விஜய்க்கு போட்டியாக கூர்தீட்டப்படும் சிவகார்த்திகேயன்.. பிரபலம் போட்ட குண்டு
கோவை: கல்விக்காக தி.மு.க.வினர் எடுத்த விழா ஒரு நாடகம். சினிமாக்காரர்களை வைத்து விளம்பரத்திற்காக நாடகம் நடத்துகின்றனர். விஜய்க்குப் போட்டியாக சிவகார்த்திகேயனை திமுகவினர் அரசியல் பேச வைப்பதாக பாஜக தேசிய மகளிரணித் தலைவர் வானதி சீனிவாசன் குற்றம் சாட்டியுள்ளார்.
கோவை விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்த கோவை தெற்குத் தொகுதி எம்எல்ஏ வானதி சீனிவாசன் கூறியதாவது: தமிழகத்திற்கு பிரதமர் நரேந்திர மோடி, சிறப்பும் பெருமையும் சேர்த்திருக்கிறார். நம்முடைய தமிழகத்தைச் சார்ந்த சி.பி.ராதாகிருஷ்ணன் குடியரசு துணைத் தலைவராக பொறுப்பேற்றதற்கு பின்னதாக, வருகின்ற 5 ஆம் தேதி கோவை வர இருக்கிறார்.

துணை குடியரசுத் தலைவர் வருகை
தமிழகத்திற்கு 4 ஆம் தேதியன்று குடியரசுத் துணை தலைவர் சென்னை வருகிறார். சென்னையில் இருக்கக் கூடிய சில நிகழ்வுகளில் கலந்துகொண்டு 5 ஆம் தேதி பிற்பகல் கோவைக்கு வருகை தர இருக்கிறார். மிக நீண்ட காலத்திற்கு பின்பாக நம்முடைய தமிழர் ஒருவர் துணை குடியரசு தலைவராக பொறுப்பேற்று இருக்கிறார். முதன் முறையாக தமிழகத்திற்கு வருகின்றபோது, சிறப்பான ஏற்பாடுகளை செய்வதற்கு பாரதிய ஜனதா கட்சியின் சார்பிலும், இந்த பகுதியில் இருக்கக் கூடிய பல்வேறு அமைப்புகள், இணைந்து அவருக்கு மிகப்பெரிய பாராட்டு விழாவை ஏற்பாடு செய்து கொண்டு இருக்கிறோம்.
எம்எஸ்எம்இ ஜிஎஸ்டி வரி
இந்நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை வரவேற்புக் குழுவின் மூத்த தலைவர்களாலும், முக்கிய நபர்களாலும் ஏற்பாடு செய்யப்பட்டு, மிகச் சிறப்பான வரவேற்பு அளிக்கப்படும். எம்எஸ்எம்இ ஜி.எஸ்.டி. வரி 12 சதவீதம் விதிக்கப்பட்டு இருப்பதால், ரா மெட்டீரியல் வாங்குவதில் பிரச்சனை இருப்பதாக கூறுகிறார்களே என்ற கேள்விக்கு, நான் தற்பொழுது தொழில் அமைப்புகளை சந்திப்பதற்காக தான் சென்று கொண்டு இருக்கிறேன்.
இதுதொடர்பான அவர்களின் அனைத்து கோரிக்கைகளையும் பெற்றுக் கொண்டு அவர்களின் பிரச்சனைகளை தெரிந்து கொண்டு மத்திய அரசாங்கத்திடம் இது பற்றி எடுத்து கூறுவோம். அமைச்சர் டி.ஆர்.பி ராஜா வடமாநில பெண்கள் பற்றி அவதூறாக பேசியது குறித்த கேள்விக்கு, அவர் பேசியது கடுமையான கண்டனத்திற்கு உரிய பேச்சு.
