வட இந்தியாவை புரட்டிப் போடும் கனமழை.. தென் மாநிலங்களுக்கு வந்த திடீர் அலர்ட்! என்ன பாருங்க
டெல்லி: வட இந்தியாவில் கனமழை வெளுத்து வாங்கி வரும் நிலையில், இதில் ஏற்பட்ட வெள்ளம், மண் சரிவு உள்ளிட்ட காரணங்களால் கடந்த இரண்டு நாட்களில் 12 பேர் உயிரிழந்துள்ளனர்.
இந்தியாவில் உள்ள பல வடமாநிலங்களில் கடந்த சில நாட்களாகக் கனமழை வெளுத்து வாங்கி வருகிறது. டெல்லி, பஞ்சாப், ராஜஸ்தான் எனப் பல பகுதிகளில் கனமழை கொட்டி வருகிறது. இதனால் மண் சரிவு, வெள்ளமும் பல இடங்களில் ஏற்பட்டுள்ளது.
கடந்த இரு நாட்களாகப் பல வட மாநிலங்களில் பெய்யும் கனமழை காரணமாகக் கடுமையான வெள்ளம் ஏற்பட்டுள்ளது. இதனால் அங்கே பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை மிகக் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளது.

வெள்ளம்: இப்படி வட இந்தியாவில் பல இடங்களில் கொட்டி தீர்க்கும் கனமழையால் கடந்த இரண்டு நாட்களில் மட்டும் பல இடங்களில் 12 பேர் உயிரிழந்துள்ளனர். அடுத்த இரண்டு நாட்களுக்கு மழை தொடரும் என்று வானிலை மையம் தெரிவித்துள்ளதால் மக்கள் அச்சத்தில் இருக்கிறார்கள். டெல்லி, ஹரியானா, இமாச்சலப் பிரதேசம், உத்தரகண்ட், ராஜஸ்தான், பஞ்சாப் மற்றும் காஷ்மீர் ஆகிய மாநிலங்களில் கனமழை முதல் மிகக் கனமழை வரை பெய்யும் என இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
வட இந்தியாவில் ஏற்பட்டுள்ள திடீர் வானிலை மாற்றத்தால் அங்கே பல இடங்களில் கனமழை கொட்டி வருகிறது. இதனால் டெல்லி உட்பட பல நகரங்களில் கனமழை பெய்துள்ளது. கனமழையால் டெல்லியில் பல பகுதிகளில் தண்ணீர் தேங்கியதால் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. டெல்லியில் 24 மணி நேரத்தில் 153 மிமீ மழைப் பதிவாகியுள்ளது. இது 1982க்கு பின் அங்கே ஜூலை மாதத்தில் பெய்த அதிகபட்ச மழை இதுவாகும்.

மழை இருக்கும்: டெல்லி மட்டுமின்றி அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளிலும் இன்றும் கனமழை பெய்தது. குருகிராமின் பல பகுதிகளிலும் தண்ணீர் தேங்கியது நிலையில், அங்கே மின் சேவையும் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளது. மேலும், நாளையும் டெல்லியில் மிதமான மழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ள நிலையில், அங்கே பள்ளிகளுக்கு விடுறை அளித்து டெல்லி அரசு உத்தரவிட்டுள்ளது. அங்கே வரும் ஜூலை 15 வரை லேசான மழை இருக்கும் என வானிலை மையம் தெரிவித்துள்ளது.
கனமழையால் இதுவரை அங்கே 12 பேர் உயிரிழந்துள்ளனர்.. டெல்லியில் 58 வயது பெண் ஒருவர், அவரது வீட்டின் கூரை இடிந்து விழுந்ததில் உயிரிழந்தார். அதேபோல ராஜஸ்தானில் மழை தொடர்பான சம்பவங்களில் 4 பேர் உயிரிழந்தனர். உத்தரப்பிரதேச மாநிலம் முசாபர்நகரில் இன்று அதிகாலை பெய்த கனமழையால் வீடு இடிந்து விழுந்ததில் ஒரு பெண்ணும் அவரது ஆறு வயது மகளும் உயிரிழந்தனர்.
உயிரிழப்பு: ஹிமாச்சல பிரதேசத்தின் சிம்லாவில் இதுபோல சுவர் இடிந்து விழுந்ததில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 3 பேர் உயிரிழந்தனர். ஜம்மு காஷ்மீர் மாநிலம் பூஞ்ச் மாவட்டத்தில் நேற்று ஏற்பட்ட திடீர் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்ட இரண்டு ராணுவ வீரர்கள் உயிரிழந்தனர். இப்படி பல்வேறு சம்பவங்களில் பலர் உயிரிழந்துள்ளனர்.
கனமழை கொட்டும் நிலையில், ராஜஸ்தானின் ராஜ்சமந்த், ஜலோர், பாலி, அஜ்மீர், அல்வார், பன்ஸ்வாரா, பரத்பூர், பில்வாரா, பூண்டி, சித்தோர்கர், தௌசா, துல்பூர், ஜெய்ப்பூர் மற்றும் கோட்டா உள்ளிட்ட 9 மாவட்டங்களில் ரெட் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது. மேலும், தொடர் மழை மற்றும் நிலச்சரிவு காரணமாக அமர்நாத் யாத்திரை மூன்றாவது நாளாக நிறுத்தப்பட்டுள்ளது. ஸ்ரீநகர்-ஜம்மு நெடுஞ்சாலையில் சாலையின் நடுவே பள்ளம் ஏற்பட்ட நிலையில், அங்கே சுமார் 3,000 வாகனங்கள் அணி வகுத்து நிற்கிறது.

தென் மாநிலங்கள்: அதேபோல தென் மாநிலங்களைப் பொறுத்தவரைக் கேரளா மற்றும் கர்நாடகாவின் பல பகுதிகளில் இடைவிடாத மழை பெய்து வருகிறது. கேரளாவின் கோழிக்கோடு, வயநாடு, கண்ணூர் மற்றும் காசர்கோடு ஆகிய நான்கு மாவட்டங்களுக்கு மஞ்சள் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது. ஹிமாச்சல பிரதேசத்தில் சிம்லா, சம்பா, சோலன் உள்ளிட்ட பல பகுதிகளில் ஏற்பட்ட வெள்ளம் காரணமாக அங்கே ரெட் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது.
இப்படிக் கொட்டி தீர்க்கும் கனமழை வட இந்தியாவில் பல இடங்களை அப்படியே புரட்டிப் பொட்டுள்ளது. இதனால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ள நிலையில், சில நாட்களுக்கு இதே நிலையே தொடரும் என வானிலை மையம் தெரிவித்துள்ளது.












Click it and Unblock the Notifications