எங்கே போகிறார் ஷேக் ஹசீனா? களமிறங்கிய இந்தியா.. பிரிட்டனில் இருந்து ஜெய்சங்கரை தேடிவந்த போன்கால்!
டெல்லி: வங்கதேச பிரதமர் ஷேக் ஹசீனா தனது பதவியை ராஜினாமா செய்துவிட்டு உயிருக்கு பயந்து நம் நாட்டில் தஞ்சமடைந்துள்ளார். இவர் பிரிட்டனில் அடைக்கலம் கோரிய நிலையில் அந்நாடு தயங்கி வருகிறது. இத்தகைய சூழலில் தான் பிரிட்டன் வெளியுறவு செயலாளர் டேவிட் லாமி தொலைபேசியில் வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கரை தொடர்பு கொண்டு பேசியுள்ளார். அதுபற்றிய முக்கிய தகவல் வெளியாகி உள்ளது.
வங்கதேசத்தில் மாணவர்கள் போராட்டத்தை தொடர்ந்து ஷேக் ஹசீனா தனது பிரதமர் பதவியை ராஜினாமா செய்துவிட்டு நம் நாட்டில் தஞ்சமடைந்துள்ளார். நம் நாட்டுடன் தொடக்கம் முதலே நட்பாக செயல்பட்டு வந்ததால் ஷேக் ஹசீனாவுக்கு தற்காலிகமாக அடைக்கலம் கொடுக்கப்பட்டுள்ளது.

இருப்பினும் நீண்டகாலமாக நம் நாட்டில் அடைக்கலம் கொடுப்பது பற்றி இன்னும் முடிவு செய்யப்படவில்லை. அதேபோல் நம் நாட்டில் நீண்டகாலம் தங்கியிருக்கவும் ஷேக் ஹசீனா விரும்பவில்லை. மாறாக அவர் தனது குடும்ப உறுப்பினர்களுடன் ஐரோப்பிய நாடு, அமெரிக்கா, அல்லது சவுதி அரேபியாவில் தஞ்சமடைய விரும்புகிறார்.
இதில் ஷேக் ஹசீனாவின் முதல் தேர்வாக பிரிட்டன் உள்ளது. பிரிட்டன் தலைநகர் லண்டனில் அவர் தஞ்சமடைய விரும்பி அதற்கு அனுமதி கோரியுள்ளார். பிரிட்டனில் அடைக்கலம் கோரிய நிலையில் அவரது கோரிக்கை நிராகரிக்கப்பட்டுள்ளது. இதனால் ஷேக் ஹசீனா இன்னும் சில நாட்கள் நம் நாட்டிலேயே தங்கும் நிலை ஏற்பட்டுள்ளது. தற்போது ரகசிய இடத்தில் ஷேக் ஹசீனா உள்ள நிலையில் மத்திய அரசு அவருக்கு பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்து கொடுத்துள்ளது.
இது இந்தியாவுக்கு தற்போது தலைவலியை ஏற்படுத்தி உள்ளது. அதாவது வங்கதேச உச்சநீதிமன்ற வழக்கறிஞர்கள் சங்கம் சார்பில் இந்தியாவுக்கு முக்கிய கோரிக்கையை வைத்துள்ளது. ஷேக் ஹசீனாவை கைது செய்து வங்கதேசத்துக்கு நாடு கடத்த வேண்டும் என்று வழக்கறிஞர்கள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் ஷேக் ஹசீனாவை விரைவில் இன்னொரு நாட்டுக்கு பாதுகாப்பாக அனுப்பி வைக்க வேண்டிய கட்டாயத்தில் இந்தியா உள்ளது. இதுதொடர்பாக ஷேக் ஹசீனாவிடம் விரிவாக மத்திய அரசு பிரதிநிதிகள் பேசி அவரது விருப்பத்தை கேட்டுள்ளனர்.
