காங்கிரஸுடன் கட்டி புரண்டு சண்டைதான்.. "இந்தியா" கூட்டணி மும்பை மீட்டிங்கும் போவோம்.. கெஜ்ரிவால்
டெல்லி: "இந்தியா" கூட்டணியின் மும்பை ஆலோசனைக் கூட்டத்தில் ஆம் ஆத்மி கட்சியும் பங்கேற்கும் என அக்கட்சி தலைவரும் டெல்லி முதல்வருமான அரவிந்த் கெஜ்ரிவால் தெரிவித்துள்ளார்.
லோக்சபா தேர்தலில் பாஜகவை வீழ்த்த எதிர்க்கட்சிகள் இணைந்து "இந்தியா" கூட்டணியை உருவாக்கி உள்ளன. இந்தக் கூட்டணியின் முதல் ஆலோசனைக் கூட்டம் பீகார் மாநிலம் பாட்னாவிலும் 2-வது கூட்டம் கர்நாடகா மாநிலம் பெங்களூர் நகரத்திலும் நடைபெற்றது. பெங்களூரில் நடைபெற்ற கூட்டத்தில் கூட்டணிக்கு "இந்தியா" என பெயரிடப்பட்டது.

இதனைத் தொடர்ந்து மகாராஷ்டிரா மாநிலம் மும்பையில் 3-வது ஆலோசனைக் கூட்டம் நடைபெற உள்ளது. மும்பை ஆலோசனைக் கூட்டத்தில் "இந்தியா" கூட்டணியின் பொதுசெயல் திட்டம், "இந்தியா" கூட்டணி கட்சிகளின் தொகுதி பங்கீடு உள்ளிட்டவை குறித்து விவாதிக்கப்பட உள்ளது.
இதனிடையே சத்தீஸ்கர் மாநில சட்டசபை தேர்தலில் காங்கிரஸுக்கு எதிராக ஆம் ஆத்மி கட்சியும் களமிறங்கி தேர்தல் வாக்குறுதிகளை வழங்கி வருகிறது. டெல்லி முதல்வர் கெஜ்ரிவால், பஞ்சாப் முதல்வர் பகவந்த் மான் உள்ளிட்டோர் சத்தீஸ்கரில் தேர்தல் பிரசாரம் செய்து வருகின்றனர். சத்தீஸ்கரில் ஆளும் காங்கிரஸை தேர்தலில் வீழ்த்த பாஜக பகீரத பிரயத்தனம் செய்து வரும் நிலையில் ஆம் ஆத்மியின் இப்பிரசாரம், காங்கிரஸ் தலைவர்களிடையே அதிருப்தியை ஏற்படுத்தியது. இதேபோல மத்திய பிரதேச தேர்தல் களத்திலும் ஆம் ஆத்மி களமிறங்கி இருக்கிறது.இதனால் "இந்தியா" கூட்டணியில் ஆம் ஆத்மி நீடிக்குமா? என்கிற கேள்வியும் எழுந்தது.
இந்நிலையில்தான் "இந்தியா" கூட்டணியின் மும்பை கூட்டத்தில் ஆம் ஆத்மி கட்சி பங்கேற்கும் என டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் அறிவித்துள்ளார். இதன் மூலம் பல யூகங்கள், சர்ச்சைகளுக்கு அரவிந்த் கெஜ்ரிவால் முற்றுப்புள்ளி வைத்துள்ளார்.












Click it and Unblock the Notifications