"கேள்விப்பட்டேன்.." வருத்தமா இருக்கு.. கமல்ஹாசன் பற்றி வானதி போட்ட ட்வீட்.. பரபரப்பில் கோவை தெற்கு
கோவை: கோவையில் வாக்கு எண்ணிக்கை மையம் அருகே பத்திரிகையாளர் ஒருவரை தமது கைதடியால் மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவர் கமல்ஹாசன் நெட்டித் தள்ளியதாக கேள்விப்பட்டதாக, பாஜக கோவை தெற்கு வேட்பாளர் வானதி சீனிவாசன் தெரிவித்துள்ளார்.
கோவை தெற்கு தொகுதியில், போட்டியிட்டார் மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவர் கமல்ஹாசன். பாஜக சார்பில் வானதி சீனிவாசன் போட்டியிட்டார்.
இந்த நிலையில், வாக்குப் பதிவு நாளில், கோவை தெற்கு தொகுதியில் பாஜக சார்பில் டோக்கன் தரப்பட்டதாக வெளியான தகவலையடுத்து, சென்னையிலிருந்து 4 மணி நேரத்தில் ஹெலிகாப்டரில் கோவை விரைந்தார் கமல்ஹாசன்.
டோக்கன் புகார்
தேர்தல் அதிகாரியை சந்தித்து பாஜக டோக்கன் தருவதாக புகார் அளித்தார். பிறகு அன்று இரவு அங்கேயே தங்கிவிட்டார். நேற்று காலை வாக்கு எண்ணிக்கை மையம் அமைந்துள்ள பகுதிக்கும் அவர் சென்று பார்வையிட்டார். அப்போதுதான் ஒரு பிரச்சினை ஏற்பட்டுள்ளது. மோகன் என்ற காட்சி ஊடக ஒளிப்பதிவாளர் கமலை வீடியோ எடுத்ததாகவும், அதை கமல் தடுத்ததாகவும் கூறப்படுகிறது.
காயமில்லை
இதுகுறித்து, கோவை பத்திரிகையாளர் மன்றம் வெளியிட்ட அறிக்கையில், கோவை அரசினர் பொறியியல் கல்லூரி வளாகத்தில் அமைக்கப்பட்டுள்ள வாக்கு எண்ணிக்கை மையத்தைப் பார்வையிட வந்தார் கமல்ஹாசன். அப்போது செய்திக்காக, மோகன் ஒளிப்பதிவு செய்துள்ளார். ஆனால் அவரைப் படம் எடுக்கக் கூடாது என மிரட்டும் நோக்கில், தனது கையிலிருந்த கைத்தடியால் கழுத்து மற்றும் நெஞ்சுப்பகுதியில் கமல் நெட்டித் தள்ளியிருக்கிறார். நல்வாய்ப்பாக இந்தத் தாக்குதலில் மோகனுக்கு பெரிய அளவில் காயமில்லை என்ற போதும், ஒருவேளை கைத்தடியின் முனை தவறிப்போய்க் கழுத்தை பதம் பார்த்திருந்தால் நிலைமை விபரீதமாகியிருக்கும்.
பத்திரிக்கையாளர் மன்றம்
இதெல்லாம் கமல் அறியாதவர் அல்ல என்றாலும், அவரது சினிமா பின்புலத்தில், நடிப்பாக அவர் பார்ப்பாரேயானால், அவருக்கு ஒன்றை சுட்டிக்காட்ட வேண்டும். உயிர் தொடர்பான பிரச்சனை கமல் அவர்களே. செய்தியாளர் என்று தெரிந்திருந்தும், நீங்கள் இதைச் செய்திருப்பது, கோவை செய்தியாளர்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது. இது சந்தர்ப்பவாதம் மற்றும் அதிகார போக்கின் உச்சக்கட்டம் என்றே கருத வேண்டியிருக்கிறது. நிச்சயம் இதற்கான சட்டரீதியான எதிர்வினையை நீங்கள் எதிர்கொள்ள நேரிடும் என எச்சரிக்கிறோம். இவ்வாறு பத்திரிக்கையாளர் மன்றம் தெரிவித்தது.
வானதிக்கு வருத்தம்
இந்த நிலையில், வானதி சீனிவாசன் வெளியிட்ட டுவிட்டர் பதிவில் கூறியிருப்பதாவது: இன்று காலை கோவை ஜிசிடி கல்லூரி வளாகத்தில் திரு கமலஹாசன் அவர்கள் சன் நியூஸ் பத்திரிக்கையாளர் திரு மோகன் அவர்களை தனது கைத்தடியால் தாக்கியதாக கேள்விப்பட்டேன். இது மிகவும் வருத்தத்தை அளிக்கின்றது. இவ்வாறு வானதி சீனிவாசன் தெரிவித்துள்ளார். இந்த ட்வீட் பின்னூட்டத்தில் மக்கள் நீதி மய்யம் கட்சியினர் இந்த சம்பவத்திற்கு மறுப்பு தெரிவித்து கருத்து தெரிவித்து வருவதை பார்க்க முடிகிறது.