காங்கிரசுடன் கூட்டணி கிடையாது.. டெல்லி சட்டசபை தேர்தலில் ஆம்ஆத்மி தனித்து போட்டி - கெஜ்ரிவால்
டெல்லி: 2025ம் ஆண்டு தொடக்கத்தில் நடைபெற உள்ள டெல்லி சட்டசபை தேர்தலில் ஆம்ஆத்மி கட்சி யாருடன் கூட்டணி வைக்காது. தனித்தே தேர்தலை சந்திக்க உள்ளது என்று அந்த கட்சியின் ஒருங்கிணைப்பாளர் அரவிந்த் கெஜ்ரிவால் அறிவித்துள்ளது. ஆம்ஆத்மி கட்சி தற்போது ‛இந்தியா' கூட்டணியில் உள்ள நிலையில் இதன்மூலம் காங்கிரஸ் கட்சிக்கு அதிர்ச்சி வைத்தியம் அளித்துள்ளார்.
டெல்லியில் ஆம்ஆத்மி கட்சியின் ஆட்சி நடக்கிறது. டெல்லி புதிய மதுபான கொள்கை வழக்கில் அரவிந்த் கெஜ்ரிவால் அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்டார். அந்த வழக்கில் அவருக்கு ஜாமீன் வழங்கினாலும் முதல்வர் அலுவலகம் செல்லக்கூடாது என்ற நிபந்தனை விதிக்கப்பட்டது.

இதையடுத்து கெஜ்ரிவால் தனது முதல்வர் பதவியை ராஜினாமா செய்தார். தற்போது டெல்லி முதல்வராக ஆம்ஆத்மி கட்சியின் அதிஷி செயல்பட்டு வருகிறார். விரைவில் டெல்லி சட்டசபைக்கு தேர்தல் நடைபெற உள்ளது. அடுத்த ஆண்டு தொடக்கத்தில் அதாவது பிப்ரவரி மாதம் டெல்லி சட்டசபைக்கு வாக்குப்பதிவு நடக்கலாம்.
இந்நிலையில் தான் டெல்லியில் அரவிந்த் கெஜ்ரிவால் கட்சியை பலப்படுத்தும் பணியில் ஈடுபட்டு வருகிறார். தற்போது அவர் பாதயாத்திரை சென்று வருகிறார். இந்நிலையில் தான் இன்று டெல்லியில் பத்திரிகையாளர்களை அரவிந்த் கெஜ்ரிவால் சந்தித்தார். அப்போது அவரிடம் டெல்லி சட்டசபை தேர்தல் கூட்டணி பற்றி கேள்வி எழுப்பபட்டது. அதற்கு டெல்லி சட்டசபை தேர்தலில் ஆம்ஆத்மி கட்சி தனித்து போட்டியிடும் என்று பதிலளித்துள்ளார்.
இதுதொடர்பாக அரவிந்த் கெஜ்ரிவால், ‛‛ டெல்லி சட்டசபை தேர்தலில் ஆம்ஆத்மி கட்சி கூட்டணி அமைத்து போட்டியிடாது. தனித்தே போட்டியிட உள்ளது'' என்று தெரிவித்தார். ஆம்ஆத்மி கட்சி தற்போது எதிர்க்கட்சிகளின் ‛இந்தியா' கூட்டணியில் உள்ளது. இதனால் வரும் தேர்தலில் காங்கிரஸ், ஆம்ஆத்மி கட்சி இணைந்து டெல்லியில் களமிறங்கும் என்று எதிர்பார்க்கப்பட்டது.
ஏனென்றால் கடந்த லோக்சபா தேர்தலில் டெல்லியில் ஆம்ஆத்மி மற்றும் காங்கிரஸ் இணைந்து தான் போட்டியிட்டது. மீண்டும் சட்டசபை தேர்தலில் அப்படி நடக்கும் என்று காங்கிரஸ் நினைத்தது. ஆனால் அரவிந்த் கெஜ்ரிவால் வரும் டெல்லி சட்டசபை தேர்தலில் ஆம்ஆத்மி கட்சி தனித்து தான் போட்டியிடும் என்று அறிவித்து காங்கிரஸ் கட்சிக்கு அதிர்ச்சி வைத்தியம் அளித்துள்ளார்.
அதேவேளையில் நாம் இன்னொரு விஷயத்தை மறந்து விடக்கூடாது. அதாவது கூட்டணியை விட்டு காங்கிரஸ் கட்சியை ஆம்ஆத்மி கழற்றி விடுவது இது முதல் முறையல்ல. சமீபத்தில் நடந்து முடிந்த லோக்சபா தேர்தலில் பஞ்சாப்பில் ஆம்ஆத்மி ஆளும் கட்சியாக இருப்பதால் அங்கு காங்கிரஸ் கட்சியை கழற்றிவிட்டு அந்த கட்சி தனித்தே களம் கண்டது.
டெல்லியை பொறுத்தவரை மொத்தம் 70 சட்டசபை தொகுதிகள் உள்ளன. கடந்த 2020 சட்டசபை தேர்தலில் ஆம்ஆத்மி கட்சி 62 இடங்களில் வென்றது. பாஜக 8 இடங்களில் வாகை சூடியது. காங்கிரஸ் கட்சி ஒரு இடத்தில் கூட வெல்லவில்லை. தற்போதைய நிலவரப்படி ஆம்ஆத்மி கட்சிக்கு 58 எம்எல்ஏக்களும், பாஜகவுக்கு 7 எம்எல்ஏக்களும் உள்ளனர். 5 எம்எல்ஏக்களின் இடம் காலியாக உள்ளது.
டெல்லிக்கு கடந்த 2020 பிப்ரவரி மாதம் 8 ம் தேதி தேர்தல் நடந்தது. அதேபோல் புதிதாய் பிறக்கும் ஆண்டில் மீண்டும் பிப்ரவரி மாதம் தேர்தல் நடத்தப்பட வாய்ப்புள்ளது என்பது இங்கே குறிப்பிடத்தக்கது.











Click it and Unblock the Notifications