செம ஷாக்.. ஒரே மருத்துவமனையில்... 80 மருத்துவர்களுக்கு கொரோனா... அறுவை சிகிச்சை நிபுணர் பலியான சோகம்
டெல்லி: தலைநகரில் கொரோனா நோயாளிகளுக்குச் சிகிச்சை அளிக்கப்பட்டு வரும் மருத்துவமனை ஒன்றில், 80 மருத்துவர்களுக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.
இந்தியாவில் கொரோனா பரவலின் 2ஆம் அலை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இன்று மட்டும் நாட்டில் புதிதாக 3.66 லட்சம் பேருக்கு கொரோனா பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது.
அதேபோல பதிவு செய்யப்பட்ட தினசரி கொரோனா உயிரிழப்புகளும் 3,754ஆக உயர்ந்துள்ளன. கொரோனா பரவலைத் தடுக்க பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது.

டெல்லியில் கொரோனா பாதிப்பு
குறிப்பாக தலைநகர் டெல்லியில் நிலைமை மிகவும் மோசமாக உள்ளது. கொரோனா பரவலைக் கட்டுப்படுத்த அம்மாநில அரசு ஒரு வாரத்திற்கு நீட்டித்துள்ளது. இருப்பினும் அங்கு கொரோனா பாதிப்பு குறைந்ததாகத் தெரியவில்லை. அங்குள்ள பெரும்பாலான மருத்துவமனைகள் ஏற்கனவே கொரோனா நோயாளிகளால் நிரம்பியுள்ளன.

ஒரே மருத்துவமனையில் 80 பேருக்கு கொரோனா
இந்நிலையில், தலைநகரிலுள்ள சரோஜ் மருத்துவமனையில் பணிபுரியும் 80 மருத்துவர்களுக்கு கொரோனா கண்டறியப்பட்டுள்ளது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அவர்களில் 12 மருத்துவர்கள் அதே மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். மற்றவர்கள் வீடுகளிலேயே தனிமைப்படுத்திக் கொண்டுள்ளனர்.

புற நோயாளிகள் பிரிவு மூடல்
அந்த மருத்துவமனையில் மொத்தம் 300 மருத்துவர்கள் பணியாற்றி வருகின்றனர். ஏற்கனவே கொரோனாவால் மருத்துவர்கள் பணிச்சுமை அதிகரித்துள்ள நிலையில், கிட்டதட்ட மருத்துவமனையில் பணியாற்றும் மூன்றில் ஒருவருக்கு கொரோனா பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளதால் புற நோயாளிகள் பிரிவை மருத்துவமனை நிர்வாகம் தற்காலிகமாக மூடியுள்ளது.

மருத்துவர்கள் உயிரிழப்பு
சரோஜ் மருத்துவமனையில் 27 ஆண்டுகளாக அறுவை சிகிச்சை நிபுணராக பணியாற்றிய டாக்டர் ஏ.கே.ராவத் கொரோனாவால் பலியானார். டெல்லியில் மருத்துவர்கள் கொரோனாவால் உயிரிழப்பது இது முதல் முறையில்லை. அங்குள்ள குரு தேக் பகதூர் (ஜிடிபி) மருத்துவமனையில் கொரோனா தொற்றால் கடந்த ஞாயிற்றுக்கிழமை இளம் மருத்துவர் ஒருவர் உயிரிழந்தார். 26 வயதான அவர், கடந்த ஜனவரி மாதம் தான், படிப்பை முடித்திருந்தார்.












Click it and Unblock the Notifications