தீபாவளி பர்சேஸ் போறீங்களா.. கோவையில் எங்கெல்லாம் பார்க்கிங் பண்ணலாம்.. நோட் பண்ணுங்க
கோவை: தீபாவளி பண்டிகை நெருங்கி கொண்டிருக்கிறது. இதனால் மாநிலம் முழுவதும் மக்கள் புது ஆடைகள், பட்டாசு வாங்க ஆர்வம் காட்டி வருகின்றனர். கோவை மாவட்டத்தை பொறுத்தவரை டவுன்ஹால் மற்றும் காந்திபுரம் பகுதிகளில் தான் அதிகளவில் துணிக் கடைகள் உள்ளன. பொதுவாகவே இந்த இரண்டு பகுதியில் போக்குவரத்து அதிகமாக தான் இருக்கும்.
பண்டிகை காலம் என்றால் கேட்கவே வேண்டாம். மக்கள் கூட்டம் அதிகளவில் கூடுவதால் போக்குவரத்து ஸ்தம்பித்துவிடும். இதனால் மக்கள் தங்களின் வாகனங்களை பார்க்கிங் செய்வது பெரிய பிரச்னையாக இருக்கும். இந்நிலையில் அந்தப் பிரச்னையை சரிசெய்யும் வகையில் கோவை மாநகர காவல்துறை ஒரு முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

அதில், ஒவ்வொரு வருடமும் தீபாவளி உள்ளிட்ட பண்டிகை காலங்களில் புத்தாடைகள், நகைகள் மற்றும் வீட்டு உபயோகப் பொருட்கள் வாங்குவதற்காக ஒரே நேரத்தில் பொதுமக்கள் வருகைபுரியும் போது ஒப்பணக்கார வீதி, பெரியகடைவீதி, ராஜ வீதி, காந்திபுரம் கிராஸ்கட் ரோடு மற்றும் மாநகரின் முக்கிய வணிக பகுதிகளில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. இதைத் தடுக்க தற்காலிக வாகன நிறுத்துமிடங்கள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதோடு போக்குவரத்து மாற்றங்களும் செய்யப்பட்டுள்ளன.
தீபாவளி பண்டிகையை முன்னிட்டு கோவை மாநகரில் கோவை கடைவீதி, டவுன்ஹால் மற்றும் ஒப்பணக்காரவீதி பகுதிகளில் பொருட்கள் வாங்க வரும் பொதுமக்கள் போக்குவரத்து நெரிசலை தவிர்க்கும் பொருட்டு கீழ்க்கண்ட இடங்களில் தங்களது வாகனங்களை நிறுத்திக் கொள்வதற்கு (Parking) பயன்படுத்திக் கொள்ளலாம்.
உக்கடம் காவல் நிலையத்திற்கு எதிர்ப்புறம கோவை மாநகராட்சியால் தற்காலிகமாக அமைக்கப்பட்டுள்ள வாகன நிறுத்தத்தை இலவசமாக பயன்படுத்திக் கொள்ளலாம். ராஜவீதி சோளக்கடை முக்கில் உள்ள மாநகராட்சி பார்க்கிங்கில் கட்டண முறையில் வாகனம் நிறுத்திக் கொள்ளலாம்.
அதேபோல மணிக்கூண்டு அருகில் உள்ள மாநகராட்சி பார்க்கிங், பெரிய கடைவீதி ராயல் தியேட்டர் பார்க்கிங், என்.எச்.ரோடு ராஜா தியேட்டர் மற்றும் அதற்கு எதிரிலுள்ள போத்திஸ் பார்க்கிங் ஆகிய இடங்களில் கட்டணம் செலுத்தி மக்கள் வாகனங்களை நிறுத்திக் கொள்ளலாம்.
காந்திபுரம் கிராஸ்கட் ரோடு பகுதிகளில் பொருட்கள் வாங்க வரும் பொதுமக்கள், மத்திய பேருந்து நிலையம் எதிரில் உள்ள சிறைத்துறை மைதானம் பார்கிங், கிராஸ்கட் ரோடு SR Jewellery எதிர்புறம் உள்ள மார்டின் மைதானம், வடகோவை மாநகராட்சி பள்ளி மைதானங்களில் இலவசமாக வாகனங்களை நிறுத்திக் கொள்ளலாம்.
கிராஸ்கட் ரோடு லட்சுமி காம்ப்ளக்ஸ், கிராஸ்கட் ரோடு மாநகராட்சி பார்க்கிங் ஆகிய பகுதிகளில் கட்டணம் செலுத்தி வாகனங்களை நிறுத்திக் கொள்ளலாம். தீபாவளி பண்டிகையை முன்னிட்டு போக்குவரத்து நெரிசலை கட்டுப்படுத்த, 26.10.2024 ஆம் தேதி முதல் போக்குவரத்திலும் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
1. ஒப்பணக்கார வீதி வழியாக காந்திபுரம், அவினாசி சாலை மற்றும் திருச்சி சாலை செல்லும் கனரக மற்றும் இலகு ரக வாகனங்கள் உக்கடம் சந்திப்பிலிருந்து வலது புறம் திரும்பி சுங்கம் புறவழிச்சாலையை அடைந்து வாலாங்குளம், கிளாசிக் டவர் சந்திப்பை அடைந்து செல்ல வேண்டிய இடங்களுக்கு செல்லலாம்.
