ரயிலில் போற ஆசையவே இனி மறந்துடனுமா? ஏசி 3ம் வகுப்பு பெட்டிக்குள்ளும் அன்ரிசர்வ்ட் பயணிகள் அலை
டெல்லி: ரயிலில் 3வது ஏசி பெட்டியிலேயே முன்பதிவு செய்யாத பயணிகள் ஏறிக்கொண்டு இறங்க மறுத்து சிலர் அடம் பிடித்துள்ளனர். இதேபோல் டிக்கெட்டே எடுக்காமலும் 3ம் வகுப்பு ஏசி பெட்டியில் ஏறியிருக்கிறார்கள் பயணிகள். இதனால் பாதிக்கப்பட்ட பயணிக்கு ரயில்வே கொடுத்த பதில் தான் மறக்க முடியாத வகையில் இருந்தது..
ரயிலில் வடமாநிலத்திற்கு டிக்கெட் எடுத்து பயணித்தால் தீராத துன்பமான நிகழ்வாக மாறி வருவதாக புகார்கள் அதிகரித்து வருகிறது.. இதற்கு முன்பதிவு செய்யாத பயணிகள் மட்டும் காரணமல்ல... மத்திய அரசும், ரயில்வே துறையும் முக்கிய காரணமாக பார்க்கப்படுகிறது.

பணக்காரர்கள் செல்லும் வகையில் உயர்ரக வசதிகளுடன் வந்தே பாரத் ரயில் உள்பட பல்வேறு சொகுசு ரயில்களை விடுவதில் ஆர்வம் காட்டும் ரயில்வே அமைச்சகம், கடந்த ஐந்து ஆண்டுகளாக சாமானியர்கள் அதிகம் பயணம் செய்வதற்கான ஏழைகளுக்கான ரயில்களையோ அல்லது ஸ்லீப்பர் பெட்டிகளை அதிகரித்ததா என்று பயணிகள் பலர் காட்டமாக கேள்வி எழுப்பி வருகிறார்கள்.
வறுமை காரணமாக பிழைப்புத்தேடி வடமாநில மக்கள் வேறு நகரங்களுக்கு இடம் பெயருவது கடந்த 10 வருடங்களில் பெரிய அளவில் அதிகரித்துள்ளது. இவர்கள் ஏசி பெட்டியோ, ஸ்லீப்பர் கோச்சோ எதையும் பார்க்காமல் ஏறுகிறார்கள். இதற்கு காரணமும் இருக்கிறது. அந்த ரயிலில் எப்படியாவது ஏறி வேலைக்கோ சொந்த ஊருக்கோ செல்ல வேண்டும்.
அதுதான் அவர்களுக்கு இருக்கும் ஒரே வழி.. அந்த ரயிலில் பொதுப்பெட்டிகளில் ஏறவே முடியாத நிலை ஏற்படும் போது, ஏசி பெட்டி என்றோ, ஸ்லீப்பர் பெட்டி என்றோ அவர்கள் பார்ப்பது இல்லை.. டிக்கெட் பரிசோதகர்களால் இதை கண்டிக்கவே முடியாத அளவிற்கு நிலைமை மீறிவிட்டது. அப்படி மீறி தட்டிக்கேட்டால் டிடிஆர் உயிருக்கு உத்தரவாதம் இல்லை என்கிற நிலைமையும் சில நேரங்களில் ஏற்படுகிறது. கேரளாவில் டிடிஆர் ஒருவர் வடமாநில பயணி தாக்கி உயிரிழந்ததை உதாரணமாக சொல்லலாம்.
இந்நிலையில் விஜயகுமார் என்பவர் ஏசி ரயில் பெட்டிகளில் முன்பதிவு செய்யாத மற்றும் டிக்கெட் எடுக்காத பயணிகள் ஏறிக்கொண்டு, சீட்டை ஆக்கிரமித்ததாக வீடியோ வெளியிட்டுள்ளார். அந்த பதிவில், இது பாட்னா சந்திப்பு ரயில் நிலையத்தில் பிரம்மபுத்ரா எக்ஸ்பிரஸ் ரயிலில் உள்ள ஏசி-3ம் வகுப்பு பெட்டி ஆகும். நானும் எனது குடும்பத்தினரும் ரயிலில் ஏறுவதற்கும், பிறகு உறுதியான இருக்கையைப் பெறுவதற்கும் மிகப்பெரிய அளவில் போராட வேண்டியிருந்தது. AC-3ம் வகுப்பு பெட்டியும் ஜெனலர் கோச் பயணிகளால் முழுமையாக ஆக்கிரமிக்கப்பட்டிருந்தது. எந்த ரூலையும் அவர்கள் பொருட்படுத்துவதில்லை.
எனக்கும் எனது குடும்பத்தினருக்கும் 8 இருக்கைகளை முன்பதிவு செய்திருந்தேன். ஆனால் முன்பதிவு செய்யாத பயணிகள் ரயிலில் ஏறியதால் 6 இடங்களில் மட்டுமே என் குடும்பத்துடன் பயணித்தேன்.. ஜெனரல் டிக்கெட் எடுத்தவர்களும். டிக்கெட்டே எடுக்காத பலரும் ஏசி-3ம் வகுப்பு பெட்டியில் ஏறியிருந்தனர். அவர்களில் சிலரிடம் நான் பேசிய போது, தேர்வுகள் நடக்க உள்ளதாகவும் அதற்காக அவர்கள் வேறு வழியின்றி ஏசி பெட்டியில் ஏறி செல்வதாகவும் கூறினார்கள். அவர்களின் பிரச்சனையை புரிந்து கொள்ள முடிகிறது என்றாலும், ரயில்வே செய்வதை என்னால் ஏற்கவே முடியவில்லை. மாணவர்களுக்காக சிறப்பு ரயில்களை அறிமுகம் செய்யலாமே எதற்காக பொதுமக்கள் பாதிக்கப்பட வேண்டும். ரயில் ஏற்கனவே 2 மணிநேரம் தாமதமாகிவிட்டது. எனது குடும்பத்தினரும் நானும் இன்னும் 17-18 மணி நேர தொலைவில் உள்ள டெல்லிக்கு இப்படித்தான் பயணிக்க வேண்டும்.
எனது குடும்பத்தில், பெண்கள் வயதானவர்கள் கழிவறைக்கு செல்ல முயன்றார்கள். ஆனால் அதுவும் அன்ரிசவ்டு பயணிகளால் நிரம்பி வழிந்துள்ளது. அவர்கள் எல்லா இடங்களிலும் பயணிக்கிறார்கள். பயணிகளுக்கு வழங்கப்படும் அடிப்படை வசதிகளை கூட பயன்படுத்த முடியாத நிலை இருக்கிறது. ரயிலில் முன்பதிவு செய்து என்ன பயன். எனக்கு தயவு செய்து உதவி செய்யுங்கள்" இவ்வாறு விஜயகுமார் கூறியிருந்தார்.
இதற்கு ரயில்வே அளித்த பதில் தான் பிரமாதமாக இருக்கிறது. சிரமத்திற்கு வருந்துகிறோம். முன்பதிவு செய்யாத பயணிகள் பெட்டிகளில் ஏறியுள்ளதை டிடிஆர் நிதீஸ் குமார் மற்றும் காவலர்களிடம் கூறி நடவடிக்கை எடுக்கிறோம் என்று கூறி புகார் முடித்து வைக்கப்பட்டுள்ளது. ஆனால் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லையாம். அதையும் பயணி விஜயகுமார் ஷேர் செய்துள்ளார். இந்த ட்வீட் சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது.












Click it and Unblock the Notifications