அதுமட்டுமின்றி ஷேக் ஹசீனாவை பாதுகாப்பாக இன்னொரு நாட்டுக்கு அனுப்பி வைக்க தேவையான நடவடிக்கைளில் நம் நாடும் ஆர்வம் காட்டி வருகிறது. இதற்கிடையே தான் பிரிட்டனின் வெளியுறவுத்துறை செயலாளர் டேவிட் லாமி, திடீரென்று நம் நாட்டின் வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கருடன் தொலைபேசியில் பேசியுள்ளார். இந்த வேளையில் மேற்கு ஆசியா மற்றும் வங்கதேசத்தில் நிலவும் விவகாரம் பற்றி அவர்கள் விவாதித்துள்ளனர். மேலும் ஷேக் ஹசீனா பிரிட்டனில் அடைக்கலம் அடைய விரும்புவது பற்றியும் இருவரும் விவாதித்துள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
பிரிட்டன் வெளியுறவுத்துறை செயலாளர் டேவிட் லாமி, ஜெய்சங்கருடன் பேசியதை மத்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் உறுதி செய்துள்ளது. இருப்பினும் ஷேக் ஹசீனா பிரிட்டனில் தஞ்சமடைவது பற்றி விவாதிக்கப்பட்டதா? என்பதை மத்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் வெளிப்படையாக கூறவில்லை. அதில் ரகசியம் காத்து வருகிறது. இருப்பினும் கூட இந்த பேச்சுவார்த்தையின்போது ஷேக் ஹசீனாவின் அடைக்கலம் கொடுப்பது தொடர்பாக ஜெய்சங்கர் மற்றும் பிரிட்டன் வெளியுறவுத்துறை செயலாளர் டேவிட் லாமி ஆகியோர் விவாதித்து இருக்கலாம் என்றே சொல்லப்படுகிறது.
மேலும் ஷேக் ஹசீனா பிரிட்டனில் அடைக்கலம் கோருவதன் பின்னணியில் முக்கிய விஷயம் ஒன்று உள்ளது. அதாவது ஷேக் ஹசீனாவின் தங்கை ஷேக் ரெஹானாவின் மகள் துலிப் சித்திக் பிரிட்டனில் எம்பியாக உள்ளார். இவர் தொழிலாளர் கட்சியை சேர்ந்தவர். இந்த கட்சி தான் தற்போது அங்கு ஆட்சியில் உள்ளது. இதனால் தான் துலிப் சித்திக் உதவியுடன் பாதுகாப்பாக லண்டனில் இருக்கலாம் என்று ஷேக் ஹசீனா நினைக்கிறார்.
அதேவேளையில் பிரிட்டன் ஷேக் ஹசீனாவுக்கு அடைக்கலம் கொடுக்க தயங்குவதன் பின்னணியிலும் முக்கிய காரணம் உள்ளது. அதாவது பிரிட்டன் சட்ட விதிகளில் அடைக்கலம் கொடுப்பது தொடர்பான பிரச்சனைகள் இருக்கிறதாம். ஒருவேளை வங்கதேச இடஒதுக்கீடு போராட்டம் தொடர்பான விசாரணைக்கு ஷேக் ஹசீனா அழைக்கப்பட்டால் பிரிட்டன் அந்த உத்தரவில் இணக்கமாக செயல்பட வேண்டிய சூழல் ஏற்படும். இதனால் தான் தேவையின்றி சிக்கலில் சிக்க பிரிட்டன் தயங்குகிறது. இதுதான் ஷேக் ஹசீனாவுக்கு அடைக்கலம் கொடுக்கும் கோரிக்கையை பிரிட்டன் ஏற்கவில்லை என்று சொல்லப்படுகிறது. ஒருவேளை பிரிட்டனில் அடைக்கலம் கிடைக்காவிட்டால் ஷேக் ஹசீனா அமெரிக்கா, பின்லாந்து, சவுதி அரேபியா உள்ளிட்ட நாடுகளில் ஏதேனும் ஒன்றில் தஞ்சமடைய முடிவு செய்திருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.












Click it and Unblock the Notifications