பொது தேர்வு நடக்கும் போது கோவைக்கு மோடி வருவதால் படிப்பு பாதிக்கும்: கு.ராமகிருட்டிணன் ஒரே போடு
கோவை: 10, 12 ஆம் வகுப்புகளுக்கான பொதுத் தேர்வு நடக்கும் சூழலில் பிரதமர் மோடியின் கோவை வருகையால் மாணவர்கள் பள்ளிச் செல்ல இயலாத சூழல் ஏற்படும் என தந்தை பெரியார் திராவிடக் கழகத்தின் பொதுச் செயலாளர் கு.ராமகிருட்டிணன் தெரிவித்துள்ளார்.
தந்தை பெரியார் திராவிடர் கழகத்தின் மாநில செயற்குழு கூட்டம் கோவை காந்திபுரம் பகுதியில் உள்ள பெரியார் படிப்பகத்தில் கடந்த ஞாயிற்றுக்கிழமை நடந்த போது ராமகிருட்டிணன் மோடியை விமர்சித்து தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் செய்தியாளர்கள் சந்திப்பில் கூறியிருப்பதாவது: வரும் நாடாளுமன்றத் தேர்தலில் திமுக தலைமையிலான இந்தியா கூட்டணிக்கு ஆதரவாக தந்தை பெரியார் திராவிடக் கழகம் சார்பில் பிரச்சாரம் செய்ய இருக்கிறோம்.
தேர்தல் பத்திரத்தில் பாஜக பெரிய அளவில் ஊழல் செய்துள்ளது. கடந்த 2016 ஆம் ஆண்டு , ரூ 500, ரூ 2000 நோட்டுக்களை பணமதிப்பிழப்பு நடவடிக்கையின் பேரில் ஒழித்தால் கருப்பு பணத்தை ஒழிப்போம் என கூறிய பாஜக தற்போது வரை கருப்பு பணத்தை ஒழிக்காமல் தேர்தல் பத்திரம் மூலமாக பாஜக நூதனமாக ஊழல் செய்துள்ளது.
5 மக்களவைத் தொகுதியில் கொண்ட மாநிலங்களில் 5ஆவது கட்டமாக தேர்தல் நடத்தும் பாஜக, தமிழகத்தில் 39 தொகுதிகளில் இருக்கும் பட்சத்தில் ஒரே கட்டமாக தேர்தல் நடத்துகிறது. பாஜக ஆட்சியில் சட்டஒழுங்கு சீரழிந்துள்ளது. கோவை அமைதி பூங்காவாக திகழ்ந்து வருகிறது.
கோவையில் பிரதமர் மோடி வருகையால் பொதுமக்கள் அதிக அளவில் சிரமப்படும் நிலை ஏற்படுகிறது. தற்போது 10, 12 ஆம் வகுப்புகளுக்கு பொதுத் தேர்வு நடந்து வருகிறது. இந்த சமயத்தில் போக்குவரத்து மாற்றம், டிராபிக் ஜாம் உள்ளிட்டவைகளால் பள்ளிக்கு நேரத்திற்கு செல்ல வேண்டுமே என்ற மன உளைச்சல் மாணவர்களுக்கு ஏற்பட்டுள்ளது.
இதனால் பள்ளிக்கு செல்ல முடியாத சூழலும் எழுந்துள்ளது. மோடி தெரு தெருவாகவோ வீடு வீடாகவோ பிரச்சாரம் செய்தாலும் வரும் நாடாளுமன்றத் தேர்தலில் பாஜக ஆட்சிக்கு மீண்டும் வராது என ராமகிருட்டிணன் தெரிவித்துள்ளார். நாடாளுமன்றத் தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டுவிட்டது.
தமிழகத்தில் 39 நாடாளுமன்றத் தேர்தல் வாக்குப்பதிவு வரும் ஏப்ரல் 19ஆம் தேதி நடைபெறுகிறது. தேர்தல் தேதி அறிவிப்பதற்கு முன்பே தமிழகத்திற்கு 4 முறை பிரதமர் மோடி வந்து சென்றுவிட்டார். இந்த நிலையில் தேர்தல் தேதி அறிவிக்கப்பட்ட பிறகு முதல்முறையாக இன்று பிரதமர் மோடி, கோவைக்கு வருகிறார்.
அங்கு நடைபெறும் பிரம்மாண்ட வாகன அணிவகுப்பில் பிரதமர் மோடி பங்கேற்கிறார். கோவை- மேட்டுப்பாளையம் சாலையில் உள்ள சாய்பாபா காலனி போலீஸ் நிலையம் அருகே புறப்படும் வாகன அணிவகுப்பு, ஆர்.எஸ்.புரம் தலைமை தபால் நிலையம் அருகே சென்று முடிவடைகிறது. அங்கு கோவையில் நடந்த குண்டுவெடிப்பில் உயிரிழந்தவர்களுக்கு பிரதமர் மோடி, அஞ்சலி செலுத்துகிறார்.
கர்நாடகா மாநிலம் சிவமோகா விமான நிலையத்தில் இருந்து விமானம் மூலம் இன்று மாலை 5.30 மணிக்கு கோவை வருகிறார். விமான நிலையத்தில் அவருக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்படுகிறது. பின்னர் அங்கிருந்து கார் மூலம் வாகன அணிவகுப்பு நிகழ்ச்சி நடக்கும் இடத்திற்கு செல்கிறார். இதையொட்டி கோவையில் பலத்த போலீஸ் பாதுகாப்பு அளிக்கப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications