7 வாக்குறுதிகளை கூட முதல்வர் ஸ்டாலின் நிறைவேற்றவில்லை! திமுக அரசு மீது அண்ணாமலை அட்டாக்!
கடலூர்: கடந்த சட்டமன்றத் தேர்தலின் போது திமுக அளித்த 517 வாக்குறுதிகளில் 7 வாக்குறுதிகளை கூட நிறைவேற்றவில்லை என பாஜக மாநில தலைவர் அண்ணாமலை குற்றஞ்சாட்டியிருக்கிறார்.
கடலூர் மாவட்டம் சிதம்பரத்தில் பாஜக வேட்பாளர்களை ஆதரித்து பரப்புரை மேற்கொண்ட அவர் இதனைத் தெரிவித்திருக்கிறார்.
மேலும், மக்களை சந்திக்காமலேயே முதல்வர் பிரச்சாரம் செய்வதாகவும் பேசி அவரை விமர்சித்தார்.

உள்ளாட்சித் தேர்தல்
தமிழக நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலுக்கான பிரச்சாரம் நாளை மாலையுடன் ஓயவுள்ள நிலையில், தேர்தல் களம் அனல் பறக்கிறது. அரசியல் கட்சித் தலைவர்கள் ஒருவரை ஒருவர் மாறி மாறி குற்றஞ்சாட்டி பேசி மக்களின் கவனம் ஈர்த்து வருகின்றனர். இந்நிலையில் கடலூர் மாவட்டம் சிதம்பரத்தில் தேர்தல் பரப்புரை செய்த பாஜக மாநில தலைவர் அண்ணாமலை, திமுகவை கடுமையாக சாடியதுடன் எந்த வாக்குறுதியையும் நிறைவேற்றவில்லை என ஒரேபோடாக போட்டார்.

முதல்வர் மீது சாடல்
மேலும் தேர்தலின் போதும் திமுக அளித்த 517 வாக்குறுதிகளில் 7 வாக்குறுதிகளை கூட நிறைவேற்றவில்லை என குற்றஞ்சாட்டியுள்ளார் அண்ணாமலை. 8 மாதகாலமாக ஆட்சி நடத்தி வரும் ஒரு முதலமைச்சர், மக்களை நேரில் சந்திக்க தயங்கி பிரச்சாரத்திற்கே வராமல் காணொலி மூலம் பேசி வருவதாக விமர்சித்தார். இதற்கு முன் முதலமைச்சராக இருந்த யாரும் இவரை போல் நடந்து கொண்டதில்லை எனவும் முதல்வரை சாடினார் அண்ணாமலை.

பொங்கல் பரிசு
பொங்கல் பரிசுத் தொகுப்பு வழங்கியதில் பல கோடி ரூபாய் கமிஷன் பெறப்பட்டுள்ளதாகவும் 10 ரூபாய் பெறுமானமுள்ள ஒரு துணிப்பையை 60 ரூபாய் கொடுத்து வாங்கிய அரசு திமுக அரசு எனவும் அண்ணாமலை குற்றஞ்சாட்டினார். தமிழகத்தில் மாற்றம் ஏற்பட வேண்டும் என்றும் அந்த மாற்றத்திற்கான நேரம் இது எனவும் அண்ணாமலை பேசினார். பிரச்சாரத்தின் போது முழுக்க முழுக்க திமுகவை பற்றி மட்டுமே விமர்சித்து வருகிறாரே தவிர அதிமுகவை பற்றி அவர் பேசுவதேயில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

உள்ளாட்சி நல்லாட்சி
உள்ளாட்சி நல்லாட்சி எனக் கூறி முதலமைச்சர் ஸ்டாலின் மக்களை குழப்பி வருவதாகவும் திமுகவின் பிரச்சார வாசகங்கள் பற்றி அக்கட்சியினருக்கே சரியான புரிதல் இல்லை எனவும் அண்ணாமலை விமர்சித்திருக்கிறார். இதனிடையே அண்ணாமலைக்கு பதிலடி கொடுக்கும் விதமாக நாஞ்சில் சம்பத், திண்டுக்கல் லியோனி, ராஜீவ்காந்தி உள்ளிட்டோர் பிரச்சாரக் களத்தில் பேசி வருகின்றனர்.












Click it and Unblock the Notifications