2. ஒப்பணக்கார வீதி வழியாக மேட்டுப்பாளையம் சாலை மற்றும் தடாகம் சாலை நோக்கி செல்லும் கனரக மற்றும் இலகு ரக வாகனங்கள் உக்கடம் சந்திப்பிலிருந்து இடது புறம் திரும்பி பேரூர் புறவழிச்சாலை வழியாக செல்வபுரம் ரவுண்டானா, செல்வபுரம் மேல்நிலைப்பள்ளி சந்திப்பில் வலது புறம் திரும்பி செட்டிவீதி சந்திப்பில் இடதுபுறம் திரும்பி சலிவன் வீதி வழியாக காந்திபார்க் வழியாக செல்லலாம்.
3. கிராஸ்கட் ரோடு வழியாக வடகோவை, சிந்தாமணி, ஆர்.எஸ்.புரம், சாய்பாபா காலனி செல்லும் வாகனங்கள் கிராஸ்கட் ரோடு வழியாக செல்லாமல் 100 அடி ரோடு, வடகோவை சிவானந்தாகாலனி வழியாக செல்ல அறிவுறுத்தப்படுகிறது.
4. மத்திய பேருந்து நிலையத்திலிருந்து சேலம், ஈரோடு, திருப்பூர் செல்லும் பேருந்துகள் அனைத்தும் பார்க் கேட், LIC, அண்ணா சிலை, லட்சுமி மில் வழியாகத்தான் செல்ல வேண்டும். அதே வழியாகத்தான் திரும்பவும் வரவேண்டும் நகருக்குள் வர அனுமதி இல்லை.
ஒப்பணக்காரவீதி மற்றும் ராஜவீதி பகுதிக்கு பொருட்கள் வாங்க வரும் பயணிகளை ஏற்றி வரும் ஆட்டோ மற்றும் கால் டாக்சிகள் ஒப்பணக்காரவீதி போத்தீஸ் சந்திப்பு வழியாக செல்லாமல், ஒப்பணக்காரவீதி, வைசியாள் வீதி சந்திப்பில் இடது புறம் திரும்பி வைசியாள் வீதி, கருப்பக் கவுண்டர் வீதி, ராஜவதி வழியாக ஒப்பணக்காரவீதி லாலா கார்னரில் பயணிகளை இறக்கி விடவேண்டும். மேலும், சரவணா செல்வரத்தினம் முன்பும், ஐந்து முக்கு பகுதியிலும் பயணிகளை ஏற்றிச் செல்ல வேண்டும்.
கிராஸ்கட் ரோடு மற்றும் நஞ்சப்பா ரோடு பகுதிகளில் வாகனங்களை நிறுத்துவதற்கு தடை செய்யப்பட்டுள்ளது. தீபாவளி பண்டிகை முடியும் வரை பொதுமக்களும், வாகன ஓட்டிகளும் மேற்கண்ட போக்குவரத்து மாற்றத்திற்கும். வாகன நிறுத்தத்திற்கும் ஒத்துழைப்பு தருமாறு கோவை மாநகர காவல்துறை சார்பில் கேட்டுக் கொள்ளப்படுகிறது. மீறும் வாகன ஓட்டிகளுக்கு அபராதம் விதிக்கப்படும்.
சபாஷ்.. கை கோர்க்கும் தமிழர்கள்-கன்னடர்கள்! பெங்களூரில் முதல்முறையாக நடக்கிறது ஒற்றுமை மாநாடு!
செல்போன் திருட்டு, கைப்பை திருட்டு மற்றும் ஜேப்படி உள்ளிட்ட குற்றங்கள் தொடர்பாக ஒலிபெருக்கி மூலமாக பொதுமக்களுக்கு தொடர்ந்து விழிப்புணர்வு ஏற்படுத்த, ஒப்பணக்கார வீதி - ராஜவீதி சந்திப்பு (லாலா கார்னர்). பிரகாசம் பேருந்து நிறுத்தம், டாக்டர் நஞ்சப்பா சாலை (சுப்பு மெஸ்), கிராஸ்கட் ரோடு (மஹாவீர் டெக்ஸ்டைல்ஸ்) மற்றும் கிராஸ்கட் ரோடு புறக்காவல் நிலையம் ஆகிய இடங்களில் கண்காணிப்பு கோபுரங்கள் அமைக்கப்பட்டுள்ளது.
போக்குவரத்தை ஒழுங்குபடுத்துதல் மற்றும் குற்ற விழிப்புணர்வு குறித்து ஒலிபெருக்கி மூலம் விழிப்புணர்வு ஏற்படுத்துவதுடன், காவல் துறையினர் தொடர்ந்து கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். போக்குவரத்தை ஒழுங்குபடுத்தவும், பாதசாரிகளுக்கு உதவிடவும் காவல் துறையினருக்கு உதவியாக உயிர் கிளப்பிலுள்ள 300 க்கும் மேற்பட்ட கல்லூரி மாணவர்கள் சேவை பணியில் ஈடுபட உள்ளனர்.












Click it and Unblock the Notifications