நாடு முழுவதும் 63% பேர் சமூக இடைவெளியை கடைபிடிப்பதில்லை... ஒன்றிய அரசு வேதனை..!
டெல்லி: கொரோனா 2-வது அலை ஓரளவு ஓய்ந்து மூன்றாவது அலை வருமோ என அச்சம் ஏற்பட்டுள்ள சூழலில், நாடு முழுவதும் 63% பேர் சமூக இடைவெளியை கடைபிடிப்பதில்லை என்ற தகவல் ஆய்வு முடிவில் தெரியவந்துள்ளது.
தனி மனித இடைவெளி, பொதுவிடங்களில் முகக்கவசம் அணிவது தொடர்பாக இன்னும் முழுமையாக மக்கள் மத்தியில் போதிய விழிப்புணர்வு ஏற்படவில்லை என்பதையே இந்த முடிவுகள் காட்டுகின்றன.

டெல்லியில் ஒன்றிய சுகாதாரத்துறை இணை செயலாளர் லாவ் அகர்வால் செய்தியாளர்களை சந்தித்து பேசிய போது இந்த தகவலை வெளியிட்டு தனது வேதனையை பகிர்ந்துகொண்டார்.
மேலும், பயணிகளில் பெரும்பாலானோர் கொரோனா தடுப்பு விதிமுறைகளை பின்பற்றுவதில்லை என்றும் கொரோனா நெறிமுறைகளை முறையாக பின்பற்றாத பட்சத்தில் மீண்டும் ஊரடங்கு கடுமையாக்கப்படும் சூழல் உருவாகும் எனக் கூறினார்.
கொரோனா தடுப்பு விதிமுறைகள் தொடர்பாக சமீபத்தில் ஒன்றிய அரசு நடத்திய ஆய்வில், நாடு தழுவிய அளவில் 24% பேர் முகக்கவசம் அணிவதில்லை என தெரியவந்துள்ளதாகவும் 45% பேர் முறையாக மூக்கு மற்றும் வாய் பகுதியை மறைத்து முகக்கவசம் அணிவதில்லை என அறியவந்துள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.
83% மக்கள் கொரோனா தடுப்பு விதிமுறைகளை பின்பற்றாமல் அலட்சியம் காட்டுவதாகவும் இது 3-வது அலைக்கு வழி வகுக்கும் விதமாக அமைந்துவிடக்கூடாது எனவும் லாவ் அகர்வால் கவலை தெரிவித்தார்.
ஊரடங்கில் தான் தளர்வுகள் அளிக்கப்பட்டுள்ளதே தவிர இன்னும் கொரோனா முழுமையாக இந்த மனித இனத்தை விட்டு அகலவில்லை என்பதை நினைவில் கொண்டு ஒவ்வொருவரும் கொரோனா தடுப்பு விதிமுறைகளை முறையாக பின்பற்றத் தொடங்கினால் 3-வது அலை என்ற பேச்சுக்கே இடமில்லாமல் போகும்.












Click it and Unblock the Notifications