வடமாநிலத்தவர்கள் குறித்து அவதூறு
தொழில் துறை அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா வாய்ப்பு கிடைக்கும் பொழுது எல்லாம், அவர் மட்டுமல்ல அவரின் அமைச்சரவையில் உள்ள சகாக்கள், திராவிட முன்னேற்றக் கழக மூத்த தலைவர்கள் கூட, வட இந்திய தொழிலாளர்கள், வட இந்திய மக்களைப் பற்றி அவதூறாக அவமரியாதையாக பேசுவது என்பது இது முதன் முறையல்ல. அதிலும் குறிப்பாக வட இந்திய பெண்களை பற்றி பேசுகின்ற பொழுது ஒன்றை புரிந்து கொண்டு இருக்க வேண்டும்.
ஆரம்பக் காலம் தொட்டு வேதகாலம் முதல் பெண்களுக்கு என்று தனி சிறப்பான இடம் இந்திய வரலாறு கலாச்சாரத்தில் இருக்கிறது. அதற்குப் பின்பாக கூட நாட்டின் சுதந்திரப் போராட்டமாகட்டும், அல்லது சமுதாய மறுமலர்ச்சிக்காக பாடுபட்ட பெண்களாகட்டும், வட இந்திய பெண்களும் மிக முக்கியத்துவம் வாய்ந்த வரலாறு ஞாபகம் வைத்துக் கொள்ளும் அளவுக்கு பங்களித்து இருக்கிறார்கள்.
தவறிய காங்கிரஸ்
இதில் இரண்டு விஷயங்களை நான் அவருக்கு ஞாபகப்படுத்த விரும்புகிறேன், ஒன்று வட இந்தியாவில் பெண்களின் வேலைவாய்ப்பு பின் தங்கி இருக்கிறது என்றால், உங்களுடைய கூட்டணி கட்சியான காங்கிரஸிடம் இதைப் பற்றி கேட்க வேண்டும். ஏனென்றால் அதிகமான வருடங்கள் ஆட்சிகள் இருந்தது அவர்கள் தான். அடிப்படைக் கல்வியை கொடுக்க கூட அங்கு தவறி விட்டது காங்கிரஸ் கட்சி.
பிரிவினைவாதம்
இரண்டாவது கடந்த 11 வருடங்களாக மிக முக்கியமான திட்டங்களான கழிப்பிட வசதி, அனைவருக்கும் வீடு, பெண்களுக்கான தொழில் கடன், முத்ரா திட்டம் என கோடிக் கணக்கான பெண்கள், இந்திய பெண்கள் அடுத்த தரத்தில் பயணித்துக் கொண்டு இருக்கிறார்கள். பெண்கள் அதிகாரத்தை நோக்கி நகர்ந்து கொண்டு இருக்கும் வேளையில், வடக்கு, தெற்கு என பிரிவினைவாதத்தை ஏற்படுத்தி வடக்கில் இருக்கும் பெண்களை அவமானப்படுத்த வேண்டாம் என்பது எங்களுடைய கோரிக்கை என கூறினார்.
சாலை விபத்து
சிங்காநல்லூரில் காவல் ஆய்வாளர் ஒருவர் விபத்தில் உயிரிழந்தது குறித்த கேள்விக்கு, இங்கு சாலை சரியில்லை என்பது மட்டுமல்ல, சாலை விபத்தில் அதிகமாக உயிரிழக்கக் கூடிய ஒரு மாநிலம் என்றால் அது தமிழகமாக இருக்கிறது. பல்வேறு தோண்டு அமைப்புகள் ஒன்றாக இணைந்து சாலை விபத்துகளில் உயிர் இழப்பு ஏற்படாமல் இருப்பதற்கு பல்வேறு விழிப்புணர்வை ஏற்படுத்துகிறார்கள்.
கங்கா மருத்துவமனை சார்பில் இன்னும் நிறைய முன்னெடுப்புகள் எடுக்கப்பட்டு இருக்கிறது. ஆனால் முதல்வர் ஸ்டாலின் தொடங்கி வைக்கிற திட்டத்திற்கு அது மக்களிடம் சென்று சேரும் திட்டத்திற்கும் நிறைய வித்தியாசம் இருக்கிறது. மேடையில் கேமராவின் முன்பு திட்டம் நன்றாகத் தான் இருக்கிறது. ஆனால் மேடைக்குப் பின் கொடுக்கப்படும் திட்டம் நன்றாக இல்லை. அதற்கு இந்த விபத்து ஒரு உதாரணம் எனக் கூறினார்.
