இன்று முதல் ஜன் தன் யோஜனா கணக்குகளில் ரூ.500 டெபாசிட்... யார் யாருக்கு எப்போது பணம்?
டெல்லி: பிரதம மந்திரியின் ஜன் தன் யோஜனா திட்டத்தின் கீழ் வங்கிகளில் கணக்கு வைத்திருக்கும் பெண்களுக்கு கொரோனா நிவாரண நிதியாக ரூ.500 ஐ மத்திய அரசு இன்று முதல் டெபாசிட் செய்யத் தொடங்குகிறது.
Recommended Video
கடந்த 2014-ம் ஆண்டு மத்தியில் பாஜக ஆட்சி அமைத்ததை தொடர்ந்து (மக்கள் நிதி திட்டம்) பிரதம மந்திரியின் ஜன் தன் யோஜனா திட்டம் தொடங்கப்பட்டது.

இந்நிலையில் கொரோனா நிவாரண நிதியாக ஜன் தன் யோஜனா திட்டத்தின் கீழ் வங்கி கணக்கு வைத்துள்ள பெண்களுக்கு மூன்று மாதங்களுக்கு மாதந்தோறும் ரூ.500 டெபாசிட் செய்யப்படும் என மத்திய அரசு அறிவித்திருந்தது. அந்த வகையில் முதற்கட்டமாக இன்று முதல் ரூ.500 -ஐ பயனாளிகள் கணக்குகளில் இருப்பு வைப்பதற்கான பணிகளை தொடங்கியுள்ளது மத்திய அரசு. சமூக விலகல் கடைபிடிப்பதை உறுதிப்படுத்தும் வகையில் ஜன் தன் யோஜனா பயனாளிகள் யார் யாருக்கு எப்போது பணம் செய்யப்படும் என்ற விவரமும் வெளியாகியுள்ளது
அதன்படி பூஜ்ஜியம் மற்றும் ஒன்று என்ற எண்ணில் முடியும் வங்கி கணக்கு எண்ணிற்கு ரூ.500 இன்று வங்கியில் செலுத்தப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதே போல் வங்கி கணக்கு எண் இறுதியில் 2 அல்லது 3 என்று இருந்தால் அவர்களுக்கு நாளை 4-ம் தேதி பணம் டெபாசிட் செய்யப்படும் என்றும், வங்கி கணக்கு எண் 4 அல்லது 5- என்ற எண்களில் முடிந்தால் 7-ம் தேதி பணம் செலுத்தப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், வங்கி கணக்கு எண்களின் இறுதியில் 6 அல்லது 7 என்ற எண்கள் இருந்தால் 8-ம் தேதியும், 8 அல்லது 9 என்ற எண்கள் இருந்தால் 9-ம் தேதியும் பணம் செய்யப்படும் என என அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இதனிடையே வங்கி ஊழியர்கள் சங்கம் விடுத்த வேண்டுகோளில், மத்திய அரசு அளிக்கும் 500 ரூபாயானது பயனாளிகளின் வங்கி கணக்குகளில் நேரடியாக டெபாசிட் செய்யப்படுவதால், இதனை எடுப்பதற்கு யாரும் அவசரம் காட்ட வேண்டாம் என்றும், கொரோனா தாக்கம் தணிந்த பின்னர் கூட பயனாளிகள் பணத்தை எடுத்துக்கொள்ளலாம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த விவகாரத்தில் வங்கிகளுக்கும், வங்கி ஊழியர்களுக்கும் பயனாளிகள் ஒத்துழைப்பு நல்கி பாதுகாப்பை உறுதிபடுத்துமாறு கோரியுள்ளது.
மேலும், ஜன் தன் யோஜனா திட்ட பயனாளிகளுக்கு ஒரு வேளை மிக அவசரத் தேவையாக பணம் தேவைப்பட்டால் ரூ பே கார்டு மூலம் எந்த ஏடிஎம் களில் வேண்டுமானாலும் ரூ.500 ஐ எடுத்துக்கொள்ளலாம் என்றும், அதற்கான எந்த கட்டணமும் பிடித்தம் செய்யப்படாது எனவும் வங்கி ஊழியர்கள் சங்கம் சார்பாக தெரிவிக்கப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications