4 மாநில தேர்தல் ரிசல்ட்! அதிகாலையிலேயே பட்டாசு வெடித்து கொண்டாட்டம்! காங்கிரஸ் அலுவலகத்தில் உற்சாகம்
டெல்லி: இன்று 4 மாநிலங்களுக்கான தேர்தல் முடிவுகள் வெளிவர உள்ள நிலையில், டெல்லியில் உள்ள காங்கிரஸ் அலுவலகத்தின் முன்பு கட்சி தொண்டர்கள் கூடி பட்டாசு வெடித்து கொண்டாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
அடுத்த ஆண்டு நாடாளுமன்ற தேர்தல் நடைபெறுகிறது. அதற்கு முன்னோட்டமாக ராஜஸ்தான், மத்தியப் பிரதேசம், சத்தீஸ்கர், தெலங்கானா மற்றும் மிசோரம் தொகுதிகளுக்கு சட்டப்பேரவை தேர்தல் நடத்தப்பட்டது. இந்நிலையில், மிசோரம் தவிர மற்ற மாநிலங்களின் தேர்தல் முடிவுகள் இன்று வெளியாகின்றன. இதில் காங்கிரஸுக்கும் பாஜகவுக்கும் நேரடி போட்டி நிலவுகிறது. இந்த தேர்தல் முடிவுகள் 2024 நாடாளுமன்ற தேர்தலில் தாக்கத்தை ஏற்படுத்தும் என்பதால் முடிவுகள் மீதான எதிர்பார்ப்பு எகிறியிருக்கிறது.

ராஜஸ்தான் மாநிலத்தை பொறுத்த அளவில் 199 தொகுதிகளுக்கு தேர்தல் நடைபெற்றிருக்கிறது. இந்த மாநிலத்தில் கடந்த 25 ஆண்டுகளில் ஒரே கட்சி இரண்டு முறையில் ஆட்சி பொறுப்பில் இருந்தது கிடையாது. எனவே பாஜக மிகுந்த எதிர்பார்ப்புடன் ரிசல்ட்டுக்காக காத்திருக்கிறது. ஆனால் முதல்வர் அசோக் கெலாட்டின் நலத்திட்டங்கள் மக்கள் மத்தியில் பெரும் அளவுக்கு வரவேற்பை பெற்றிருப்பதால், மீண்டும் காங்கிரஸ் தேர்ந்தெடுக்கப்படவும் வாய்ப்பிருப்பதாக கருத்துக்கணிப்புகள் கூறுகின்றன.
230 சட்டமன்ற தொகுதிகள் கொண்ட மத்தியப் பிரதேச மாநிலத்திற்கு கடந்த 17ம் தேதி ஒரே கட்டமாக தேர்தல் நடத்தி முடிக்கப்பட்டிருக்கிறது. மாநிலத்தில் ஆட்சி அமைக்க குறைந்தபட்சம் 116 தொகுதிகளில் வெற்றி பெற்றிருக்க வேண்டும். இதில் கடந்த முறையை விட இந்த முறை அதிக வாக்குகள் பதிவாகியுள்ளது. பொதுவாக கடந்த முறையை விட இந்த முறை அதிக வாக்குகள் பதிவானால் அது ஆட்சி மாற்றத்திற்கான அறிகுறி என்று சொல்லப்படுகிறது.
அதேபோல கடந்த 2003 தொடங்கி 2023 வரை, இடையில் 15 மாதங்கள் தவிர பாஜகதான் இங்கு ஆளும் கட்சியாக இருக்கிறது. எனவே பாஜக மீது அதிருப்தி நிலவுவதாகவும் அரசியல் விமர்சகர்கள் கூறுகின்றனர். ஆனால் மீண்டும் இம்மாநிலத்தில் பாஜக ஆட்சியை பிடிப்பதற்கே வாய்ப்புகள் அதிகம் இருப்பதாக கருத்துக்கணிப்புகள் கூறியுள்ளன.
தெலங்கானாவை பொறுத்தவரையில் காங்கிரஸுக்கு முக்கியமான தேர்தல். கர்நாடகாவின் வெற்றியை தொடர்ந்து தென் மாநிலத்தில் வலுவாக காலுன்ற தெலங்கானா கைக்கொடுக்கும் என காங்கிரஸ் நம்புகிறது. இதற்கேற்றார் போலவே கருத்துக்கணிப்புகளும் வெளியாகியுள்ளன. அதேபோல கடந்த 2014ம் ஆண்டு முதல் இங்கு சந்திரசேகர ராவ்தான் முதலமைச்சராக பதவி வகித்து வருகிறார். எனவே மூன்றாவது முறையும் அவர்தான் முதலமைச்சராக வெற்றிபெறுவார் என பிஆர்எஸ் கட்சியினர் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.
சத்தீஸ்கர் மாநிலத்தில் தற்போது காங்கிரஸ் ஆட்சியில் இருக்கிறது. முதலமைச்சர் பூபேஷ் பாகல் மீது பெரிய அதிருப்தி இல்லாததால் மீண்டும் காங்கிரஸ் ஆட்சிக்கு வரலாம் என்று சொல்லப்படுகிறது. ஆக மத்தியப் பிரதேசம் தவிர மற்ற மாநிலங்களில் காங்கிரஸ் மீது பெரிய எதிர்பார்ப்பு உருவாகியிருக்கிறது. இந்த 4 மாநிலங்களிலுமே காங்கிரஸ் வெற்றிபெறும் என கட்சியினர் நம்பிக்கை தெரிவித்துள்ளனர். இதனை கொண்டாடும் விதமாக இன்று அதிகாலையிலேயே டெல்லியில் இருக்கும் காங்கிரஸ் அலுவலகம் முன்பு குவிந்த அவர்கள் வெற்றி கோஷம் எழுப்பியும், பட்டாசு வெடித்தும் உற்சாகமடைந்துள்ளனர்.












Click it and Unblock the Notifications