டிராமா அரசாங்கம்
கல்வி விழாவில் சினிமா துறையை சேர்ந்தவர்களை அரசு பேச வைத்தது தொடர்பான கேள்விக்கு, இது டிராமா அரசாங்கத்தின் இன்னொரு நடவடிக்கை, அவர்களுக்கு தேவைப்படக் கூடிய முக்கியமான நபர்களை அழைத்து கல்வியை பற்றி பேச வைத்து இருக்கிறார்கள். விஜய்க்குப் போட்டியாக சிவகார்த்திகேயனை திமுகவினர் அரசியல் பேச வைக்கின்றனர்.
எத்தனை அரசு பள்ளிக் கூடங்கள் மூடப்பட்டு இருக்கிறது. பள்ளிக் கூடங்களில் அடிப்படை வசதிகள் இல்லாமல், ஆசிரியர் பற்றாக்குறை வேலையாட்கள் பற்றாக்குறை, மரத்தடியில் பாடம் நடத்துவது, ஆசிரியர்கள் பாலியல் தொந்தரவு கொடுப்பது, மாணவர்களுக்கு இடையே ஜாதி மோதல்கள் என பல்வேறு பிரச்சனைகள் சென்று கொண்டு இருக்கிறது. இதையெல்லாம் அவர்களின் ஆட்சியில் கல்வியில் சிறந்தது என ஏற்றுக் கொள்வார்களா?.
கலையும் மேக்கப்
இதையெல்லாம் மக்களை ஏமாற்றுவதற்காக துறைக்கு சம்பந்தம் இல்லாதவர்களை கூப்பிட்டு விளம்பரத்திற்காக நாடகத்தை நடத்திக் கொண்டு இருக்கிறார்கள். நீங்கள் போடும் நாடகத்தின் மேக்கப் கலைந்து கொண்டே வருகிறது என்று கூறினார். கோவில்பாளையத்தில் மாணவனை காப்பாளர் பெல்டால் அடித்தது குறித்த கேள்விக்கு, நான் அது சம்பந்தமாக மாவட்ட ஆட்சியரிடமும் பேசி இருக்கிறேன்.
ஆதரவற்ற குழந்தைகள்
குழந்தைகள் அதுவும் ஆதரவற்ற குழந்தைகளை இது போன்ற வன்முறைக்கு ஆளாக்குவது வேதனையாக இருக்கிறது. நிறைய இடங்களில் அனாதை குழந்தைகள் வளர்க்கப்படும் காப்பகங்களை கண்காணிக்க தவறி விடுகிறார்கள். இது பற்றி நான் ஆட்சியரிடம் பேசி இருக்கிறேன் தகுந்த நடவடிக்கை எடுக்கப்படும் என்றார். சிவகார்த்திகேயன் தி.மு.க அரசை புகழ்ந்து பேசியது தொடர்பான கேள்விக்கு, தங்கள் மீதான விமர்சனங்களுக்கு இது போன்ற சினிமா பிரபலங்களை வைத்து பதில் சொல்வது தி.மு.க அரசிற்கு புதிதல்ல, காலம் காலமாக அவர்கள் இதை செய்து கொண்டு தான் இருக்கிறார்கள்.
உடை தனிப்பட்ட விருப்பம்
அதேபோல பூ மார்க்கெட் உடை விவகாரம் குறித்த கேள்விக்கு, உடை என்பது நிச்சயம் தனிப்பட்ட விருப்பம் தான். இதுபோன்று அங்கு இருப்பவர்கள் நடந்து கொள்வது எனக்கு அதிர்ச்சியாக உள்ளது. பூ வாங்க வரும் பெண்களிடம் உடையை பற்றி பேச வேண்டிய அவசியம் இல்லை. அதேபோல பொது இடங்கள் என்று வரும்பொழுது ஆடைக்கான கண்ணியம் என்பதும் இருக்கிறது. உடை அணிவது அவரவரின் விருப்பம் அதை அவரவர் பின்பற்றிக் கொள்ள வேண்டியது தான் என்றும் கூறினார்.












Click it and Unblock the Notifications