கோவை வஉசி பூங்காவில் பிரம்மாண்டமாக அமையும் 2 நீச்சல் குளங்கள்.. ஆணையர் குட்நியூஸ்
கோவை: கோவை வ.உ.சி. உயிரியல் பூங்காவில் ரூ.6 கோடியில் 2 நீச்சல் குளங்கள் அமைக்கப்பட உள்ளன. இதில் ஒன்று பொதுமக்கள் பயன்பாட்டிற்காகவும், மற்றொன்று நீச்சல் வீரர்கள் பயிற்சி பெறும் வகையிலும் சர்வதேச தரத்துடன் அமைக்கப்படும் என கோவை மாநகராட்சி ஆணையாளர் சிவகுரு பிரபாகரன் கூறியுள்ளார். கவுண்டம்பாளையம் ஜீவா நகரில் ரூ.15 கோடி மதிப்பீட்டில், ஒரு ஏக்கர் பரப்பளவில் மாற்றுத்திறனாளிகளுக்கான விளையாட்டு மையம் அமைக்கப்பட உள்ளது என்றும் கூறினார்.
கோவை மாநகரை பொறுத்தவரை தமிழ்நாட்டின் இரண்டாவது பெரிய நகரம். இந்த நகரம் தற்போது வேகமாக வளர்ந்து வருகிறது. இதனை கருத்தில் கொண்டு அரசு பல்வேறு வசதிகளை அங்கு மேம்படுத்தி வருகிறது. தொழில்நகரமான கோவையில் பல்வேறு பொழுது போக்கு அம்சங்களும் அமைக்கப்பட்டு வருகின்றன. அண்மையில் செம்மொழி பூங்கா பிரம்மாண்டமாக திறக்கப்பட்டது. அதுதற்போது கோவை மக்களிடைய நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.

முன்னதாக கோவை மாநகரின் மைய பகுதியில் வ.உ.சி. உயிரியல் பூங்கா ஒன்று செயல்பட்டு வந்தது. இது கோவை மக்களின் முக்கிய பொழுதுபோக்கு அம்சமாக பல ஆண்டுகளாக இருந்து வந்தது இங்கு மான்கள், மயில்கள், முதலை, குரங்கு, பாம்புகள் உள்ளிட்ட பல்வேறு விலங்குகள் கோவை மாநகராட்சி நிர்வாகம் சார்பில் பராமரிக்கப்பட்டு வந்தன.
ஆனால் அங்கு போதிய கட்டமைப்பு வசதி இல்லை என்பதால் ஒரு கட்டத்தில் பூங்கா செயல்பட மத்திய உயிரியல் ஆணையம் அனுமதி மறுத்தது. இதனால் பூங்கா செயல்பட வில்லை. இதையடுத்து அந்த பூங்காவில் பராமரிக்கப்பட்டு வந்த விலங்குகள் வண்டலூருக்கு இடமாற்றம் செய்யப்பட்டன. இந்த நிலையில் வ.உ.சி. உயிரியல் பூங்காவில் தற்போது 2 நீச்சல் குளங்கள் அமைக்கப்பட இருக்கிறது
இது குறித்து கோவை மாநகராட்சி ஆணையாளர் சிவகுரு பிரபாகரன் இதுபற்றி கூறுகையில், கோவை வ.உ.சி. உயிரியல் பூங்காவில் ரூ.6 கோடியில் 2 நீச்சல் குளங்கள் அமைக்க முடிவு செய்துள்ளோம். இதில் ஒன்று பொதுமக்கள் பயன்பாட்டிற்காகவும், மற்றொன்று நீச்சல் வீரர்கள் பயிற்சி பெறும் வகையிலும் சர்வதேச தரத்துடன் அமைக்கப்படும். இந்த நீச்சல் குளம் கட்ட ஆகும் செலவு மற்றும் விரிவா திட்ட அறிக்கை தயாரிக்கப்பட்டு உள்ளது. இதே பகுதியில் தனியார் மூலம் ரூ.10 கோடியில் பறவைகள் சரணாலயம் அமைக்க திட்டமிடப்பட்டு உள்ளது. இதற்கு அரசு அனுமதி கோரப்பட்டிருக்கிறது.
அதேபோல் கோவை கவுண்டம்பாளையம் ஜீவா நகரில் ரூ.15 கோடி மதிப்பீட்டில், ஒரு ஏக்கர் பரப்பளவில் மாற்றுத்திறனாளிகளுக்கான விளையாட்டு மையம் அமைக்கப்பட உள்ளது. மாநகராட்சி சாலைகளில் 1,700 இடங்களில் ரூ.2 கோடியில் தற்காலிகமாக பேட்ச் ஒர்க் மேற்கொள்ளப்பட்டு உள்ளது. இந்த பணிகளில் தரம் இல்லை என புகார் வந்தால் ஒப்பந்ததாரர்களுக்கு கண்டிப்பாக அபராதம் விதிக்கப்படும்" இவ்வாறு கூறினார்.
கோவை நகரில் விதிகளை மீறி வைக்கப்பட்ட விளம்பர பலகைகள் அகற்றப்பட்டு வருகின்றன. மாநகராட்சியில் ரூ.40 கோடியில் சாலைப்பணி, காந்திபுரம் பஸ் நிலையத்துக்கு ரூ.30 கோடி மற்றும் உக்கடம் பஸ் நிலையத்திற்கான நிதி உள்ளூர் திட்ட குழுமத்திடம் இருந்து இன்னும் கிடைக்கவில்லை. விளாங்குறிச்சி சாலையில் கனரக வாகனங்களை தடுப்பது தொடர்பாக போலீஸ் ஆணையாளரிடம் ஆலோசனை நடத்தப்பட்டு உள்ளது. பொது இடங்களில் போஸ்டர் ஒட்டுவோருக்கு அபராதம் விதித்து நடவடிக்கை எடுக்கப்படும்" இவ்வாறு அவர் கூறினார்.












Click it and Unblock the Notifications