நாளை நாடாளுமன்றம் கூடுகிறது.. டெல்லியில் இன்று அனைத்து கட்சிக் கூட்டம்
டெல்லி: நாடாளுமன்ற மழைக்கால கூட்டத் தொடர் நாளை தொடங்கும் நிலையில் டெல்லியில் இன்று அனைத்துக் கட்சித் தலைவர்கள் ஆலோசனைக் கூட்டத்தை மத்திய அரசு நடத்தியது.
நாடாளுமன்ற மழைக்காலக் கூட்டத் தொடர் நாளை முதல் ஆகஸ்ட் 12-ந் தேதி வரை நடைபெற உள்ளது. இக்கூட்டத் தொடரை சுமூகமாக நடத்துவதில் மத்திய பாஜக அரசு முனைப்பாக உள்ளது. இக்கூட்டத் தொடரில் மொத்தம் 24 மசோதாக்களை மத்திய அரசு தாக்கல் செய்ய உள்ளது.

நாடாளுமன்றத்தின் முதல் நாளான நாளை ஜனாதிபதி தேர்தல் வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது. ஜூலை 21-ல் ஜனாதிபதி தேர்தலில் பதிவான வாக்குகள் எண்ணப்படும்.
எதிர்க்கட்சிகளைப் பொறுத்தவரை அக்னிபாத், திட்டம், பணவீக்க விகிதம், மகாராஷ்டிரா ஆட்சிக் கவிழ்ப்பு, நாடாளுமன்றத்தில் பல்வேறு தடைகள் உள்ளிட்டவைகளை எழுப்ப உள்ளன. இதனால் மழைக்கால நாடாளுமன்ற கூட்டத் தொடரில் அனல்பறக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்நிலையில் டெல்லியில் இன்று மத்திய அரசு சார்பில் அனைத்துக் கட்சிக் கூட்டம் நடத்தப்பட்டது. இக்கூட்டத்தில் அனைத்து அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகள் பங்கேற்றனர். காங்கிரஸ் மூத்த தலைவர் மல்லிகார்ஜூன கார்கே, ஜெய்ராம் ரமேஷ், ஆர்எல்டி எம்பி ஜெயந்த் சவுத்ரி, திமுகவின் திருச்சி சிவா, அதிமுகவின் தம்பிதுரை, ஒய்எஸ்ஆர் காங்கிரஸின் விஜயசாய் ரெட்டி, திரிணாமுல் காங்கிரஸின் சுதீப் பந்தோபாத்யாய், அப்னா தள் எம்பி அனுபிரியா படேல் உள்ளிட்டோரும் இந்த கூட்டத்தில் பங்கேற்றனர்.
இதேபோல் இன்று மாலை ராஜ்யசபா தலைவரும் துணை ஜனாதிபதியுமான வெங்கையா நாயுடுவும் ராஜ்யசபா அனைத்து கட்சிகள் கூட்டத்தைக் கூட்டியுள்ளார். துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடுவின் பதவி காலம் ஆகஸ்ட் 10-ந் தேதியுடன் நிறைவடைகிறது என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications