இந்தியா டூ ஒரே நாடு ஒரே தேர்தல்.. இன்று அனைத்துக் கட்சிக் கூட்டம்! நாடாளுமன்ற சிறப்புக் கூட்டம் ஏன்?
டெல்லி: நாடாளுமன்ற சிறப்புக் கூட்டத் தொடர் குறித்து விவாதிப்பதற்காக இன்று மாலை நாடாளுமன்றத்தில் அனைத்துக் கட்சிக் கூட்டம் கூட்டப்படுகிறது.
கடந்த மாதம் நாடாளுமன்றத்தில் மழைக்கால கூட்டத் தொடர் நடைபெற்று முடிந்த நிலையில், கடந்த சில வாரங்களுக்கு முன் நாடாளுமன்றத்தில் சிறப்புக் கூட்டத்தை கூட்ட இருப்பதாக மத்திய அரசு அறிவித்தது. நாளை (செப்டம்பர் 18) தொடங்கும் நாடாளுமன்ற சிறப்புக் கூட்டத் தொடர் செப்டம்பர் 22 ஆம் தேதி வரை நடைபெறுகிறது.

5 நாட்கள் நடைபெற உள்ள இந்த மழைக்கால கூட்டத் தொடருக்கான காரணம் என்ன என பல்வேறு தரப்பினர் கேள்வி எழுப்பினர். ஆனால், மத்திய அரசு தரப்பில் எந்த தகவலும் வெளியிடப்படவில்லை. அதே சமயம் ஒரே நாடு, ஒரே தேர்தல், இந்தியா பெயர் மாற்றம் போன்றவை தொடர்பாக முடிவுகள் எடுக்கப்படலாம் என பல்வேறு தகவல்கள் வெளியாகி வந்தன.
இந்த நிலையில் நாடாளுமன்றத்தின் 75 ஆண்டு கால பயணம் குறித்து முதல் நாள் அமவில் விவாதிக்கப்பட உள்ளது என கடந்த 13 ஆம் தேதி தெரிவிக்கப்பட்டது. இது குறித்து பேசிய மத்திய அமைச்சர் பிரகலாத் ஜோஷி, இன்று (செப்டம்பர் 17) ஆம் தேதி அனைத்துக் கட்சி கூட்டம் நடைபெறும் என அறிவித்தார்.
இது குறித்து ட்விட்டரில் அவர் வெளியிட்டு இருக்கும் பதிவில், "செப்டம்பர் 18 ஆம் தேதி நாடாளுமன்ற சிறப்புக் கூட்டம் தொடங்க இருக்கிறது. இது பற்றி ஆலோசனை மேற்கொள்ள செப்டம்பர் 17 ஆம் தேதி மாலை 4.30 மணியளவில் அனைத்துக் கட்சிக் கூட்டம் நடைபெற உள்ளது. இதுதொடர்பான அரசியல் கட்சித் தலைவர்களுக்கு மின்னஞ்சல் மூலம் அழைப்பிதழ் அனுப்பப்பட்டு உள்ளது" என அவர் தெரிவித்து இருக்கிறார்.
100 வது சுதந்திர தினமான அமிர்த காலம் வருவதற்குள் இந்தியாவை வளர்ந்த நாடாக உருவெடுக்க வேண்டும் என இலக்கு நிர்ணயிக்கப்பட்டு இருக்கிறது. இந்த சிறப்பு கூட்டத்தில் அது குறித்தும் விவாதிக்கப்பட வாய்ப்புகள் உள்ளன என தகவல்கள் தெரிவிக்கின்றன. அதேபோல் சந்திரயான் 3 விண்கலம் நிலவில் வெற்றிகரமாக தரையிறங்கப்பட்டது, ஜி 20 நாடுகள் கூட்டமைப்பின் மாநாட்டை சிறப்பாக நடத்தி முடித்தது பற்றியும் ஆலோசிக்கப்படும் என கூறப்படுகிறது.
அதே சமயம் இந்த திடீர் சிறப்புக் கூட்டத் தொடருக்கு எதிர்க்கட்சிகள் மத்தியில் எதிர்ப்பும் கிளம்பி உள்ளன. அதில் 2 காரணங்கள் உள்ளன. முதலாவது ஒரே நாடு ஒரே தேர்தல். ஒரே நாடு ஒரே தேர்தல் குறித்து aஅய்வு செய்ய முன்னாள் குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த் தலைமையில் குழு அணைக்கப்பட்ட நிலையில், அதுபற்றியும் இதில் விவாதிக்கப்படலாம் என்றும் தகவல் வெளியானது.
மற்றொன்று இந்தியா பெயர் மாற்றம். சமீபத்தில் நடந்து முடிந்த ஜி 20 நாடுகள் மாநாட்டில் கலந்துகொண்ட தலைவர்களுக்கு குடியரசுத் தலைவர் அளித்த விருந்துக்கான அழைப்பிதழில், பாரத குடியரசுத் தலைவர் என குறிப்பிடப்பட்டு இருந்தது. பிரதமருக்கான பெயர் பலகையிலும் பாரத் என குறிப்பிடப்பட்டது. இதன் காரணமாக, இந்தியாவின் பெயர் பாரத் என நாடாளுமன்ற சிறப்பு கூட்டத்தொடரில் மாற்றப்படலாம் எனவும் செய்திகள் வெளியாகின.












Click it and Unblock the Notifications