மணிப்பூரில் ஒரே நாளில் 40 பயங்கரவாதிகள் சுட்டு கொலை.. அமித் ஷா பயணத்திற்கு முன்பு பரபரப்பு
டெல்லி: மணிப்பூரில் இன்று ஒரே நாளில் மட்டும் 40 பயங்கரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளதாக அம்மாநில முதல்வர் என் பைரன் சிங் தெரிவித்துள்ளார்.
இந்தியாவின் வடகிழக்கு மாநிலங்களில் ஒன்றான மணிப்பூரில் கடந்த சில காலமாகவே முழுமையாக அமைதியான சூழல் இல்லை. அங்கே தொடர்ச்சியாக மோசமான சம்பவங்கள் நடந்தே வந்தது.
இதற்கிடையே இதைத் தடுக்கும் வகையில் மணிப்பூர் போலீசார் அதிரடி நடவடிக்கையில் ஈடுபட்டனர். மணிப்பூரில் போலீசார் இன்று பல இடங்களில் நடத்திய ஆப்ரேஷனில் பல பயங்கரவாதிகள் ஒழிக்கப்பட்டுள்ளனர்.

40 பயங்கரவாதிகள்:
மணிப்பூர் போலீஸ் கமாண்டோக்கள் இன்று சுமார் எட்டு மணி நேரத்திற்கும் மேலாக இந்த அதிரடி ஆப்ரேஷனில் ஈடுபட்டுள்ளனர். இதில் 40 பயங்கரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டதாக அம்மாநில முதல்வர் பைரன் சிங் தெரிவித்துள்ளார். மேலும் சிலரைக் கைது செய்துள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. இந்தச் சம்பவம் அங்கே பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இன்று செய்தியாளர்களிடம் பேசிய மணிப்பூர் முதல்வர் பைரன் சிங், "எம்-16, ஏகே-47, ஸ்னைப்பர் துப்பாக்கிகளை மூலம் பயங்கரவாதிகள் பொதுமக்களைத் தாக்கி வந்தனர். அவர்கள் பல கிராமங்களை அழித்துள்ளனர். ராணுவம் மற்றும் பாதுகாப்புப் படை உதவியுடன் அவர்களுக்கு எதிராகக் கடுமையான நடவடிக்கை எடுக்கத் தொடங்கியுள்ளோம். இன்று நடத்தப்பட்ட ஆப்ரேஷனில் 40 பயங்கரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளனர். அப்பாவி பொதுமக்கள் மீது பயங்கரவாதிகள் துப்பாக்கிச் சூடு நடத்தி வருகின்றனர்..
மணிப்பூரைச் சிதைக்க முயலும் பயங்கரவாதிகளுக்கும் மக்களைப் பாதுகாக்கும் மாநில அரசுக்கும் இடையே இப்போது மோதல் நடக்கிறது. இன்று அதிகாலை 2 மணியளவில் இம்பால் பள்ளத்தாக்கு மற்றும் அதைச் சுற்றியுள்ள ஐந்து பகுதிகளில் பயங்கரவாதிகள் ஒரே நேரத்தில் தாக்குதல் நடத்தியுள்ளனர். அவர்களுக்கு நமது போலீசஸ் கமெண்டோக்கள் பதிலடி கொடுத்துள்ளனர்" என்று அவர் தெரிவித்தார்.
கடந்த இரண்டு நாட்களாக மணிப்பூரில் பல இடங்களில் தாக்குதல் சம்பவங்கள் நடந்துள்ளன. இது குறித்து மணிப்பூர் முதல்வர் மேலும் கூறுகையில், "கடந்த 2 நாட்களில் இம்பால் பள்ளத்தாக்கு உள்ளிட்ட பல இடங்களில் அப்பாவி பொதுமக்களைக் குறிவைத்துத் தாக்குதல் நடத்தியுள்ளன. இது நன்கு திட்டமிடப்பட்ட தாக்குதல் போலவே தெரிகிறது. இதை நாங்கள் வன்மையாகக் கண்டிக்கிறோம்" என்றார்.
25 குக்கி கிளர்ச்சிக் குழுக்கள் மத்திய மற்றும் மாநில அரசுடன் ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளன. இந்த ஒப்பந்தத்தின்படி, கிளர்ச்சியாளர்கள் முகாம்களில் அடைத்து வைக்கப்படுவார்கள். மேலும், அவர்களிடம் இருந்து ஆயுதங்களும் பறிமுதல் செய்யப்படும். குறிப்பிட்ட காலத்திற்கு அவர்கள் தொடர்ந்து கண்காணிப்பில் இருப்பார்கள்.

அமைச்சர் அமித் ஷா:
உள்துறை அமைச்சர் அமித்ஷா நாளை மணிப்பூர் செல்ல உள்ளார். அங்கே அமைதியான சூழலை உருவாக்கவும் இயல்பு நிலையைக் கொண்டு வரவும் ஒத்துழைப்பு தருமாறு அங்குள்ள இனக்குழுக்களிடம் அமித் ஷா கோரிக்கை விடுத்திருந்தார். இந்தச் சூழலில் தான் இன்று அதிரடி நடவடிக்கையாக 40 பயங்கரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளனர்.
அங்கே ஏற்கனவே குறிப்பிட்ட சமூகத்திற்குப் பழங்குடியினர் அந்தஸ்து வழங்கும் விவகாரத்தில் பெரிய வன்முறை ஏற்பட்டுள்ளது. இதனால் கடந்த சில நாட்களாகவே தொடர்ந்து வன்முறைச் சம்பவங்கள் நடந்து வந்தது. இதையடுத்து வரும் மே 31ஆம் தேதி வரை அங்கு ஏற்கனவே இணையச் சேவை முடக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications