கோவையில் முதல் முறை.. 3 இடங்களில் வந்த அதிநவீன சிக்னல்.. மக்களே இப்படி மட்டும் போயிடாதீங்க!
கோவை: கோவை மாநகரில் அவிநாசி சாலை வரதராஜா மில்ஸ், திருச்சி சாலை சுங்கம், காந்திபுரம் பேருந்து நிலையம் ஆகிய 3 இடங்களில் காவல்துறை சார்பில் அதிநவீன தானியங்கி கேமரா மூலம் கண்டறிந்து அபராதம் விதிக்கும் சென்சார் கேமரா சிக்னல்கள் அமைக்கப்பட்டுள்ளது. இந்த சிக்னல்களுக்கு மக்களிடையே நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது.
கோவை மாநகரம் சென்னைக்கு அடுத்தபடியாக மிகப்பெரிய நகரமாக வளர்ந்துள்ளது. இதன் காரணமாக சென்னைக்கு அடுத்தபடியாக அதிக நெரிசல் உள்ள நகரமாகவும் கோவை இருக்கிறது. கோவை மாநகராட்சியில் ஏராளமான சந்திப்புகள் இருக்கின்றன. சென்னையில் உள்ளது போல் கோவையில் சிக்னலுக்கு சிக்னல் மேம்பாலம் எல்லாம் கிடையாது. திருச்சி சாலை, காந்திபுரம், உக்கடம் உள்ளிட்ட இடங்களில் மேம்பாலம் இருக்கிறது. ஆனால் கோவையில் வாகன நெரிசலுக்கு ஏற்ற வகையில் மேம்பாலங்கள் இல்லை.

கோவையில் ஏராளமான வணிக நிறுவனங்கள் தொழில் நிறுவனங்கள் இருப்பதால் ஏராளமானோர் தினசரி வேலைக்காகவும், பல்வேறு பணிக்காகவும் சொந்த வாகனங்கள் மற்றும் கார்களில், பேருந்துகளில் அதிக அளவு பயணிக்கிறார்கள். கோவையில் பிரதான சாலையாக அவிநாசி சாலை இருக்கிறது. இது கிட்டத்தட்ட சென்னை அண்ணா சாலைக்கு நிகரான போக்குவரத்து நெரிசலுடன் இருக்கிறது. அதற்கு அடுத்தபடியாக சத்தி சாலை, பொள்ளாச்சி சாலை, மேட்டுப்பாளையம் சாலை, திருச்சி சாலை, பாலக்காடு சாலை ஆகியவை உள்ளன. இந்த ஆறு சாலைகளும் வெளியூர்களுக்கும் செல்லும் சாலைகள் ஆகும். இங்கு ஏராளமான வாகனங்கள் பீக் அவர்ஸில் செல்லும். இங்கு காலை மாலை வேளைகளில் நெரிசல் அதிகமாக இருக்கும்.
இதுதவிர லட்சுமி மில்ஸ், ஆவராம்பாளையம் ரோடு, ஆர்எஸ்புரம், ரேஸ்கோர்ஸ் சாலை, காந்திபுரம் 100 அடி சாலை, பீளமேடு சிங்கநல்லூர் சாலை என உட்புறச் சாலைகளையும் இணைக்கும் இணைப்புச் சாலைகள், உட்புறச் சாலைகள் ஆகியவற்றிலும் வாகனப் போக்குவரத்து அதிகமாக இருக்கிறது. இந்நிலையில் போக்குவரத்து நெரிசலை குறைக்க கடந்த ஆண்டு யூடர்ன் திட்டத்தை செயல்படுத்தினார்கள். இந்த திட்டம் வெற்றிகரமாக செயல்பாட்டில் இருக்கிறது. பல்வேறு சாலைகளில் யூடர்ன் மற்றும் ரவுண்டானா ஆகியவை உள்ளன. அதேநேரம் பல இடங்களில் யூடர்ன் மற்றும் ரவுண்டானா அமைக்க முடியாத அளவிற்கு நெரிசல் காணப்படுகிறது. அப்படியான இடங்களில் சிக்னல்கள் தொடர்ந்து இருக்கின்றன.
இந்நிலையில் கோவை அவிநாசி சாலையில் வரதராஜா மில்ஸ் சிக்னல் மிக முக்கியமான சிக்னல் ஆகும். இந்த சிக்னலிலும் அடுத்ததாக திருச்சி சாலை சுங்கம், காந்திபுரம் பேருந்து நிலையம் ஆகிய 3 இடங்களில் மாநகர காவல்துறை சார்பில் அதிநவீன போக்குவரத்து சிக்னல் அமைக்கப்பட்டுள்ளது.
இந்த மூன்று சிக்னல்களும் எப்படி என்றால், போக்குவரத்து விதி மீறலில் ஈடுபடும் வாகனங்களை தானியங்கி கேமரா மூலம் கண்டறிந்து அபராதம் விதிக்கும் சென்சார் கேமரா சிக்னல்களாக அமைக்கப்பட்டுள்ளன. மேலும் பாதசாரிகளே பட்டனை அழுத்தி வாகனங்களை நிறுத்திவிட்டு சாலையை கடந்து செல்லும் வகையிலும் சிக்னல்கள் பொருத்தப்பட்டிருக்கிறது. இந்த சிக்னல்களுக்கு கோவையில் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது.
போக்குவரத்து விதி மீறலில் ஈடுபடும் வாகனங்களை தானியங்கி கேமரா மூலம் கண்டறிந்து அபராதம் விதிக்கும் சென்சார் கேமரா சிக்னல்கள் சென்னையில் அண்ணா சாலை, அண்ணா நகர் உள்பட சென்னையின் பல்வேறு இடங்களில் பொருத்தப்பட்டு பயன்பாட்டில் இருப்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications