அரபு நாடுகளில் இந்திய பொருட்கள் புறக்கணிக்க அறைகூவல் - உடனே சர்ச்சை பேச்சாளரை நீக்கிய பாஜக
டெல்லி: இஸ்லாமியர்களின் தூதரான முஹம்மது நபி குறித்து பாஜக செய்தித் தொடர்பாளர் நுபுர் ஷர்மா அவதூறாக பேசியதால் அரபு நாடுகளில் இந்திய பொருட்களை புறக்கணிக்க அழைப்பு விடுக்கப்பட்ட நிலையில், அவர் மீது பாஜக நடவடிக்கை எடுத்திருப்பதாக கூறப்படுகிறது.
சர்ச்சைக்குரிய பேச்சுக்களால் புகழ்பெற்ற பாஜக செய்தித் தொடர்பாளர் நுபுர் சர்மா, அண்மையில் தொலைக்காட்சி ஒன்றில் நடைபெற்ற விவாத நிகழ்ச்சியில் கலந்துகொண்டார்.
அதில் பேசிய நுபுர் ஷர்மா இஸ்லாமியர்களின் கடைசி தூதரான முஹம்மது நபி குறித்து அவதூறாக பேசியதாக கூறப்படுகிறது.
Recommended Video

மகாராஷ்டிராவில் வழக்குப்பதிவு
நுபுர் ஷர்மாவின் இந்த கருத்து வட மாநிலங்களில் பெரும் சர்ச்சைக்கு உள்ளானது. மகாராஷ்டிராவில் நுபுர் ஷர்மா மீது 2 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு உள்ளன. இந்த நிலையில் உத்தரப்பிரதேச மாநிலம் கான்பூரில் நுபுர் ஷர்மாவின் பேச்சை கண்டித்தும் அவர் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தியும் கடையடைப்பு போராட்டத்துக்கு அழைப்பு விடுக்கப்பட்டது.

கலவரம்
அங்கு இஸ்லாமியர்கள் பெரும்பான்மையாக வசிக்கும் புகழ்பெற்ற பராத்தே என்ற சந்தையில் கடைகளை அடைக்க மற்றொரு தரப்பினர் எதிர்ப்பு தெரிவித்தனர். இதனால் இரு பிரிவினரிடையே வாக்குவாதம் ஏற்பட்டு கைகலப்பாக உருவெடுத்தது. ஒருவரை ஒருவர் தாக்கிக்கொண்டதில் பலர் காயமடைந்தனர். இரு தரப்பு மோதலை தொடர்ந்து ஒருவர் மீது ஒருவர் கற்களை வீசி தாக்கிக் கொண்டனர்.

போலீஸ் தடியடி
போராட்டம் நடைபெற்றுக் கொண்டிருந்தபோது திடீரென வெடிகுண்டு வீசப்பட்டதால் பெரும் பதற்றம் நிலவியது. தகவலறிந்து கலவர பகுதிக்கு சென்ற போலீசார், மோதலில் ஈடுபட்டவர்களை தடியடி நடத்தி அங்கிருந்து விரட்டியடித்தனர். தொடர்ந்து மோதல் குறையாததால் போலீசார் கண்ணீர் புகை குண்டுகளை வீசினர். இதனால் அந்த இடமே கலவரமயமாக காட்சியளித்தது.

புல்டோசர் வரும்
இந்த கலவரம் தொடர்பாக 36 பேரை முதல்கட்டமாக போலீசார் கைது செய்து இருக்கின்றனர். ஆயிரம் பேர் மீது 3 பிரிவுகளின் கீழ் வழக்குகள் பதிவு செய்யப்பட்டு உள்ளன. இவர்களில் 40 பேர் மட்டுமே அடையாளம் காணப்பட்டு உள்ளார்கள். கலவரக்காரர்கள் மீது நடவடிக்கை எடுக்க அவர்களின் வீடுகள் புல்டோசர் கொண்டு இடிக்கப்படும் என அதிகாரிகள் எச்சரித்துள்ளனர்.

அரபு நாடுகள்
இந்த நிலையில் நுபுர் ஷர்மாவின் சர்ச்சைக்குறிய பேச்சு அரபு நாடுகளிலும் சமூக வலைதளங்களில் வேகமாக பரவி கொந்தளிப்பை ஏற்படுத்தியது. ஓமன் நாட்டின் கிராண்ட் முப்தி ஷேக் அல் கலீலி இதனை சுட்டிக்காட்டி பிரதமர் நரேந்திர மோடி மீதும் பாஜக மீதும் கடுமையாக விமர்சனங்களை முன்வைத்திருந்தார். அரபு நாட்டு மக்கள் ட்விட்டரில் #Boycott India என்ற ஹேஷ்டேக்கை டிரெண்ட் செய்து வந்தனர்.

பாஜக நடவடிக்கை
இந்த நிலையில் பாஜக தேசிய செயலாளர் அருண் சிங் வெளியிட்ட அறிக்கையில், மத அடிப்படையில் இழிவுபடுத்துவது பாஜகவின் கொள்கைகளுக்கு எதிரானது என்றும், தங்கள் கட்சி அனைத்து மதங்களையும் மதிக்கிறது எனவும் கூறினார். இந்த நிலையில் சர்ச்சைக்குறிய கருத்தை தெரிவித்த நுபுர் ஷர்மா மற்றும் அக்கட்சியை சேர்ந்த நவீன் குமார் ஜிண்டால் ஆகியோர் கட்சியிலிருந்தே நீக்கப்பட்டு உள்ளனர்.












Click it and Unblock the Notifications