நாளை பாஜக கூட்டத்தை கூட்டியுள்ள அமித்ஷா,, 'புதிய தலைவர் தேர்வு செம்ம சஸ்பென்ஸ்'
டெல்லி அனைத்து மாநில பாஜக தலைவர்களுடன் அந்த கட்சியின் தேசிய தலைவர் அமித்ஷா நாளை டெல்லியில் ஆலோசனை நடத்த உள்ளார். இந்த கூட்டத்தில் புதிய தலைவரை தேர்வு செய்வது குறித்து ஆலோசனை நடத்தப்பட உள்ளது. பாஜக தேசிய தலைவர் அமித்ஷா உள்துறை அமைச்சராகி உள்ளதால், அந்த கட்சியின் விதிப்படி புதிய தலைவர் தேர்வு செய்யப்பட உள்ளார்.
நடந்து முடிந்த லோக்சபா தேர்தல் பாஜக 303 இடங்களில் வெற்றி பெற்று அறுதிப்பெரும்பான்மையுடன் மீண்டும் ஆட்சியை பிடித்துள்ளது. ஒட்டுமொத்தமாக தேசிய ஜனநாயக கூட்டணி 350 இடங்களுக்கு மேல் வெற்றி பெற்றுள்ளது. மோடியின் அமைச்சரவையில் கூட்டணி கட்சிகளும் இடம் பெற்றுள்ளன.
கடந்த முறை நிதி அமைச்சராக அருண் ஜெட்லி உடல்நலக்குறைவு காரணமாக அமைச்சரவையில் இடம்பெற விரும்பாததால், அவருக்கு பதில் பாஜக தேசிய தலைவர் அமித்ஷா அமைச்சரவையில் இடம் பெற்றார். பிரதமர் மோடிக்கு அடுத்த இடத்தில் உள்துறை அமைச்சராக அமித்ஷா தற்போது பொறுப்பு வகிக்கிறார்.
பாஜகவின் விதிகளின் படி அமைச்சர் உள்பட அரசின் பொறுப்பில் இருந்தால் கட்சியில் தலைவர் பொறுப்பில் இருந்தால் அவர்கள் விலக வேண்டும். அப்படித்தான் கடந்த 2014ம் ஆண்டு ராஜ்நாத் சிங் தலைவர் பதவியில் இருந்து விலகினார். எனவே இப்போது அமைச்சர் பொறுப்பை ஏற்ற அமித்ஷா விரைவில் பாஜக தேசிய தலைவர் பொறுப்பில் இருந்து விலக உள்ளார். இதனால் பாஜக தலைமைக்கு புதிய தலைவரை தேர்வு செய்ய வேண்டிய அவசியம் இப்போது உருவாகி உள்ளது.
இதற்காக டெல்லியில் உள்ள பாஜக தலைமையகத்தில் நாளை காலை 11 மணிக்கு கூட்டம் நடைபெறுகிறது. இந்த கூட்டத்தில் பங்கேற்க அனைத்து மாநில பாஜக தலைவர்களுக்கும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. நாளை நடைபெறும் கூட்டத்தில் பாஜகவின் தேசிய தலைமைக்கு புதிய தலைவரை தேர்வு செய்வது குறித்து ஆலோசனை நடக்க உள்ளது. புதிய தலைவராக யார் தேர்வு செய்யப்படுவார்கள் என்பது செம்ம சஸ்பென்சாக உள்ளது. யார் என்பது நாளை தெரிய வாய்ப்பு உள்ளது .இதேபோல் மாநில வாரியாக லோக்சபா தேர்தலில் கிடைத்த வெற்றி தோல்விகள் குறித்தும் நாளை விவாதிக்கப்பட உள்ளது.