ஜம்மு காஷ்மீரில் பயங்கரவாதிகளுடன் நடந்த துப்பாக்கி சூடு! ராணுவ அதிகாரி வீரமரணம்! 3 வீரர்கள் காயம்
டெல்லி: ஜம்மு காஷ்மீரில் கிஷ்த்வார் என்ற பகுதியில் பயங்கரவாதிகளுடன் நடந்த துப்பாக்கிச் சண்டையில் ராணுவ அதிகாரி ஒருவர் வீரமரணம் அடைந்தார். மேலும், 3 ராணுவ வீரர்கள் இந்த ஆப்ரேஷனில் காயமடைந்தனர். இதனால் அங்குப் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
ஜம்மு காஷ்மீர் பகுதியில் எல்லையில் மீண்டும் பயங்கரவாத சம்பவங்கள் நடக்கும் நிலையில், அதை ஒடுக்க ராணுவம் தீவிர நடவடிக்கை எடுத்து வருகிறது.

எல்லை தாண்டிய பயங்கரவாதத்தைக் கட்டுப்படுத்த ராணுவம், துணை ராணுவம், எல்லை பாதுகாப்புப் படை இணைந்து தொடர்ச்சியாக நடவடிக்கைகளை எடுத்து வருகின்றன.
ராணுவ வீரர் வீர மரணம்: அதன்படி ஜம்மு காஷ்மீரின் கிஷ்த்வாரில் பயங்கரவாதிகள் பதுங்கி இருப்பதாகத் தகவல் கிடைத்ததைத் தொடர்ந்து அங்கு ராணுவத்தினர் கூட்டு ஆப்ரேஷனை நடத்தியுள்ளனர். இதில் இந்திய ராணுவத்தின் ஜூனியர் கமிஷன்ட் அதிகாரி (ஜேசிஓ) நைப் சுபேதார் ராகேஷ் குமார் வீர மரணம் அடைந்துள்ளார். மேலும் 3 வீரர்கள் காயமடைந்துள்ளனர். இதை ராணுவத்தின் 16 கார்ப்ஸ் தனது ட்விட்டர் பக்கத்தில் உறுதி செய்துள்ளது. உயிரிழந்த நைப் சுபேதார் ராகேஷ் குமார் 2 பாரா (ஸ்பெஷல் ஃபோர்ஸ்) பிரிவைச் சேர்ந்தவர் ஆவார்.
இது தொடர்பாக ராணுவத்தின் ஒயிட் நைட் கார்ப்ஸ் தனது ட்விட்டரில், "ஒயிட் நைட் கார்ப்ஸ் உள்ளிட்ட ராணுவத்தின் அனைத்து வீரர்களும் ராகேஷின் தியாகத்திற்கு வணக்கம் செலுத்துகிறோம். கிஷ்த்வாரின் பார்ட் ரிட்ஜ் நடத்தப்பட்ட கூட்டு ஆப்ரேஷனில் ராகேஷ் உயிரிழந்தார். இந்த தேரத்தில் அவரை இழந்து வாடும் குடும்பத்தினருடன் நாங்கள் துணை நிற்கிறோம்" என்று கூறப்பட்டுள்ளது.
என்ன நடந்தது: அப்பகுதியில் உள்ள கிராமத் தற்காப்புக் குழுவைச் சேர்ந்த இருவர் சுட்டுக் கொல்லப்பட்டு இருந்தனர். அவர்கள் உடல்கள் கண்டறியப்பட்ட இடத்தை சுற்றி காஷ்மீர் போலீசார் மற்றும் ராணுவத்தினர் ஜாயிண்ட் ஆப்ரேஷன் நடத்தினர். அப்போது குந்த்வாரா அடுத்துள்ள காட்டுப் பகுதியில் இந்த பயங்கரவாதிகளைச் சுற்றி வளைத்துள்ளனர்.
அப்போது நடந்த துப்பாக்கிச் சண்டையில், ராகேஷ் குமார் காயமடைந்தார். இதையடுத்து அவர் உடனடியாக சிகிச்சைக்காக ஹெலிகாப்டர் மூலம் உதம்பூருக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். அங்கு அவருக்குத் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. இருப்பினும், சிகிச்சை பலனின்றி நைப் சுபேதார் குமார் பரிதாபமாக உயிரிழந்தார். அந்த பயங்கரவாதிகளைப் பிடிக்கத் தொடர்ந்து தேடுதல் வேட்டை அங்கு நடந்து வருகிறது.
காஷ்மீர்: முன்னதாக கடந்த நவ. 8ம் தேதி வெள்ளிக்கிழமை, பாரமுல்லாவில் நடந்த ஒரு தனி என்கவுண்டரில் இரண்டு பயங்கரவாதிகள் கொல்லப்பட்டனர். உளவுத்துறை தந்த தகவலின் அடிப்படையில் பாரமுல்லாவில் உள்ள குறிப்பிட்ட இடத்தை சுற்றி வளைத்து அதிகாரிகள் தாக்குதல் நடத்தினர். அதில் இரு பயங்கரவாதிகள் கொல்லப்பட்டனர்.












Click it and Unblock the Notifications