கெஜ்ரிவாலை மரணத்தை நோக்கி தள்ளுகிறார்கள்! பாஜக மீது ஆம் ஆத்மி பாய்ச்சல்! அதிரும் தலைநகர் டெல்லி
டெல்லி: டெல்லி முதலமைச்சரும், ஆம் ஆத்மியின் தேசிய ஒருங்கிணைப்பாளருமான அரவிந்த் ஜெக்ரிவால் அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டிருக்கிறார். இந்நிலையில், அரவிந்த் கெஜ்ரிவாலை மெல்ல மெல்ல மரணத்தை நோக்கி தள்ளுகிறார்கள் என்று ஆம் ஆத்மி கட்சி குற்றம்சாட்டியுள்ளது.
சில நாட்களுக்கு முன்னர் ஜார்க்கண்ட் முதலமைச்சரும், ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா கட்சியின் தலைவராக இருந்த ஹேமந்த் சோரன் அமலாக்கத்துறையினரால் கைது செய்யப்பட்டார். இக்கட்சி இந்தியா கூட்டணியில் இருக்கிறது. அதேபோல கடந்த 21ம் தேதியன்று டெல்லி முதலமைச்சரும், இந்தியா கூட்டணியின் முக்கிய தலைவருமான அரவிந்த் கெஜ்ரிவால் கைது செய்யப்பட்டார். முதலமைச்சராக இருப்பவர் ஒருவர் கைது செய்யப்படுவது இதுவே முதல்முறையாகும்.

இப்போது கெஜ்ரிவால் திகார் சிறையில் அடைக்கப்பட்டிருக்கிறார். முன்னதாக சர்க்கரையின் அளவு ஏற்ற இறக்கமாக இருப்பதால் வீடியோ கான்பரன்ஸ் மூலம் தனது வழக்கமான மருத்துவரை அணுக அனுமதி கோரி நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார். சிபிஐ மற்றும் அமலாக்கத்துறை வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்ற நீதிபதி காவேரி பவேஜா முன்பு நேற்று இந்த மனு விசாரணைக்கு வந்தது. அப்போது ஆஜராகியிருந்த அமலாக்கத்துறை அதிகாரிகள்,
"அரவிந்த் கெஜ்ரிவால் டைப் 2 நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்டுள்ளார். அப்படி இருந்தும் அதிக சர்க்கரை உள்ள உணவுகளை அவர் உட்கொள்கிறார். அவர் தினமும் ஆலு பூரி, மாம்பழம், இனிப்பு வகைகளை அதிகம் உட்கொள்கிறார். மருத்துவ அறிக்கையை காரணம் காட்டி ஜாமீன் பெறுவதற்காக அவர் இதுபோன்ற செயலில் ஈடுபடுகிறார் " என்று கூறியிருந்தனர்.
இதனையடுத்து "இந்த விவகாரத்தில் சிறை அதிகாரிகள் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும். அதில், கெஜ்ரிவாலின் உணவு அட்டவணையும் இடம்பெற வேண்டும்" என நீதிபதி உத்தரவிட்டார்.
இந்நிலையில், அரவிந்த் கெஜ்ரிவாலை மெல்ல மரணத்தை நோக்கி தள்ளுகிறார்கள் என ஆம் ஆத்மி கட்சி குற்றம்சாட்டியுள்ளது. அதாவது, டைப்-2 நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்டுள்ள கெஜ்ரிவாலுக்கு இன்சுலின் மறுக்கப்படுகிறது என்றும், மருத்துவ உதவி மறுக்கப்படுவதால் அவர் மரணத்தை நோக்கி தள்ளப்படுகிறார் என்று ஆம் ஆத்மி குற்றம்சாட்டியுள்ளது.
"அரவிந்த் கெஜ்ரிவால் இன்சுலின் கேட்டு தனது குடும்ப மருத்துவரிடம் வீடியோ கான்பரன்சிங் செய்து வருகிறார், ஆனால் அவரது கோரிக்கைகளை சிறை நிர்வாகம் நிராகரிக்கிறது. கெஜ்ரிவாலின் மெதுவான மரணத்திற்கு சதி நடக்கிறது" என்று கட்சியின் செய்தித் தொடர்பாளர் சவுரப் பரத்வாஜ் கூறியுள்ளார். இந்த விவகாரம் தேசிய அரசியலில் விவாதங்களை கிளப்பியிருக்கிறது.












Click it and Unblock the Notifications