மும்மொழி கொள்கையை ஆதரிப்பதாக நான் எப்போது கூறினேன்.? தமிழகத்தில் இருமொழிக் கொள்கை தான்
கோவை: மும்மொழிக் கொள்கையை தாம் ஆதரிக்கவில்லை என தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி திட்டவட்டமாக மறுத்துள்ளார்.
இது தொடர்பாக கோவையில் செய்தியாளர்களிடம் பேசிய முதல்வர் பழனிசாமி, மும்மொழி கொள்கையை ஆதரிப்பதாக நான் எப்போது கூறினேன் என கேள்வி எழுப்பினார். பிற மாநிலங்களில் வாழும் மக்கள் விருப்பத்தின் பேரிலேயே தமிழை மூன்றாவது மொழியாக்க கூறினேன்.
தமிழ் மொழியை பிற மாநிலத்தவர் பயில வேண்டும் என்றே கோரிக்கை வைத்தேன். பல்வேறு மாநிலங்களில் உள்ள தமிழ் மக்கள் கோரிக்கை வைத்ததால் தான், பிற மாநிலங்களில் தமிழை விருப்ப பாடமாக வைக்க நடவடிக்கை எடுக்குமாறு வலியுறுத்தினேன். ட்விட்டரில் அவ்வாறு கருத்தை பதிவு செய்தேன். நான் வெளியிட்ட ட்விட்டர் பதிவின் சாராம்சம் இது தான் என விளக்கமளித்துள்ளார்
ஆனால் தாம் பதிவிட்ட கருத்தை புரிந்து கொள்ளாமல் பலர் சர்ச்சையாக்கியதால் தான் அந்த பதிவை ட்விட்டரிலிருந்து நீக்கியதாகவும் குறிப்பிட்டார் முதல்வர். அரசின் நிலைப்பாடு ஏற்கனவே தெரிவிக்கப்பட்டு விட்டது. இருமொழிக் கொள்கையில் தமிழக அரசு உறுதியாக உள்ளது. தமிழகத்தை பொறுத்த வரை இருமொழிக் கொள்கையை பின்பற்றியே ஆட்சி நடைபெறும் என்றார்.
கிரிஜா வைத்தியநாதனுக்கு பதவி நீட்டிப்பு கிடைக்குமா.. பரபரப்பான எதிர்பார்ப்பில் தமிழகம்!
செய்தியாளர்களின் பல்வேறு கேள்விகளுக்கு பதிலளித்து பேசிய முதல்வர், மாநிலத்தில் ஏற்பட்டுள்ள கடும் தண்ணீர் பற்றாக்குறையை போக்க தமிழக அரசு தீவிர நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. முழுமையான மழைப்பொழிவு இல்லாததால் தமிழகத்தில் குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. குடிநீர் பிரச்சனையை தீர்ப்பது பற்றி நடவடிக்கை எடுக்க மாவட்ட ஆட்சியர்களுக்கு ஏற்கனவே உத்தரவிடப்பட்டுள்ளது என்றார்.
மேலும் பேசிய முதல்வர் காவிரி மேலாண்மை ஆணைய அறிவுறுத்தலின் படி தமிழகத்திற்கு 9 டிஎம்சி தண்ணீரை கர்நாடகம் திறந்து விடும் என நம்புவதாக கூறினார். தமிழகத்திற்கு நீர் திறக்க திமுக எம்பிக்கள் கர்நாடக அரசை வலியுறுத்துவார்கள் என்றும் நம்பிக்கை கொண்டுள்ளதாக குறிப்பிட்டார்.
7 பேர் விடுதலை விவகாரத்தில் திமுக இரட்டை வேடம் போடுவதாக சாடிய முதல்வர் பழனிசாமி, அவர்களை விடுவிக்கக் கூடாது என திமுக அமைச்சரவையில் தான் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது என குறிப்பிட்டார்.
கர்நாடகத்தில் காங்கிரஸ்- மஜத கூட்டணி ஆட்சி நடைபெற்று வரும் நிலையில், காவிரி விவகாரத்தில் உச்சநீதிமன்ற தீர்ப்பை பின்பற்ற கர்நாடக அரசை ராகுல் காந்தி வலியுறுத்தாதது ஏன் எனவும் முதல்வர் பழனிாமி கேள்வி எழுப்பியுள்ளார். மேலும் பேசிய முதல்வர் மக்களவை தேர்தலில் 20 தொகுதிகளில் மட்டுமே போட்டியிட்டதால் தான் அதிமுகவிற்கு வாக்கு சதவீதம் குறைந்ததாக கூறினார்
டிடிவி தினகரனின் அமமுகவில் இருந்து விலகி மேலும் பலர் தாய் கட்சியான அதிமுகவிற்கு திரும்புவார்கள் என்றார் எடப்பாடி பழனிசாமி.