'தேர்தல் நேரத்தில் கெஜ்ரிவால் கைது ஏன்'.. உச்ச நீதிமன்றம் எழுப்பிய ஒற்றை கேள்வி தான் திருப்புமுனை
டெல்லி: மதுபான கொள்கை முறைகேடு வழக்கில் கடந்த மார்ச் 21-ந்தேதி டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் கைது செய்யப்பட்டார். இந்தியாவின் வரலாற்றில் ஒரு மாநிலத்தின் முதல்வர் கைது செய்யப்பட்டது அதுவே முதல்முறையாகும். மேலும் ஒருவர் முதல்வராக இருக்கும் போதே சிறையில் இருந்ததும் இதுவே முதல்முறையாகும். கெஜ்ரிவால் டெல்லி திகார் சிறையில் நீதிமன்ற காவலில் அடைக்கப்பட்டார்.
தான் கைது செய்யப்பட்டதை எதிர்த்து அரவிந்த் கெஜ்ரிவால் தாக்கல் செய்த மனுவை டெல்லி ஐகோர்ட்டு தள்ளுபடி செய்தது. அவர் உச்சச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தார். இந்நிலையில் தனது கைது நடவடிக்கையே தவறு.. சட்டவிரோதம் என்று அரவிந்த் கெஜ்ரிவால் மேல்முறையீட்டு மனுவில் கூறியிருந்தார்.

கெஜ்ரிவால் மனு, நீதிபதிகள் சஞ்சீவ் கன்னா, திபங்கர் தத்தா ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு நிலுவையில் இருந்து வருகிறது. இந்நிலையில் தேர்தல் பிரசாரம் செய்வதற்காக அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு இடைக்கால ஜாமீன் அளிப்பது பற்றி 10-ந்தேதி (இன்று) தீர்ப்பு அளிப்பதாக நீதிபதிகள் அறிவித்திருந்தது .
முன்னதாக சரியாக நாடாளுமன்றத் தேர்தலுக்கு முன்பாக அரவிந்த் கெஜ்ரிவால் கைது செய்யப்பட்டது ஏன்... அவர் வாடிக்கையாகக் குற்றம் செய்பவர் அல்ல... மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட முதல்வர். அவருக்கு ஏன் நாங்கள் ஜாமீன் வழங்கக்கூடாது?' என்று உச்ச நீதிமன்றம் கேள்வி எழுப்பியது. இதற்கு நேற்று பதில் அளித்த அமலாக்கத்துறை, " எத்தனையோ அரசியல்வாதிகள், சிறையில் இருந்தபடி தேர்தலில் போட்டியிட்டுள்ளார்கள். அதற்கு முன்னுதாரணங்கள் பல இருக்கின்றன. சில அரசியல்வாதிகள் சிறையில் இருந்தபடி தேர்தலில் வெற்றியும் பெற்றுள்ளனர். ஆனால், தேர்தல் பிரசாரம் செய்வதற்காக எந்த அரசியல்வாதிக்கும் ஜாமீன் அளிக்கப்பட்டது கிடையாது. அவர் வேட்பாளராக இருந்தாலும்கூட ஜாமீன் கொடுக்கப்பட்டது இதுவரை நடந்தது இல்லை.
தேர்தல் பிரசாரம் என்பது அடிப்படை உரிமையோ அல்லது அரசியலமைப்பு உரிமையோ கிடையாது. கடந்த ஐந்து ஆண்டுகளில் சுமார் 123 தேர்தல்கள் நடந்துள்ளது. நமது நாட்டில் ஆண்டு முழுவதும் தேர்தல்கள் நடைபெற்றுக் கொண்டுதான் இருக்கும். இப்படியே தேர்தல் பிரசாரத்துக்காக இடைக்கால ஜாமீன் வழங்கினால், அரசியல்வாதிகள் யாரையும் கைதுசெய்து நீதிமன்றக் காவலில் வைத்து விசாரிக்க முடியாத நிலை ஏற்படும். தேர்தல் பிரசார அடிப்படையில் கெஜ்ரிவாலுக்கு ஜாமீன் வழங்கினால் அது தவறான முன்னுதாரணமாகிவிடும்" என்று கூறியிருந்தது.
இந்நிலையில் அமலாக்கத்துறையின் கடும் எதிர்ப்பை மீறி, இன்று அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு இடைக்கால ஜாமீன் வழங்கி உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது. கடைசிக் கட்டத் தேர்தல் நடைபெறும் ஜூன் 1-ம் தேதி வரை அவருக்கு இடைக்கால ஜாமீன் வழங்கிய உச்ச நீதிமன்றம், ஜூன் 2ம்தேதி சரண் அடைய வேண்டும் என்று அறிவித்துள்ளது.
அதேநேரம் தேர்தல் பிரசாரங்களில் ஈடுபட அனுமதி வழங்கியுள்ள உச்ச நீதிமன்றம், முதல்வராக அலுவல் பணிகளை மேற்கொள்ளக்கூடாது என்று உச்ச நீதிமன்றம் நிபந்தனை விதித்திருக்கிறது. இந்த வழக்கு சம்பந்தமாக எதுவும் வெளியில் பேசக்கூடாது.சாட்சிகளை ஆதாரங்களை கலைக்கக்கூடாது என்று கூறியுள்ளது.
2022 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் அரவிந்த் கெஜ்ரிவால் மீது அமலாக்கத்துறை வழக்குப்பதிவு செய்து உள்ளது. ஒன்றரை ஆண்டுகளாக ஏன் அவரை கைது செய்யவில்லை? தேர்தலுக்கு முன்போ அல்லது தேர்தல் முடிந்த பிறகு கூட கைது செய்திருக்கலாம். தேர்தல் நேரத்தில் கைது செய்ததால் என்ன மாற்றம் வந்துவிடப் போகிறது? என்று நீதிபதிகள் எழுப்பிய கேள்விதான் இந்த வழக்கில் கெஜ்ரிவாலுக்கு இடைக்கால ஜாமீன் கிடைக்க காரணமாகி உள்ளது.












Click it and Unblock the Notifications