கு எண்ணிக்கை மையத்திற்கு வருகை தந்த கோவை தெற்கு தொகுதி திமுக வேட்பாளர் செந்தில் பாலாஜி மஞ்சள் துண்டு அணிந்து வந்ததால் காவல் துறையினர் அவருக்கு அனுமதி மறுத்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
தமிழ்நாட்டில் 234 தொகுதிகளுக்கு ஒரே கட்டமாக கடந்த ஏப்ரல் 23ம் தேதி தேர்தல் நடைபெற்றது. 85.10% வாக்குகள் பதிவான நிலையில் இன்று வாக்குகள் எண்ணிக்கை தொடங்கியுள்ளது. தமிழ்நாட்டில் திமுக, அதிமுக, நாம் தமிழர், தமிழக வெற்றிக் கழகம் என 4 முனை போட்டி நிலவுகிறது. எக்ஸிட் போல் முடிவுகள் திமுகவுக்கு சாதகமாக அமைந்துள்ளன. அதிமுக, தமிழக வெற்றிக் கழகம் ஆகிய கட்சிகள் கடும் போட்டியாக அமைந்துள்ளது. நாம் தமிழர் கட்சியும் வாக்குகளைப் பிரித்து களத்தில் பலத்தை காட்டும் என கணிக்கப்பட்டுள்ளது.

கோவை தெற்கு தொகுதியில் 1,88,878 வாக்குகள் உள்ளன. கடந்த ஏப்ரல் 23 ஆம் தேதி நடைபெற்ற வாக்குப்பதிவில் அங்கு 1,58,799 வாக்குகள் பதிவாகின. மொத்தம் 20 சுற்றுகளாக வாக்குகள் எண்ணப்படவுள்ளன. திமுகவில் முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி, அதிமுகவில் மாவட்ட செயலாளர் அம்மன் அர்ஜுனன், தவெகவில் செந்தில் குமார், நாம் தமிழர் கட்சியில் பேரறிவாளன் என்று மொத்தம் 31 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர்.
கடந்த சட்டமன்றத் தேர்தல்களில் கோவை தேர்தல் களம் திமுகவுக்கு தோல்வியை தான் கொடுத்துள்ளது. கோவையில் தொடர்ந்து அதிமுக தான் வெற்றி பெற்று வருகிறது. இதை சரி செய்வதற்காக திமுக சார்பில் கரூரில் இருந்து செந்தில் பாலாஜியை கோவைக்கு ஸ்பெஷல் அஸைன்மென்ட் கொடுத்து ஸ்டாலின் அனுப்பினார். கோவை தெற்கு தொகுதியில் செந்தில் பாலாஜி திமுக வேட்பாளராக களம் கண்டார்.
11 வார்டுகளைக் கொண்ட இந்தத் தொகுதியில் வாக்குப் பதிவு எண்ணும் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன. இந்நிலையில், வாக்கு எண்ணிக்கை மையத்திற்கு கோவை தெற்கு தொகுதி திமுக வேட்பாளர் செந்தில் பாலாஜி மஞ்சள் துண்டு அணிந்து வந்த நிலையில் அவருக்கு அனுமதி மறுக்கப்பட்டது.
கோவை அரசினர் தொழில்நுட்பக் கல்லூரியில் உள்ள வாக்கு எண்ணிக்கை மையத்திற்கு செந்தில் பாலாஜி மஞ்சள் துண்டு அணிந்து வந்ததால் அனுமதி மறுக்கப்பட்டது. இதையடுத்து, மஞ்சள் துண்டை அகற்றிய பின்னர் செந்தில் பாலாஜி உள்ளே நுழைந்தார். இதனால், அப்பகுதியில் சிறிது நேரம் சலசலப்பு ஏற்பட்டது. ஏற்கனவே வாக்குப் பதிவின்போதும் மஞ்சள் துண்டு அணிந்து வந்தது சர்ச்சையான நிலையில், இன்றும் பாதுகாப்பு அதிகாரிகள் அதனை அனுமதிக்கவில்லை.
செந்தில் பாலாஜி அணிந்து வந்த மஞ்சள் துண்டு அகற்றப்பட்டதால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது. இருப்பினும், சில திமுக முகவர்கள் மஞ்சள் கலர் அடையாள அட்டைகளை அணிந்து வாக்கு எண்ணிக்கை மையத்திற்குள் சென்றதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.












Click it and Unblock the Notifications